தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு, வணக்கம்.
காலம் உங்கள் அரசியல் வாழ்வில் வெற்றியையும் தோல்வியையும் தந்துள்ளது. அதிமுக என்ற இயக்கத்தால் வளர்ந்து, அந்த இயக்கத்தின் தலைவர் ஜெயலலிதா மறைந்தவுடன், இந்தக் கட்சியில் இருப்பது நம்முடைய அரசியல் வளர்ச்சிக்கு உதவாது என்று ‘அற்றக் குளத்து அறுநீர் பறவையாய்… பறந்து பாஜகவில் இணைந்தீர்கள். உங்களை பாஜகவும் வாரி அணைத்து கொண்டது. உங்களுக்கு மாநிலத் தலைவர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றது. சட்டமன்றத்தில் வானதிசீனிவாசன் இருக்க உங்களுக்குச் சட்டமன்றக்குழுத் தலைவர் பதவியும் கிடைத்துள்ளது. முன்னாள் அதிமுகக்கார் என்ற வகையில் மக்களவையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக – பாஜகவைச் சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டும் என்று நீங்கள் எடுத்த முயற்சி வெற்றியும் பெற்றுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் இயங்கி வரும் தவெக பாஜக கூட்டணியில் இணையவேண்டும் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களான தமிழிசை, வானதி போன்றவர்களோடு நீங்களும் வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள். விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் உங்களின் ஒன்றிய அரசின் கையில் உள்ள தணிக்கைத் துறையால் வெளியிடப்படாமல் உள்ள நிலை தொடர்கின்றது. நடிகர் விஜய் அவர்களை பாஜக மிரட்டிப் பார்க்கிறது. அச்சுறுத்துகின்றது என்ற விமர்சனம் பொதுவெளியில் உள்ளது எனபதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். திமுகவைத் தோற்கடிக்க நம்மை கொள்கை எதிரி என்பவரையும் வெற்றிப் பாக்கு வைத்து கூட்டணிக்கு அழைக்கும் உங்களின் செயல் விமர்ச்னத்திற்கு அப்பாற்பட்டதா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசும் போது, “அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கை வாங்கி காட்டுங்கள்” என விஜய் பேசினார்.
இதற்கு பதிலளித்த நீங்கள், “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும்” என்று கூறியது சமூக ஊடகங்களில் உங்களுக்கு கடுமையான எதிர்வினைகள் எழுப்பப்பட்டது.

நடிகர் விஜய்யை விமர்சனம் செய்கிறேன் என்று போகிறபோக்கில் நடிகை திரிஷாவின் ஒழுக்கம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். உங்களின் கடந்த கால ஒழுங்கீனங்களைப் பட்டியலிட்டு அறம் சாவித்திரி கண்ணன் எழுதிய கட்டுரையால் உங்களின் மானம் காற்றில் பறந்த கதையை அறிவீர்கள். உங்களின் இந்த இழிவான அரசியலை, அனைத்து அரசியல் கட்சியில் உள்ள பெண்களும் கடுமையான கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். உங்கள் கட்சியைச் சார்ந்த அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசனும் உங்களின் இழிவு அரசியலைக் கண்டித்து வருத்தம் தெரிவிக்க கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து “என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என்று பொத்தம் பொதுவாக வருத்தம் தெரிவிப்பதுபோல் பேசியதைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவும் தன் வழக்கறிஞர் மூலம் நயினார் நாகேந்திரன் என்னைத் தனிப்பட்ட முறையில் இழிவு செய்துள்ளார் என்றும் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒழுக்கம், கட்டுப்பாடுகள் பெண்களுக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்ற இந்துத்துவ ஆணாதிக்க உணர்வோடு நீங்கள் பேசியதன் மூலம் பெண்களின் தனிமனித உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியுள்ளீர்கள். காலம் இன்னும் கடந்துவிடவில்லை உண்மையான வருத்தம் தெரிவித்து இழிவு செய்யும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
தமிழன்புடன் – ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.