திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்களுக்கான முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலம் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு நாகமங்கலத்தில் உள்ள கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் சே ச அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.
செப்பர்டு விரிவாக்கத்துறை இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச தலைமை தாங்கினார். உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் தொடக்க உரையாற்றினார். செப்பர்டு விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்றும் இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சியில் முருங்கைக்கீரை, முருங்கை பூ, முருங்கைக் காய் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும் இக்கீரையின் நோய் எதிர்ப்பாற்றல் பற்றியும் சிறப்பு விருந்தினர் பகிர்ந்து கொண்டார். மேலும், முருங்கையை மதிப்பு கூட்டுவது, முருங்கையின் வகைகள், முருங்கைக்கீரை உலர வைத்து பொடி செய்வது, முருங்கை பவுடர், முருங்கை டிப் டீ, முருங்கை சோப், முருங்கை ஆயில், முருங்கை சூப் தயாரிக்கும் முறை பற்றியும் அவற்றை சந்தை படுத்தும் முறை பற்றியும் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது.
முன்னதாக, செப்பர்டு விரிவாக்கத்துறையின் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு சுதாகர் வரவேற்றார். முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை நன்றி கூறினார்.
கிராமங்களில் பணி செய்யும் தேர்தெடுக்கப்பட்ட சுகாதார குழு மாணாக்கர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் முடிவில் மாணாக்கர்களுக்கு அவர்கள் தயாரித்த முருங்கை சூப் பாக்கெட் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் செப்பர்டு விரிவாக்கத்துறை இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் செய்திருந்தார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.