ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம் பேசி … ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீராமானுஜர் !
வைணவச் சமயத்தில் பெரும் புரட்சி செய்து ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்ற உயர்ந்த தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர் ஸ்ரீராமானுஜர். ஆதிசங்கரர் தோற்றுவித்த அத்வைதக் கோட்பாட்டில் இருந்து மாறுபட்டு விசிஷ்டாத் வைதம் என்ற கோட்பாட்டை நிறுவியவர். உலகில் தோன்றிய அனைத்து உயிர்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவருக்கு எல்லா உயிர்களும் ஒன்று தான்.
இறைவன் பரமாத்மா, உயிர்கள் ஜீவாத்மா. பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு பரமாத்மா சித்து, சித்து அறிவுடையது. ஜீவாத்மா அசித்து, அசித்து அறிவற்றது. அறிவுடையது அறிவற்றதைச் சரீரமாக்கிக் கொள்கிறது. இதுவே விசிஷ்டாதுவைதம் என்ற தத்துவத்தின் அடிப்படைக் கருத்து.

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் கி.பி 1017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் சோமையாஜு தீட்சிதர், காந்திமதி இணையருக்கு மகனாக அவதரித்தவர். காஞ்சிக்கு அருகில் உள்ள திருப்புட்குழி எனும் இடத்தில் யாதவப்பிரகாசர் எனும் ஆச்சாரியாரிடம் வேதங்கள் பயின்றார். அவர் அத்வைதக் கருத்துகளில் நாட்டம் உள்ளவர். வேதங்களுக்கு அவர் கூறும் விளக்கங்கள் இராமானுஜருக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, சில சமயங்களில் மறுத்துரைத்தார். இதனால் இராமானுஜர் மீது உள்ளூரக் கோபம் கொண்ட யாதவப்பிரகாசர் அவரைக் காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் தள்ளிக் கொல்லத் திட்டமிட்டார். இதனைத் தன் உறவினரான கோவிந்தன் என்பவர் மூலம் தெரிந்து கொண்ட ராமானுஜர் தப்பித்துக் காஞ்சி வந்தடைந்தார்.
காஞ்சி வந்த ராமானுஜர் காஞ்சி வரதராஜப்பெருமாளுக்கு விசிறிக் கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பி என்பவரிடம் தன்னைச் சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். திருக்கச்சி நம்பி வைசியக் குலத்தைச் சார்ந்தவர். ராமானுஜர் வைஷ்ணவர் திருக்கச்சி நம்பி “நீங்கள் மறுபடியும் யாதவப்பிரகாசரிடமே சீடராக இருங்கள்” என்று அனுப்பி வைத்தார். மனம் ஒப்பாமல், மீண்டும் யாதவப்பிரகாசரிடம் வேதம் பயின்றார். வழக்கம்போல் யாதவப்பிரகாசர் வேதங்களின் சாரத்தைத் தவறுதலாகக் கற்பிக்கப் பொறுக்க முடியாத ராமானுஜர் திருத்தி சொன்னார். வெகுண்ட யாதவப்பிரகாசர் “நீ என்ன குருவை மிஞ்சிய சீடனா? உனக்கு எங்குச் சௌகரியம் உண்டோ அங்கே போய்விடு” என்று சொல்ல ராமானுஜர் திருக்கச்சி நம்பியை அடைந்து அவரது சீடராகிறார்.
பின்னர்த் தமிழ்மறை நூலான நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்திற்கு உரை எழுதிய, நாத முனிகள் வாரிசான ஆளவந்தார் எனும் ஆச்சாரியார் அழைப்பை ஏற்றுத் திருவரங்கம் வருகை தந்த ராமானுஜர் ஆளவந்தார் மறைந்ததால் ஆச்சார்யப் பொறுப்பை ஏற்று திருவரங்கம் கோவில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தி, கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி, கோவில் உடைமைகளைப் பாதுகாக்கிறார். இதனால் உடையவர் எனும் சிறப்புப் பெயர் பெறுகிறார்.
வைணவச் சமயத்தை உலகெங்கும் பரப்பிய ஸ்ரீராமானுஜர். திருவரங்கத்திலேயே பரமபதம் அடைகிறார். திருவரங்கனின் திருவுளப்படி ஆலயத்திற்குள்ளேயே பள்ளிப் படுத்தப்படுகிறார். 890 ஆண்டுகளுக்கு மேலாக “தானானத்திருமேனியாய்” பக்தர்களுக்கு அருள் செய்துகொண்டிருக்கிறார்.
120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர் ஆன்மீகத்தில் செய்த புரட்சி ஆழ்வார்களின் பாசுரங்களைக் கோவில்களில் தமிழில் பாட வழி வகுத்தார். தமிழ் மறையான திவ்யப்பிரபந்தத்தைத் தழைக்கச்செய்தார்.
ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல்களை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருந்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதிமதப் பேதம் இன்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே நடைமுறைப்படுத்தினார்.
ஆதி திராவிடர்களை “திருக்குலத்தார்” எனப் புகழ்ந்து அவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து பூணூல் அணிவித்து அந்தணர்களாக மாற்றி ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்னும் உயர்ந்த தத்துவத்தினை உலகறியச்செய்தார். தன் கொள்கைக்கு மாறாகச் சாதியப் பேதம் பார்த்த தன் மனைவியை வாழ்நாள் முழுதும் தள்ளி வைத்துச் சன்னியாசம் மேற்கொண்டார்.
காரணம் -1
திருக்கச்சி நம்பி இவர் இல்லத்தில் உணவருந்திச் சென்ற பின் அவர் வைசியக் குலத்தவர் என்பதால், இவர் மனைவி அவர் அமர்ந்த இடத்தையும், சாப்பிட்ட இலையையும் தீட்டு என்று சொல்லத் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்ததை இவர் ஏற்கவில்லை.
காரணம் – 2
பசியோடு வந்த ஒரு வறியவருக்கு உணவளிக்குமாறு ராமானுஜர் கூறியபோது உணவு இல்லை என்று பொய் கூறியது.
காரணம் -3
பெரிய நம்பி என்னும் ஆச்சாரியாரின் மனைவியிடம் தண்ணீர் பானை விவகாரத்தில் (மோதிக்கொண்டது அபச்சாரம்) சண்டையிட்டுக் கடும் சொற்கள் பேசியது.
திருக்கோட்டியூர் நம்பி எனும் ஆச்சார்யாரிடம் 17 முறை சென்று எட்டெழுத்து மந்திரத்தின் உட்பொருளைக் கேட்க முடியாது 18 ஆம் முறை சென்று கேட்ட பொழுது உட்பொருளை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி “இதை ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத ஒருவருக்கு உபதேசம் செய்யக்கூடாது அப்படிச் செய்தால் நீ நரகத்திற்குப் போவாய்” என்ற எச்சரித்தார். அந்த எச்சரிக்கையை மீறித் திருக்கோட்டியூர் கோபுரத்தில் ஏறிச் சாதி சமயமற்று எல்லோரும் வாருங்கள் என்று அழைத்து ஓம் நமோ நாராயணாய நம எனும் எட்டெழுத்து மந்திரத்தின் உட்பொருளை அனைவருக்கும் உபதேசித்தார். கோபம் கொண்ட திருக்கோட்டியூர் நம்பியிடம் “மந்திரம் கேட்ட அனைவரும் சொர்க்கம் செல்ல நான் மட்டும் நரகம் செல்வது எனக்கு ஏற்புடையதே” என்று சொல்ல அகமகிழ்ந்த திருக்கோட்டியூர் நம்பி “நீ தான் நான் வணங்கும் எம்பெருமான்” என்று சொல்லிக் கட்டி அணைத்து மகிழ்ந்தார்.
திருவரங்கத்தில் ஒருமுறை ஸ்ரீ வைஷ்ணவர்கள் மற்ற சமூகத்தினரால் தீட்டுபட்டுவிட்டது என்று முறையிட்டனர். வெகுண்டெழுந்த ராமானுஜர் தாழ்ந்த குலம் என்று நீங்கள் சொல்கின்ற திருப்பாணாழ்வார் “அமலன் ஆதிபிரான்” எனத் தொடங்கும் தமிழ்ப்பாசுரம் பாடி அரங்கனுக்குள் ஐக்கியமாகி உள்ளார். எனவே, நீங்கள் அரங்கனைத் தொட்டால் அது ஆழ்வாரைத் தொடுவதற்குச் சமம் ஆகையால் அரங்கனைத் தொடாதீர்கள் வெளியே செல்லுங்கள் என உத்திரவிட்டார். இதனால் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
மேலும், பல சம்பவங்களில் சாதி, மத, சமயப் பேதங்களைக் கண்டித்து இறைவன் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய ஸ்ரீராமானுஜரின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோம். நன்றி.
(இன்று 4.4.26 1009ஆவது பிறந்தநாள்)
– பன்முக கலைஞர் இலால்குடி முருகானந்தம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.