திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி ..அமைச்சர் நேரில் ஆறுதல்…
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்குச் சென்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் காமராஜ் (39). இவர் கடந்த ஒரு ஆண்டாக மத்திய பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்று காமராஜ், அவரது மனைவி கார்குழலி (38), மகன்கள் தமிழ்வேந்தன் (5), புவிந்திரன் (10) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த உறவினர் சௌபாக்கியம், அவரது இரண்டு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணை பகுதியில் சுற்றுலா சென்றனர். சுமார் 40 பேருடன் சென்ற அந்தப் படகு, எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழப்பு விவரங்கள்
இந்தக் கோர விபத்தில் காமராஜின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்:காமராஜ் கார்குழலி (மனைவி) தமிழ்வேந்தன் (இளைய மகன்) சௌபாக்கியம் (உறவினர்) மயூரான் (உறவினரின் மகன்) அதிர்ஷ்டவசமாக, காமராஜின் மூத்த மகன் புவிந்திரன் மற்றும் சௌபாக்கியத்தின் மகள் இனியா ஆகிய இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணிகள்
தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அமைச்சர் நேரில் ஆறுதல்
தங்கள் தொகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவல்பட்டில் உள்ள காமராஜின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்குள்ள உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் அமைச்சர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.