போராளி வழக்கறிஞர் உ.நிர்மலாராணி உடல் சடங்குகளின்றி அடக்கம்
பொதுவுடமை இயக்கப் போராளிகள் பாப்பா – உமாநாத் இணையரின் இளைய மகள் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி உடல்நலக் குறைவால் கடந்த 17-ஆம் நாள் இரவு 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். உ.நிர்மலாராணி 1984ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் விகடன் மாணவ நிருபராகவும் இருந்தார்.
அப்போது திருச்சியில் பிரேமானந்தசாமி தன் ஆசிரமத்தில் படித்துவந்த சிறுமிகளுக்குப் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை அம்பலப்படுத்தினார். இவருடைய எழுத்தினால் பிரேமானந்தசாமி கைது செய்யப்பட்டார். தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை அவர் பிணையில் வரமுடியாத அளவுக்கு வழக்கு விரைவாக நடைபெற்றது. தீர்ப்பில் 2 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இளம் வயதில் SFI. DYFI மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்களின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.
சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சட்டக் கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவருடைய வாழ்க்கைத் துணைவர் இராஜ்குமார் அவர்களும் ஒரு வழக்கறிஞர். திருச்சி தில்லைநகர் 3ஆவது குறுக்கு சாலையின் விரிவாக்கப் பகுதியில் வாழ்ந்து வந்தார்.

பட்டியல், பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமை வழக்குகள் ஒவ்வொன்றிலும் நமக்கு சட்ட வழிகாட்டுதல்களை கொடுத்து வருபவர்.
உத்தப்புரம் வழக்கில் காவல் துறையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றத்தில் வாதாடி 1 கோடி நிவாரணத்தை பெற்று கொடுத்தவர்.
உத்தப்புரத்தில் பட்டியல் சமூக மக்களின் முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமைக்காக இன்றும் மதுரை உயர்நீதி மன்றத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் இணையர் திலீப்குமார் சார்பாக தொடுத்த வழக்கில் தன் வாதத்திறமையால் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கின்ற தம்பதிகளை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை நீதிமன்ற உத்தரவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்றுத் தந்தவர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தமிழக அரசிடம் சமர்ப்பித்த – பட்டியல், பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை முறையாக செயல்படுத்தவதற்கான சிறப்பு சட்டத்தை தன் வழக்கறிஞர்கள் குழுவுடன் தயாரித்து கொடுத்தவர்.
இடதுசாரி சமூக சிந்தனைக் கொண்ட மறைந்த நிர்மலாராணி அவர்களின் உடலுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, இன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சிபிஎம் ஸ்ரீதர், சிபிஜ செல்வராஜ், இப்ராஹீம், திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர், மாநில பொறுப்பாளர் மிசா சாக்ரடீஸ், மாவட்ட செயலாளர் சந்திரன் (எ) எமக்குட்டி, திருச்சி மாவட்ட திராவிடர் கழக மாணவர் அணி செயலாளர் அறிவுச்சுடர் மற்றும் ஜனநாயக மாதர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த நிர்மலாரானி அவர்களின் மூத்த சகோதரியும் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் உ.வாசுகியும் மறைந்த தன் சகோதரிக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
18.03.2026ஆம் நாள் மாலை 3.00 மணியளவில் தில்லைநகரிலிருந்து நிர்மலாராணியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. துவாக்குடி – கலைஞர் பேருந்து முனையம் செல்லும் பைபாஸ் சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டியில் உள்ள வாழ்க்கைத் துணைவர் இராஜ்குமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் 4.00 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு எந்த சடங்குகளும் செய்யப்படவில்லை. கூடியிருந்த அனைவரும் தங்களின் அஞ்சலி செலுத்தியும் வீரவணக்கத்தையும் செலுத்தினர்.
ஜனநாயக மாதர் சங்கத்தைச் சார்ந்தவர்கள்…. வீரவணக்கம்… வீரவணக்கம் தோழர் நிர்மலாராணிக்கு வீரவணக்கம்.. என்ற முழக்கத்தை எழுப்பி தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் இயக்கத்தைச் சார்ந்த பலரும் கலந்துகொண்டனர். பொதுவுடைமை இயக்கப் போராளிகள் பாப்பா – உமாநாத் இணையர் பெற்றெடுத்த பிள்ளை ஒரு போராளியாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் என்பது பொதுவுடமை இயக்கத்திற்குப் பெருமையே.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.