நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !
ஏ.ஜி.எஸ்ஸின் ‘டிராகன்’ டிரெய்லர் ரிலீஸ் & பிரஸ்மீட் நியூஸ்!
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ படத்தின் டிரெய்லர் சோஷியல் மீடியாவில் சில நாட்கள் முன்பு ரிலீஸானது.
‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி .ஜே .சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.
படத்தின் முன்னோட்டம் வெளியானதை தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு பிப்ரவரி 10- ஆம் தேதி நடந்தது. இதில் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநர்- நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்களை வரவேற்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் பேசிய பிறகு அர்ச்சனா கல்பாத்தி பேசியது ”எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘திருட்டுப்பயலே’ படத்திலிருந்து தற்போது உருவாகி இருக்கும் ‘டிராகன்’ வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து ஊடகங்களுக்கும் எங்களின் நன்றி.
‘டிராகன்’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். என்னுடைய ஃபேவரைட்டான படமும் கூட. இந்தப் பயணம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதீப் ரங்கநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறோம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் முதல் முறையாக பணியாற்றி இருக்கிறோம். நல்லதொரு உள்ளுணர்வுடன் டிராகனை தயாரித்திருக்கிறோம். படத்தில் நிறைய நல்ல அம்சங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
”தமிழில் இது என்னுடைய இரண்டாவது படம். ‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்கு ஊடகங்கள் வழங்கிய ஆதரவு காரணமாக வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தில் சமூக பொறுப்புடன் கூடிய விஷயங்கள் இருந்தது போலவே, இந்த டிராகனிலும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம்.
நான் சொன்ன கதையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா மேடம் ஆகியோர் வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார்கள். நான் சொல்ல நினைத்ததை திரையில் உருவாக்குவதற்கு ஆதரவளித்த அவர்களுக்கு நன்றி.

படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனும் நானும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தப் படத்திற்கான அடித்தளத்தை பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் பேசி இருக்கிறோம். அதன் பிறகு அது குறித்து நிறைய கனவு கண்டோம். இன்று அதனை திரையில் கொண்டு வந்திருக்கிறோம். இதற்காக நாங்கள் எங்களை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
என்னுடைய நண்பனை இந்தப்படத்தில் நான் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ எனும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்த நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதனைத் தான் நான் இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இருவரும் நண்பர்கள் என்ற எல்லையை கடந்து தொழில் ரீதியாக நேர்த்தியாக உழைத்திருக்கிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்”.
இயக்குநரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன்
“ஊடகங்களும் மக்களும் எனக்கு வழங்கியிருக்கும் இந்த இடத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதற்காக ஊடகத்தினருக்கும் மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் என்னை கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அஷ்வத்தும் நானும் பத்தாண்டு கால நண்பர்கள் என்றாலும், நட்பையும், தொழிலையும் தனித்தனியாக பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு …! வேலை என்றால் வேலை..! இதில் எந்த குறுக்கீடும் இருக்காது. இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது. தொடர்ந்து அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்”.
— மதுரை மாறன்.