கங்கை அமரனிடம் மன்னிப்புக் கேட்ட பயில்வான் ரங்கநாதன்!
‘டிரம்ஸ் ஜெர்ரி எண்டெர்டெய்ன்மெண்ட்’ சார்பில் கிளாடி ஜெராடு தயாரித்திருக்கும் ’உறவுகள்’ என்ற தலைப்பில் ‘உயிரிணையே’ என்ற தனி இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் இசையமைப்பாளர் & இயக்குனர் கங்கை அமரன், மற்றும் மியூசிக் டைரக்டர் சதா சுதர்சனம், கண்ணன், பாடகி தவசீலி தன்ராஜ், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசை ஆல்பத்தை வெளியிட்டு கங்கை அமரன் பேசும் போது, “கிளாடி ஜெராடுவின் நல்ல எண்ணமும் சிந்தனையும் தான் இந்த ஆல்பம். அருமையான சமூக உறவுகளை ஏ.ஐ.டெக்னாலஜி மூலம் நடிகர்-நடிகைகளை நடிக்க வைத்து ஒரு கதையாகவும் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளார். எங்க அண்ணன் இசைஞானி இளையராஜாவின் வாசிப்பில் வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களின் குழந்தைகளையும் அண்ணனிடம் தான் சாரீரம் கற்றுக் கொள்ள அனுப்பினோம். அப்போது மட்டுமல்ல, இப்போதும் கூட முழுப்பாடலையும் லைவ் ரிகார்டிங்கில் தான் அண்ணன் பாடுவார், பாடகர்களையும் பாடகிகளையும் பாடவைப்பார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய குருவிடம் வளர்ந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
ஆனால் இப்பவெல்லாம் ஒவ்வொரு வரியாக, வார்த்தையாகப் பாடிவிட்டு ஏ.ஐ.டெக்னாலஜியால எல்லாத்தையும் ஜாயிண்ட் பண்ணிக் கொள்கிறார்கள். பாட்டைக்கூட இதே மாதிரி எழுதிவிட்டு நம்ம பெயரை டைட்டிலில் போட்டா நல்லாருக்குமா?
இந்த ஏஐ டெக்னாலஜியில் தொடர்ந்து வேலை செய்யப் பழகிட்டோம்னா…அப்புறம் நம்ம மூளை வேலை செய்யாம மழுங்கிப் போயிரும். எனவே இப்ப இருக்கும் குழந்தைகளுகளின் மூளைக்கு வேலை கொடுங்க. அதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது, பாதுகாப்பானது. பெற்றோர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள் இது.
நாங்கள் இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறோம். எங்களை நேசித்து வாழ்த்தி கைகோர்த்து அழைத்துப் போங்கள். ஆனால் பயில்வான் ரங்கநாதன் என்பவரோ, எங்க அண்ணன் தனிமையில் இருப்பதாகவும் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்படுவதாகவும் பொய்யாகப் பேசிக்கிட்டிருக்கார். கார்த்திக்ராஜாவும் அவனது குடும்பமும் எங்க அண்ணன் கூட இருக்கிறார்கள். அவன் தான் இசைஞானியை கவனிச்சுக்குறான். இதையெல்லாம் பயில்வான்கிட்ட சொல்லி, “ஏம்பா இசைஞானியைப் பத்தி இல்லாதைதையெல்லாம் பேசிக்கிட்டிருக்க”ன்னு கோபமா கேட்டேன். உடனே அவரும் “சாரிண்ணே எவனோ சொன்னதைக் கேட்டு பேசிட்டேன். மன்னிச்சிருங்கண்ணே, இனிமே இப்படிப் பேசமாட்டேன்னு சொன்னாரு. யூடியூபர்ஸ் விமர்சனம் பண்ணுங்க, விசமத்தனம் பண்ணாதீங்க” என சரமாரியாக பயில்வான் ரங்கநாதனையும் சில சில்லரை யூடியூபர்ஸையும் விளாசினார் கங்கை அமரன்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.