SC ST நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்க வேண்டியது கட்டாயம்
இந்தியர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்று சொல்லும் அரசியலமைப்பு சட்டம், இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது எனவும் தீண்டாமையை கடைபிடிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் தண்டனைக்குறிய குற்றம் எனவும் சொல்கிறது.
இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு தீண்டாமை குற்றங்கள் சட்டம் இயற்றப்பட்டது. பின் இச்சட்டம் 1976ல் (PCR- Protection of Civil Rights) குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் என்று அறியப்பட்டு திருத்தப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 (The Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989) (விதிகள் 1995) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின் 2015இல் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது (திருத்த விதிகள் 2016), இப்படியான சட்டங்களின் வழிகாட்டுதல் படி மாவட்டம் தோறும் தனிச் சிறப்பு நீதிமன்றங்களை (exclusive special courts) நிறுவி, வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கவேண்டும் என்கிறது சட்டம். ஆனால் நமது தமிழ்நாட்டில் இதுவரை 20 மாவட்டங்களில் மட்டும்தான் sc st தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன. மீதமுள்ள 17 மாவட்டங்களில் இல்லை, நீதிமன்றம் இருந்தும் புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நீதிபதிகள் இல்லை என்பதும், அதிலும் குறிப்பாக புதுக்கோட்டையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தனிச்சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியே இல்லை என்பதும் வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகளே பொறுப்பு நீதிகளாக செயல்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. கடந்த 6 ஆண்டுகளில் அதாவது 23/05/2020 முதல் இன்றுவரை வெவ்வேறு நீதிமன்றங்களின் 12 நீதிபதிகள் பொறுப்பு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் வன்கொடுமை நிறைந்த மாவட்டம் என்பது அனைவரும் அறிந்தது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு பதிவுகளின்படி 1999 முதல் 2025 நவம்பர்) மொத்தமாக 1586 SC/ST (POA) ACT வழக்குகள் பதிவாகியிருக்கிறது, ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 489 வழக்குகள் பதிவாகியிருக்கிறது, அதாவது 6 ஆண்டுகளுக்கு முந்தைய 20 ஆண்டுகளின் மொத்த வழக்குகளில் பாதி கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பதிவாகியிருக்கிறது. மேலும் 6 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகளை எடுத்துக் கொண்டோமேயானால் ஆண்டுக்கு 10க்கும் குறைவான Pending trial வழக்குகள் தான் இருக்கின்றன என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன, அதிகமான ஆண்டுகளில் 1 அல்லது 2 மற்றும் 3 என்ற எண்ணிக்கையிலான வழக்குகளே Pending Trial ஆக இருந்து வந்திருக்கின்றன, ஆனால் கடந்த 6 ஆண்டுகள் முறையே 2020ல் 27 வழக்குகளும்,
2021ல் 35 வழக்குகளும், 2022ல் 72 வழக்குகளும், 2023ல் 65 வழக்குகளும் 2024ல் 44 வழக்குகளும், 2025 நவம்பர் வரையில் 48 வழக்குகளும் என பழைய Pending trial வழக்குகளையும் சேர்த்து மொத்தமாக 380 வழக்குகள் Pending Trial வழக்குகளாக உள்ளது, புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் புகார்தரார்களை அழைக்களிப்பதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும் தொடர்கிறது என்பது தனிக்கதை. பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் நீதிமன்றங்களின் தாமதம் சாதிய வன்கொடுமை குற்றங்களை கட்டுப்படுத்தாமல் அதிகரிக்கவே செய்வதாக இருக்கின்றன.
மேலும் வேறு நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்களை பொறுப்பு நீதிபதிகளாக நியமிக்கும் போது அவர்களின் நீதிமன்ற பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வழக்கு விசாரணையை செய்கிறார்கள், SC/ST (POA) ACT ன் கீழ் பதிவாகும் வழக்குகளில் அதிகபட்சமாக Bail புகார்களை பரிசீலனை செய்வதே அவர்களுக்கு பெரும் பணியாகி விடுகிறது. மற்ற வழக்குகளை வாய்தா போட்டு வாய்தா போட்டு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது, அதிலும் குறிப்பாக நாடு முழுக்க Sensitiveஆக பார்க்கப்பட்ட வேங்கைவயலில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத வழக்கும், இரட்டை குவளை முறையை பயன்படுத்திய வழக்குகளுமே இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. மேலும் ஆவுடையார்கோயிலில் நடந்த இரட்டைக் கொலை வழக்கிலுமே, வழக்கு விசாரணையின் தாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பெரிய அச்சுறுத்தல்கள் நிலவுவதோடு, விரைந்து வழக்கை நடத்த முடியாத நிலைதான் நீடிக்கிறது.
மேலும் தனிநீதிபதி இல்லாததால் வழக்குகளை திறம்பட விசாரிக்காமல் அதிகமான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதும், அதிகமான வழக்குகளை MF செய்யும் நடைமுறை சிக்கலும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஆகவே வன்கொடுமைகள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்து உரியவர்களுக்கு தண்டனை கிடைப்பதால் மட்டுமே சரியான தீர்வை நோக்கி நாம் பயணிக்க முடியும்,
தமிழ்நாடு அரசும்! நீதித்துறையும் இதன் அவசியத்தையும் அவசரத்தையும், ஆபத்தையும் உணர்ந்து வெகுவிரைவில் புதுக்கோட்டை பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு தனிச்சிறப்பு நீதிமன்றத்திற்கென நீதிபதபதியை நியதிக்க வேண்டும்.
தெம்மாவூர் நந்தன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.