மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு குழுவால் (என்.ஏ.ஏ.சி) வழங்கப்பட்ட அங்கீகாரம் கடந்த மார்ச் 2024 உடன் முடிவடைந்ததோடு, அதனை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனாலும், இதுவரையில் தேசிய தர மதிப்பீடு குழுவின் மறு அங்கீகாரம் பெறாததால், பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருப்பதாக சுட்டி காட்டுகிறார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு குழுவால் (என்.ஏ.ஏ. சி) வழங்கப்பட்ட அங்கீகாரம் கடந்த மார்ச் 2024 உடன் முடிவடைந்ததோடு காலக்கெடுவும் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் தேசிய தர மதிப்பீடு குழுவின் மறு அங்கீகாரம் பெறாததால் பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மறு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க நிரந்தர துணைவேந்தர் இல்லாதது காரணமாக கூறப்படும் காரணத்தை முழுமையாக ஏற்க முடியாது. ஏனென்றால், கடந்த காலங்களில் சென்னை பல்கலைக்கழகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் துணைவேந்தர் குழு இருந்த காலத்திலேயே தேசிய தர மதிப்பீடு குழுவால் மறு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
ஆகவே, தற்போதுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் மாணவர்களின் நலன் கருதி என்.ஏ.ஏ.சி-ன் மறு அங்கீகாரம் பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு மறு அங்கீகாரம் பெறாத நிலையில் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவது எந்த விதத்திலும் சரியாக இருக்காது.
இதனால், மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி பெற்ற அரசு கல்லூரிகளில் அந்த தன்னாட்சியின் காலம் முடிவடைந்து மீண்டும் புதுப்பிப்பதற்கு சிறிது கால தாமதமானால் கூட பல்கலைக்கழகம் அந்த கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது.

ஆனால், தற்பொழுது பல்கலைக்கழகமே என்.ஏ.ஏ.சி. -ன் மறு அங்கீகாரம் பெறாமல் இருப்பது பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேடுகளை வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீடு குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அந்த பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் செயல்பட முடியாது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி வாயிலாக பட்டப்படிப்பு பயிலுகிறார்கள். துணைவேந்தர் குழு உறுப்பினர்களின் அலட்சியத்தால் தொலைதூரக் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
வரும் 2025-26ம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி மையம் நடத்தும் பட்டப்படிப்புகளும் கேள்விக்குறியாகிவிடும்.
பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக தொலைதூரக் கல்வி மையம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பல்கலைக்கழகம் மறு அங்கீகாரம் பெறாவிட்டால், தொலைதூரக் கல்வி மையம் மூடப்படக்கூடிய அபாயகரமான சூழல் ஏற்படும். இதனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
மேலும், முன்னாள் துணைவேந்தர் முனைவர் செல்வம், பதவி நீடிப்பு முறையற்ற வகையில் ஓராண்டு காலம் பெற்றும் பல்கலைக்கழகம் மறு அங்கீகாரம் பெறுவதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

செல்வத்திற்கு துணைவேந்தர் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டும் அவர் தன்னுடைய பணியினை சரியாக செய்யாததால், பல்கலைக்கழகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு தற்போது ஆளாகியுள்ளது.
செல்வம் துணைவேந்தராக இருந்தபோது ஆர்.யு.எஸ்.ஏ-வின் நிதியும் முறையாக அனைத்து பல்கலைக்கழக துறைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படாமல் அதிலும் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. ஆர்.யு.எஸ்.ஏ-வின் முறைகேடுகள் குறித்து நடைபெறும் விசாரணை இன்னும் முடியவில்லை.
ஆர்.யு.எஸ்.ஏ. பொறுப்பில் இருந்த துறை பேராசிரியர் ஒருவரை முன்னாள் துணைவேந்தர் செல்வம் அவர் பணியில் இருந்தவரை அந்த பொறுப்பில் வைத்துவிட்டு செல்வம் பணி நிறைவு பெற்றவுடன் அந்த பேராசிரியரையும் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார்.
இது கல்வியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
எனவே முன்னாள் துணைவேந்தர் செல்வம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர் மீது விசாரணை ஆணையம் அமைத்து தன்னுடைய பணிக் காலத்தில் நடந்த நிர்வாக சீர்கேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாணவர்கள் நலன் கருதி உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலர் இந்த பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக கேட்டுகொள்வதாக” முனைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
— அங்குசம் செய்திப் பிரிவு.