தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !

0

 

தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி ! 

 

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கவுரிசங்கர் (வயது 33). இவருக்கு மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கங்குடியில் தேங்காய் நார் கம்பெனி ஒன்று உள்ளது.
26.03.2022 அன்று  கவுரிசங்கர் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சக நண்பர்கள் சிலருடன் தேங்காய் நார் கம்பெனியில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
இதில் கலந்து கொள்ள தன்னுடைய பழைய நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து நள்ளிரவு பிறந்தநாள் கேக் வெட்டிய பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நண்பர்கள் சிலர் அங்கிருந்த கடப்பாரையை எடுத்து கவுரிசங்கர் தலையில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது.
பின்னர் அரிவாளாலும் வெட்டியுள்ளனர். இதில், படுகாயத்துடன் கீழே விழுந்த கவுரிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீதாராமன்(லால்குடி), செந்தில்குமார்(ஜீயபுரம்) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் 27.03.2022 காலை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கவுரிசங்கர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

 

இந்த கொலை சம்பவம் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய இரண்டு போலீஸ் நிலையங்களுக்கு இடையே நடந்துள்ளதால் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசாரும் விரைந்து வந்தனர்.

 

பின்னர் கொலை செய்யப்பட்ட கவுரிசங்கர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடம் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்று தெரியவந்ததால் மண்ணச்சநல்லூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கவுரிசங்கர் ஸ்ரீரங்கத்தில் ரவுடியாக வலம் வந்ததும், இவர் மீது ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடியாக இருந்து தொழிலதிபராக மாறிய நிலையில் கொலை நடந்திருப்பது போலீசாருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த கொலை தொடர்பாக சந்தேகப்படும் சில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
ரவுடி கவுரிசங்கர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டி ஆகியோரின் கூட்டாளியான பிரவீன் கொலை செய்யப்பட்டு இறந்த அதே நாளில் அவருடைய நண்பர் கௌரி சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.