திருச்சி – தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றம் கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் !
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேனிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல்.
தமிழ்நாட்டிலுள்ள மேனிலைப்பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்டஆட்சியரின் அனுமதியின் அடிப்படையிலும் நிகழாண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 11,12ஆம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 21.01.2025ஆம் நாளன்றும் (செவ்வாய்க்கிழமை), கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 22.01.2025 ஆம் நாளன்றும் (புதன் கிழமை) திருச்சிராப்பள்ளி, ஆர்.சிமேனிலைப் பள்ளியில் காலை 10.00 மணிமுதல் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி–கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை உரியவாறு நிறைவு செய்தும், தலைமையாசிரியர்/முதல்வர்/துறைத் தலைவரின் பரிந்துரையுடன் 17.01.2025ஆம் நாளுக்குள் ‘துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி– 620 001. ” (தொலைபேசி எண்.0431 – 2401031) என்ற முகவரிக்கு நேரில்/அஞ்சல் /மின்னஞ்சலில் (tamilvalar.try@gmail.com) உடன் அனுப்ப வேண்டும் அல்லது மாணவர்கள் போட்டிக்கு வரும்பொழுது நேரிலும் அளிக்கலாம்.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மொத்தம் 03 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வகைப்பாட்டிலும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- வீதம் மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.132000/- காசோலையாக வழங்கப்படும், மாவட்ட அளவில் முதல் பரிசுபெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்குபெற பரிந்துரை செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.