தொகுதி உடன்பாட்டில் காங்கிரஸின் காலதாமதம் சீறிய மு.க.ஸ்டாலின்

தேவையற்ற காலதாமதத்தைக் காங்கிரஸ் ஏற்படுத்தி வருவது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல- சீறல்

0

தொகுதி உடன்பாட்டில் காங்கிரஸின் காலதாமதம் சீறிய மு.க.ஸ்டாலின் !

ந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் புதிதாக இரு ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் தேர்வுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆணையத்தின் புதிய இரு ஆணையர்கள் இன்று (15.03.2024) பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து 3 நபர் கொண்ட தேர்தல் ஆணையம் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான கால அட்டவணையை இறுதி செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் எந்தெந்த மாநிலத்தில், எத்தனைக் கட்டங்களாக எப்போது நடைபெறும் என்பது 16.03.2024  அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஸ்மில்

கடந்த மாதம் தொடங்கித் திமுக தன் கூட்டணிக் கட்சிகளோடு தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. முதலில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டது. பின்னர்ப் போட்டியிடும் தொகுதியின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு கூட்டணி தொடர்பான அனைத்துப் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என்பதும், அதன்பின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது என்பதும், பின்னர்ப் பிரச்சாரம் மேற்கொள்வது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல் அமைத்திருந்தார்.

ஸ்டாலின் நிகழ்ச்சி நிரல்படியே எல்லாம் நடந்தது. எல்லாக் கட்சிகளும் திமுகவுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பை வழங்கினர். காங்கிரஸ் மட்டும் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. திமுக ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதி என்று ஆரம்பித்தனர். பின்னர் 7ஆக உயர்த்தப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே தொலைபேசி வழி ஸ்டாலின் அவர்களோடு பேசியதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 10 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டணி கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் இறுதி செய்தன. காங்கிரஸ் பாண்டிச்சேரி தவிர்த்துத் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளில் கரூர், கடலூர், ஆரணி ஆகிய 3 தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புகின்றது. இதற்கு மாற்றாக 3 தொகுதியின் பெயரை முடிவு செய்யமுடியாமல் காலதாமதம் செய்து வருகின்றது. திருச்சி வேண்டும் என்று காங்கிரஸ் மல்லுக்கட்டியது. அது மதிமுகவுக்குத் தருகிறோம் என்று திமுக கண்டிப்புடன் கூறியவுடன் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

அண்மையில் வேட்பாளர் தேர்வுக்கான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,“40 தொகுதியிலும் மாவட்டச் செயலாளர்கள் திமுகவே போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்களின் ஆசையில் உள்ள நியாயத்தைப் போற்றுகிறேன், பாராட்டுகிறேன். அதேவேளையில் கூட்டணி இருந்தால்தான் நாம் 40க்கு 40இலும் மகத்தான வெற்றியைப் பெறமுடியும். இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. காரணம் 3 ஆண்டு கால நம் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அளக்கும் அளவுகோலாக இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பார்க்கிறேன். அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய இடங்களைக் கொடுத்துத்தான் நாம் வெற்றிக் கனியைப் பறிக்கமுடியும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்” என்று நயமாகவும் கடுமையாகவும் நிலைமைகளை எடுத்துரைத்தார்.

நாளை (16.03.2024) காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளும், மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தல் அறிவிப்புக்கு முன் தேர்தல் உடன்பாடுகள் நிறைவுபெறவேண்டும். தேவையற்ற காலதாமதத்தைக் காங்கிரஸ் ஏற்படுத்தி வருவது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல என்று மு.க.ஸ்டாலின் சீறியுள்ளார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணி அமைப்பதில் ஸ்டாலின் எவ்வளவே விட்டுக்கொடுத்து வருகிறார்.“எளிதாக வெற்றிபெறும் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளே எடுத்துக்கொள்ளுங்கள். வெற்றிபெறுவது கடினம் என்று நினைக்கும் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகள் திமுகவிடம் தந்துவிடுங்கள்” என்று கூறியுள்ளது ஸ்டாலினின் வியூகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் செல்வப்பெருந்தகையும் தமிழ்நாட்டில் ஈட்டும் அனைத்து வெற்றியும் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொண்ட இந்தியா கூட்டணியின் கணக்கில்தான் சேரும் என்பதை மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்வதில் தேவையற்ற காலதாமதத்தைச் செய்துவந்தால், தேர்தல் பணிகளில் திமுகவினரின் ஒத்துழைப்பு கிடைப்பது மிகவும் அரிதாகிவிடும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்ற கருத்தே கூட்டணிக் கட்சிகளிடம் மேலோங்கியுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.