” தொடர் வெற்றிகளும் ஆபத்து தான்” – டைரக்டர் என்.லிங்குசாமி !
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசாகி ஹிட்டடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்வது இப்போது கோலிவுட்டில் டிரெண்டிங்காகிவிட்டது. அந்த வகையில் 2014-ல் சூர்யா நடிப்பில் லிங்குசாமி டைரக்ஷனில் ரிலீசான ‘அஞ்சான்’ படம் அப்போதே எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் இப்போ அதைப் பற்றியெல்லாம் அஞ்சாமல், 28ஆம் தேதி அஞ்சானை ரீ ரிலீஸ் பண்ணுகிறார் லிங்குசாமி.
4 கே டெக்னாலஜியில் ஒலிக்கலவை செய்ததுடன் 36 நிமிடக் காட்சிகளை எடிட் [ சூரி போர்ஷன் முழுவதும்] செய்துள்ளார் லிங்குசாமி. இந்த ரீ ரிலீசுக்கான புரமோ நிகழ்ச்சி நேற்று [ நவ.26] மாலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பிரஸ் ஷோவுக்கு முன்பாக டைரக்டர் லிங்குசாமி பேசும் போது, “ நீளத்தைக் குறைப்பதால் மட்டுமே படம் நன்றாக வரும்னு சொல்ல முடியாது. ஆனால் ஏன் குறைத்தேன் என்பது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். பதினோரு வருசத்துக்கு முன்னால இந்தப் படம் ரிலீசான போது அதிகப்படியான ட்ரோல்களில் சிக்கியது. ஆனால் இப்படத்தை அப்போது உண்மையாக ரசித்த பலரும் இருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை சினிமாவையே புரட்டிப் போடும் உலக மகா கதைன்னு கதைவிடமாட்டேன். இதுவும் ஒரு படம் அவ்வளவு தான். சூர்யா ரசிகர்களுக்கு இப்போதும் நல்ல ட்ரீட் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. எங்களது திருப்பதி பிரதர்ஸ் பேனரில் வந்த ‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’, ‘கும்கி’ என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தோம். அது ஒரு சிலருக்கு கோபம், வெறுப்பு, பொறாமையை ஏற்படுத்தியது. இதுவும் ஒருவகை ஆபத்து தான்.
மக்கள் விரும்பினால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. குறிப்பாக ட்ரோல் செய்பவர்களின் சதி பலிக்காது. அதே சமயம் என்மீதும் தவறு இருப்பதை நேர்மையுடன் ஒத்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கூட பல தவறுகளைச் செய்துள்ளேன். நாங்கள் எப்போதுமே ரசிகர்களை ஏமாற்றுவதற்காக படம் எடுப்பதில்லை. பல நேரங்களில் நாங்களே ஏமாந்திருக்கோம்” என நேர்மைத் திறத்துடன் பேசினார் என்.லிங்குசாமி.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.