உள்வலி தாங்கி … உணர்வடக்கி … அரசியலில் துரை வைகோ !
அண்ணன் துரை வைகோவை பார்க்கிற போதெல்லாம் பள்ளிக் காலத்தில் நான் கேட்ட ஒரு கதைதான் நினைவுக்கு வரும். ஒரு கப்பல் நடுக்கடலில் பயணித்தபோது அதிலிருந்து ஒரு சிறுமி தவறி விழுந்து விடுகிறாள். யாரும் காப்பாற்ற துணியாதபோது ஓர் இளைஞன் கடலில் குதிக்கிறான். நீச்சலடித்து முங்கி எழுந்து அந்தச் சிறுமியைக் காப்பாற்றி மேலே கொண்டு வருகிறான். எல்லோரும் கைத்தட்டி பாராட்ட, “அதெல்லாம் இருக்கட்டும்… யார் என்னை கடலுக்குள் தள்ளிவிட்டது?” எனக் கேட்டானாம் அந்த இளைஞன்.
துரை வைகோவும் அரசியலில் தள்ளிவிடப்பட்ட ஒருவர்தான். அரசியலில் அவருக்குக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை. கடலில் தள்ளிவிடப்பட்ட அந்த இளைஞன் அதற்காக ஆத்திரப்படாமல் எப்படி அந்தச் சிறுமியை மீட்டாரோ, அதைப்போல் மதிமுகவை காப்பாற்றவும் கரை சேர்க்கவும் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராக்கவும் அண்ணன் துரை வைகோ தொடர்ந்து போராடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாரங்களுக்குள் தீப்பெட்டி சின்னத்தைத் தொகுதி முழுக்கக் கொண்டுபோய் சேர்த்து வென்று காட்டியது முதல், நாடாளுமன்றத்தில் வெடித்து முழங்கியது வரை அண்ணன் துரை வைகோவின் அரசியல் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது.
ஏப்ரல்- 2 ஆம் தேதி துரை வைகோவின் பிறந்த நாள். அதையொட்டி மதிமுகவின் தளகர்த்தர்த்தரான அண்ணன் ஜீவன் ஓர் இசைத்தட்டு வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். “சில வார்த்தைகள் பேசுங்கள்…” என அண்ணன் ஜீவன் சொல்ல, மேற்சொன்ன கதையைத்தான் அந்த விழாவிலும் குறிப்பிட்டேன். ஒரே ஆரவாரம்…

அரசியலில் நுழைய, ஆளுமையைக் காட்ட, பதவி பெற, பகட்டாய் திரிய பலரும் போட்டி போடும் காலத்தில் அரசியல் வரமாக, வாய்ப்பாக அமைந்த போதும் அதனை ஏற்கத் தயங்கியவர் துரை வைகோ. தலைவர் வைகோ உள்ளிட்ட இயக்கத்தினரின் சொல்லைத் தட்ட முடியாமல் அரசியலில் அடியெடுத்து வைத்த துரை வைகோ, இன்று மகத்தான நம்பிக்கையாக ஜொலிக்கிறார். தனி ஒழுக்கம் தொடங்கி அரசியல் செயல்பாடுகள் வரை அத்தனையிலும் முத்திரை பதிக்கிறார்.
திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் நான்கு தொகுதிகள் போதாது என முறுக்கிக்கொண்டு நிற்காமல் மிகுந்த தன்மையோடு உள்வலி தாங்கி, உணர்வடக்கி தலைவர் வைகோவுடன் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்து முதல் ஆளாக அவர் வெளியே வந்தார். பல களேபரங்களைத் தாண்டி மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி வலுவாக அமைய வைகோவும் துரை வைகோவும் பெருந்தன்மையாகவும் முன்னுதாரணமாகவும் நடந்துகொண்டதுதான் முக்கிய காரணம்.
எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டாலும் கல்லீரல் எப்படி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கடைசி வரை போராடுகிறதோ… அதைப்போல் நினைக்க முடியாத கொடூரர்களால் நிர்மூலமாகும் அரசியலும் யாராவது வந்து நம்மை மீட்டுவிட மாட்டார்களா எனத் தத்தளிக்கிறது. துரை வைகோ போன்றவர்களின் அரசியல் வரவு அந்த வகையில்தான் மிக முக்கியமானதானவும் அவசியமானதாகவும் அமைகிறது. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் துரை வைகோ சார்… தூய நிலவாக, தும்பை மலராக மாற்றுங்கள் அரசியலை !
— இரா.சரவணன், திரைப்பட இயக்குநர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.