ஃபோர்த் ஃப்ளோர்’ பட விழாவில் கொந்தளித்து உளறிய டைரக்டர் சேரன்!
’மனோ கிரியேஷன்ஸ்’ பேனரில் திருப்பூரைச் சேர்ந்த ஏ.ராஜா தயாரிப்பில் எல்.ஆர்.சுந்தரபாண்டி டைரக்ஷனில் உருவாகி வரும் 27-ஆம் தேதி வெளியாகும் படம் ‘ஃபோர்த் ஃப்ளோர்’. இதில் ஆரி அருஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, டைரக்டர் சுப்பிரமணிய சிவா, தலைவசால் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ஜே.லக்ஷ்மண், இசை : தருண்குமார், எடிட்டிங் : ராம் சுதர்சன், பி.ஆர்.ஓ. ஏ.ராஜா.
27ஆம் தேதி ரிலீசாவதையொட்டி படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் 17-ஆம் தேதி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் பரத், பிரஜின், டைரக்டர்கள் சேரன், விஜய் மில்டன், சுசீந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் ராஜா, “இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் நல்ல படத்தைக் கொண்டு வருவது தான் பிரச்சனை. அந்த வகையில் இப்படம் நல்லபடியாக வந்துள்ளது. சிறப்பாக வர ஒத்துழைத்து உழைத்த இயக்குனருக்கும் ஹீரோ ஆரிக்கும் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
”ஆட்டோகிராஃப்’ படத்தில் நான் கேமராமேனாக இருந்த போது, சேரனுக்கு பிஸிக்கல் டிரெய்னராக இருந்தவர் ஆரி. கடுமையான உழைப்பாளி” என்றார் டைரக்டர் விஜய் மில்டன்.
“தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து தயாரிப்பாளர்கள் வந்து சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக தயாரிப்பாளர்கள் சங்கம் இருந்தால் இன்னும் பலர் வந்து கொண்டே இருப்பார்கள். அதே சமயம் வாரத்துக்கு ஒன்பது படங்கள் ரிலீசாவதையும் சங்கம் முறைப்படுத்த வேண்டும். ஒரே நேரத்துல ஒன்பது படம் வந்துச்சுன்னா மக்கள் எதைப் பார்ப்பார்கள், மீடியாக்கள் எப்படி விமர்சனம் எழுதுவார்கள். இதை ரொம்ப நாளா நானும் சொல்லிக்கிட்டிருக்கேன்” என வேதனையைக் கொட்டினார் தனஞ்செயன்.
டைரக்டர் சுசீந்திரன், நடிகர் பரத் ஆகியோர் ஆரியின் கடினை உழைப்பை பாராட்டினார்கள்.
ஹீரோ ஆரி பேசும் போது, “சினிமாவில் குவாலிட்டி, ஒழுக்கம், மரியாதை இவையெல்லாம் வெளியே தெரியும் விஷயங்கள் இல்லை. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் உழைக்கும் தயாரிப்ப்பாளர்கள், டைரக்டர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி. அவர் இன்னும் நல்ல உயரத்திற்கு வரவேண்டும். இங்கு வெற்றி தான் எல்லோரையும் முன்னிறுத்துகிறது, வரவேற்கிறது. எனக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குன்னு தெரியாது. இப்படத்தில் உண்மையான உழைப்பைக் கொடுத்துள்ளோம், படமும் மிக சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
தயாரிப்பாளருக்கும் தனக்குமிடையே இருக்கும் அண்ணன் -தம்பி உறவுப்பாசத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த டைரக்டர் சுந்தரபாண்டி, “இப்படத்தில் க்ரைம், லவ், காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஜானரும் இருக்கு. ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் திருப்தியான அனுபவத்தைத் தரும் என நம்புகிறோம்” என்றார்.
டைரக்டர் சேரன்,
“இப்பெல்லாம் சினிமா எடுக்க வருபவர்கள் ஏதேதோ நோக்கங்களுக்காக வருகிறார்கள். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா சினிமாவை நேசித்து வந்திருக்கார். சகோதரன் ஆரிக்கும் இப்படம் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும். சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் பண்ணுவது பெரும்பாடா இருக்கு. ஓடிடிகாரனும் கதவை மூடிட்டான், தியேட்டர்காரர்களும் கண்டுக்குறதில்ல. அதனால் அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பேற்று சின்னப் படங்களை ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய்யணும். இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் அரசாங்கத்திடம் பேசணும். ஏன்னா நாம வரி கட்றோம்ல… வரி கட்டும் நம்மை வாழவைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை” என கோபத்தில் கொந்தளித்து உளறிக் கொட்டினார்.
இதென்னய்யா புது உருட்டு. தயாரிப்பாளர்கள் சங்கம் மிக்சர் சாப்பிட்டுட்டு இருக்குமாம். சின்ன படங்கள் ரிலீசாக அரசாங்கம் உதவணுமாம். நல்லா இருக்குய்யா உங்க யோசனை…
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.