அங்குசம் பார்வையில் ‘ஜென்டில்வுமன்’
தயாரிப்பு : ‘கோமளா ஹரி பிக்சர்ஸ்’ & ’ஒன் ட்ராப் பிக்சர்ஸ்’ கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், நரேந்திரகுமார், லியோ நேதாஜி. டைரக்ஷன் : ஜோசுவா சேதுராமன். நடிகர்-நடிகைகள் ; லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், லாஸ்லியா மரியநேசன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, தாரணி, வைரபாலன், சுதேஷ். ஒளிப்பதிவு : சா.காத்தவராயன், இசை : கோவிந்த் வசந்தா, எடிட்டிங் : இளையராஜா சேகர், பாடல்கள் & வசனம் : கவிஞர் யுகபாரதி, காஸ்ட்யூமர் : சத்யா, ஆடியோகிராபர் : கெவின் ஃபிரெடரிக். தமிழ்நாடு ரிலீஸ் : ’உத்ரா புரொடக்ஷன்ஸ்’ ஹரி உத்ரா. பி.ஆர்.ஓ.: சதிஷ் [எய்ம்]
எல்.ஐ.சி.யில் வேலைபார்க்கும் அரவிந்த்துக்கும் [ ஹரி கிருஷ்ணன் ] பூரணிக்கும் [ லிஜோமோல் ] திருமணமாகி மூன்று மாதங்களாகிறது. கணவனுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும், எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார். ஐயர் ஆத்து மாமி வீட்டில் நான்கைந்து பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கூட, “அய்யய்யோ அவரு ஆபீஸ்விட்டு வந்துருப்பாரு, காபி போட்டுக் கொடுக்கணும்” எனச் சொல்லிவிட்டு தனது வீட்டுக்கு ஓடும் அளவுக்கு கணவன் மீது அன்பும் காதலும் வைத்திருப்பவர் பூரணி.
இந்த நிலையில் பூரணியின் தங்கை தீபிகா [ தாரணி ] இண்டரிவியூ விசயமாக சென்னைக்கு வந்து பூரணி வீட்டில் தங்குகிறாள். கொழுந்தியாள் வந்ததும் கிளுகிளுப்பாகிறான் அரவிந்த். ஒரு நாள் பூரணியை கோவிலுக்கு அனுப்பிவிட்டு, வீட்டு சமையலறையில் தனியாக இருக்கும் கொழுந்தியாளை நெருங்கும் போது நடக்கும் எதிர்ப்பில் தடாலென சரிந்து தரையில் கிடக்கும் கல்லில் தலை அடிபட்டு மூர்ச்சையாகிறான். பூரணி திரும்பி வந்து பார்த்து அதிர்ச்சியாகும் போது, அரவிந்தின் கையில் இருக்கும் செல்போன் அடிக்கிறது. அதில் பேசும் ஒருத்தியின் ஆபாச பேச்சு, வாட்ஸ்-அப் கிளுகிளு வாய்ஸ்மெசேஜ் இதையெல்லாம் கேட்டதும் பக்கத்தில் கிடக்கும் அரிவாளால் பாசக்கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்று உடலை ஃபிரிட்ஜில் வைத்துப் பூட்டிவிட்டு, அக்காவும் தங்கையும் கேஸுவலாக இருக்கிறார்கள்.
அதன் பின் நடக்கும் ஃபேமிலி க்ரைம் த்ரில்லர் தான் இந்த ‘ஜெண்டில்வுமன்’. பச்சையா சொன்னா கள்ளக் காதல் கொலைதான் இந்தப் படத்தின் மெயின் லைன். இதன் நவநாகரீக வெர்ஷன் தான் ‘ஜெண்டில்வுமன்’.
பூரணியாக லிஜோமோல் ஜோஸின் நடிப்பு இதிலும் கொடிகட்டிப்பறக்கிறது. இவருக்குன்னு கதைகள் எப்படித்தான் இப்படி செட்டாகுதோ? கணவன் ஆபீஸ் கிளம்பும் போது, “ஏங்க அந்த ரெண்டு வார்த்தை” என லவ் மூட் முகம், ஆபீஸிலிருந்து திரும்பியதும் இரவில் காட்டும் இன்பமுகம், கணவனை ஃப்ரிட்ஜுக்குள் வைத்த பின்பு காட்டும் கேஸுவல் முகம், வீட்டுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூவேந்தன் [ திமுக மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ] வந்ததும் காட்டும் அதிர்ச்சிமுகம், அதன் பின் சமாளிக்கும் முகம், ஒரு கேக் துண்டு முழுவதையும் சாப்பிட்டு முடித்து, ஜூஸ் குடிக்கும் ஆசுவாச முகம் என வெரைட்டியாக வெளுத்துக்கட்டிவிட்டார் லிஜோமோல் ஜோஸ். லிஜோவின் தங்கையாக வரும் தாரணிக்கு சீன்கள் கம்மிதான் என்றாலும் மச்சான் மல்லாந்துவிட்டதைப் பார்த்த அதிர்ச்சியில் உறைவது, அக்காவே மச்சானின் கழுத்தை அறுத்ததைப் பார்த்து வாயடைத்துப் போவது என தாரணியும் குறைவைக்கவில்லை.
லிஜோவுக்கு அடுத்து டாப் ஸ்கோரர்னா அது [அன்னா ] லாஸ்லியா மரியநேசன் தான். தனது மாஜி லவ்வர் அரவிந்தைத் தேடி அவனது வீட்டுக்கே போய் லிஜோவிடம் விசாரிப்பது, இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தியிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவது, உட்பட க்ளைமாக்ஸ் வரை லாஸ்லியா ஜொலிக்கிறார். இன்ஸ்பெக்டராக வரும் ராஜீவ்காந்தி பாடிலாங்குவேஜிலும் டயலாக் டெலிவரியிலும் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் கெட்டப்பும் இவருக்கு செட்டாகிறது. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரிசைகட்டும்.
‘பெண்ணை ஒரு பொருளாவும் பண்டமாகவும் தான் பார்க்குது இந்த சமூகம். அவளை மனுஷியாகப் பார்க்குறதில்லை. அவன் நம்ம ரெண்டு பேரையும் ஏமாத்திருக்கான்’ அண்ணன் யுகபாரதியின் இது போன்ற வசனங்கள் ஆங்காங்கே அனலடிக்குது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை தான் ஒட்டு மொத்த ‘ஜெண்டில்வுமனின் உண்மை உணர்வுகளை நமக்குள் கடத்துகிறது. பெரும்பாலான காட்சிகள் ஓரிரு வீடடு அறைக்குள்ளேயே நடந்தாலும் அதிலும் தனது சாமர்த்தியத்தை காண்பித்திருக்கிறார் கேமராமேன் காத்தவராயன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மரப்பாச்சி பொம்மைகள், நவீன ஓவியங்கள், பிரேயர் பண்ணிக் கொண்டிருக்கும் பாதிரியாரின் பைபிளுக்குள் ஒலிக்கும் செல்போன், காமவெறியனான போலீஸ் கமிஷனருக்கும் நேரும் கதி இதிலெல்லாம் டைரக்டர் ஜோசுவா சேதுராமனின் அழுத்தமான முத்திரை தெரிகிறது. ஆனால் க்ளைமாக்ஸில் லிஜோவும் லாஸ்லியாவும் பேசும் சீனில் ஒலிப்பதிவை மிகமிக மெல்லிய குரலாக்கி கள்ளத்தனம் பண்ணியிருக்கார் டைரக்டர். ஆடியோகிராஃபர் கெவின் ஃபிரெட்ரிக் மீது பழியைத் தூக்கிப் போட்டாலும் போடுவார் இந்த ஜெண்டில்மேன்.
படத்தின் க்ளைமாக்ஸ் தான் 100% அறுவெறுப்பானது, நிராகரிக்கப்பட வேண்டியது.
எல்லாம் முடிந்த பின் “நிஜத்தையும் நீதியையும் மீறுபவர்கள் அனைவரும் குற்றவாளிகளே” என ஸ்கிரீனில் போட்டு ஜோசுவா வாய்ஸ் ஓவர் கொடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். ஜெண்டில்வுமன்களே இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
— மதுரை மாறன் .