நாவுக்கரசர் நந்தலாலா நாடித்துடிப்பை நிறுத்திக் கொண்டார்.
அழகான முகத்திற்கு அழகு சேர்க்கும் புன்னகை, காந்த குரல், வசீகரிக்கும் பேச்சாற்றல், அவ்வளவையும் கடந்து “என்ன நண்பா” என்று பார்த்தவுடன் கேட்கும் நட்பிற்கு நல்லிணக்கம், கவிஞர் நந்தலாலா என்ற மேடைத் தமிழ் ஆளுமை இன்று நம்முடன் இல்லை.

“திருச்சிக்கு வாங்க. உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். எதையும் செய்ய காத்திருக்கும் நட்பை சம்பாதித்து வைத்திருக்கிறேன்” என்று மலர்ந்த முகத்துடன் அவர் சொல்லும் அழகே அவரின் சகோதரப் பாசத்திற்கும், அவரின் விரிந்த நட்பு வட்டத்திற்கும் மிகப் பெரியச் சான்று.
தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை, தனது அணுகுமுறையால் தான் உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டம் தன்மீது வைத்திருக்கும் பற்றின் ஆழத்தை உணர்ந்து வைத்திருந்த பாங்கு, எதையும் எளிதாக கடந்து செல்லும் திறந்த மனம் ஆகியவை கவிஞர் நந்தலாலாவின் ஆளுமைத் திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு.

மேடைக்கு அவர் அழகு
கேட்கும் காதிற்கு – அவர்
சொற்கள் விருந்து
அவர் பேச்சின் கருத்து
மதவெறிக் கெதிரான நல்மருந்து
மதம் கடந்த மனிதநேயம்
அவரின் பண்பு
மக்கள் ஒற்றுமையையே
அவர் இலக்கு.
தொழிலாளர் வர்க்கமாக மக்களை அணித்திரட்டுவதே அவருக்கு
நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலி.
இலக்கைக் காட்டிய மேடைப் பேச்சின் இலக்கணமே உனக்கு என்தன் இதயத்து அஞ்சலி.
கவிஞர் நந்தலாலா அவர்களின் இரத்த உறவுகள், சுற்றத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு