அரசுக்கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் திண்டாடும் ஏழை மாணவர்கள்! தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும் உயர்க்கல்வி துறை..
அரசுக் கல்லூரியில் படிக்க வரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தகுதி இருந்தும் சீட் கிடைப்பதில்லை. காரணம், மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை இன்னும் உயர்த்தாமலேயே உயர்கல்வித்துறை இருந்து வருகிறது என்று அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய இந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் இப்ராஹிம்-மிடம் பேசியபோது, “தமிழ் சமூகம் பண்பட்ட சமூகமாக உருவெடுத்து இருப்பதற்கு முக்கிய காரணம் கல்வியினுடைய மகத்துவம் தெரிந்ததால் மட்டுமே தான். அதனால் தான் உலகளாவிய அளவில் பெண் கல்வி வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் தற்பொழுதும் தமிழ்ச் சமூகம் உலக அரங்கில் பல்வேறு சிறப்புகளை பெற்று பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி வருவதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் கஷ்டப்பட்டாவது கல்வியை பெற வேண்டும், பெற்றுவிட வேண்டும் தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து விட வேண்டும் என்ற ஆர்வம் காட்டுவதால் தமிழ் சமூகம் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி வருகிறது.

அதே நேரம் அரசும் தன்னுடைய திட்டங்கள் மூலமும் நடவடிக்கை மூலமும் கல்வி நிலையங்களை நோக்கி மாணவர்களை அதிக அளவில் ஈர்த்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் போக்கும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால், அரசு கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு தாழ்த்தப்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒதுக்கப்படுகிறது. கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற கருத்துக்கள் நிலவுகிறது.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இன்று அரசு உயர்க்கல்வி நிறுவனங்களை நோக்கி வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களிடம் அதிக அளவிலான போட்டி நிலவுகிறது. குறிப்பாக, சேலம் 7 ஆர்ட்ஸ் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான எண்ணிக்கை 1500 என்றால், அதற்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

திருச்சி ஈ.வி.ஆர் கல்லூரியிலும் ஆயிரம் இடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். சென்னை நந்தனம் கல்லூரியிலும் ஆயிரம் இடத்திற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இப்படி குறைந்த இடத்திற்கு மிக அதிக மாணவர்கள் விண்ணப்பிப்பதால் 90% மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஓரளவு குடும்ப பின்னணி கொண்ட மாணவர்கள் கடனை வாங்கியாவது தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முயற்சி எடுக்கின்றனர். அதே நேரம் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையாக கல்வி நிலையத்திற்கு வரும் மாணவர்கள் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காததால் கல்வி பெறும் வாய்ப்பை இழக்க கூடிய சூழல் நேரிடுகிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.

மற்றொருபுறம் கல்வி பெற வேண்டும் என்ற பெண்களினுடைய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பெண் கல்வியினுடைய மகத்துவத்தை தெரிந்ததாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய பெண்களினுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் மொத்த மக்கள் தொகையில் பெண்களுடைய பிறப்பு விகிதமும், எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும், பெண்களினுடைய சராசரி கூடி வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர முயற்சி எடுக்கும் பெண்களினுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு ஆண்கள் கல்லூரியாக இருந்த சென்னை நந்தனம் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி இருக்கிறது தமிழக அரசு. ஆனால், கல்லூரியில் உள்ள மாணவர் சேர்க்கையினுடைய எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே இருந்த எண்ணிக்கையே தொடர்கிறது. உதாரணமாக, ஆண்கள் கல்லூரியாக இருந்த பொழுது ஆயிரம் இடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இப்பொழுது இருபாலர் கல்லூரியாக ஆகியிருக்கும் பொழுது பெண்களும் அதிகப்படியாக விண்ணப்பிப்பர். இதனால் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை முந்தையை காட்டிலும் பெருமளவில் உயரும். ஆனாலும், கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை உயர்த்தாமல் இருந்து வருகிறது. மேலும் இருபாலர் கல்லூரி ஆக மாற்றப்பட்ட கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்பு என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. பெண்களுக்கான கழிவறை என்பது மற்ற கல்லூரிகளை காட்டிலும் குறையாக இருக்கிறது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே அரசு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு அரசு கல்லூரி என்ற விதத்தில் அமைக்க வேண்டும். இருபாலர் கல்லூரியாக கல்லூரிகள் மாற்றப்படும் நேரத்தில் கல்லூரியினுடைய கட்டமைப்பு, இடவசதி, வகுப்பறை வசதி, கழிவறை வசதிகளை அதிகரிக்க செய்ய வேண்டும் மேலும் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு கல்லூரிகளில் இடங்களை இரட்டிப்பாக்க வேண்டும்” என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கமால் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சேலம் 7 ஆர்ட்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் செண்பக லட்சுமியிடம் பேசியபோது, “ஆண்டுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதில், எங்களால் அரசு கொடுத்துள்ள விகிதத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்பட முடிகிறது. இட ஒதுக்கீடு அதிகரிப்பது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக சேலம் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சிந்தியா செல்வியிடம் பேசியபோது, “அரசுக்கல்லூரிகளை பொறுத்தவரையிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொண்டுதான் வருகிறோம். மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரிடம், அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.
— ஜெ. ஜான் கென்னடி.