பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலபள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளாக 22 விடுதிகள் மாணவருக்கும். 15 விடுதிகள் மாணவியருக்கும் ஆகமொத்தம் 37 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை பயில்கின்ற மாணவ / மாணவியர்கள் சேர தகுதியுடைவர்கள் ஆவர்.
விடுதிகளில் எவ்விதசெலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதி மாணவ/ மாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10ம் வகுப்புவரை பயிலும் மாணவர் / மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புபயிலும் மாணவர்/மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/JEE நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி நூல்கள் வழங்கப்படும். விடுதியில் தங்கிப்பயிலும் மாணவ / மாணவியருக்கு ஆண்டு தோறும் பாய்கள் வழங்கப்படும். பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவர்/மாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்
பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்ததூரவிதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ/ மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர் /காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கெனதனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி மாணவ / மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.