“எங்களுக்கு காட்ஃபாதர் கே.எஸ்.ரவிக்குமார் தான்” –‘ கார்டியன் ‘ பிரஸ்மீட்டில் இரட்டை இயக்குனர்கள்!
“எங்களுக்கு காட்ஃபாதர் கே.எஸ்.ரவிக்குமார் தான்” –‘ கார்டியன் ‘ பிரஸ்மீட்டில் இரட்டை இயக்குனர்கள்! தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் இருந்தன. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.
இப்படத்தை சபரி-குரு சரவணன் என்ற இரட்டையர்கள் இயக்கி உள்ளனர்.ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான ‘லால்குடி’ N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக ‘டான்’ அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார். S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
மார்ச் 04- ஆம் தேதி படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது
முதலாவதாக கார்டியன் படக்குழுவினரை வரவேற்று பேசினார் தயாரிப்பாளர் விஜயசந்தர். “நான் தொடங்கிய ‘வாலு’ திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது. அந்தப் படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். ‘கார்டியன்’ படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன், கொரோனா தொற்று காலம் என்பதால் பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது.
அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர். அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் எனது எண்ணத்திற்குள் முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி தான்.அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூல காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்தப் படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்” என்று கூறினார்.

அடுத்து இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பேசும் போது,”இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும்,ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார். திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன். ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன்
ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது,”கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கார்டியன்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி”, என்றார்
செகண்ட் ஹீரோயின் தியா பேசும்பொழுது,”வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.ஆனால் வெள்ளித்திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும். ஊடகத்துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி”,என்று பேசினார்.
நடிகை ஷோபனா பேசும்போது,“இரண்டாவது படமே மிகப்பெரிய படமாக அமைந்தது,மிக்க மகிழ்ச்சி இந்த வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர்கள் இருவருக்கும் மிக்க நன்றி.மகளிர் தினத்தன்று திரைப்படம் வெளியாகிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
குரு சரவணன் பேசும் பொழுது,”தமிழுக்கும்,கடவுளுக்கும், எங்களது குருநாதர் திரு.கே. எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்த வரம் தான் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை உதவி இயக்குனர்களாக சேர்த்துக் கொண்டதுதான்.தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.

பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம்.கதாநாயகி ஹன்ஷிகா,கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம் C.S. ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள் தான். இந்தப் படத்திற்கு எந்த அளவுக்கு சிறப்பான உழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.படத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படத்தின் தயாரிப்புக் குழுவினருக்கும் நன்றி. ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்.ஊடகத் துறையினரின் ஆதரவை வேண்டுகிறோம். ஊடகத் துறையினருக்கு நன்றி”என பேசினார்.
இரட்டை இயக்குனர்களில் ஒருவரான சபரி பேசும் பொழுது,”நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் திரு .கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம்.அவரை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார் .இனிமேல் எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார். படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது,”ஹன்ஷிகா சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்”.