” கல்லூரிக்கு முதல்வர் அவருதான் … ஆனா, இங்க எல்லாமே நான்தான் ” மருத்துவக்கல்லூரி அக்கப்போர் !
” கல்லூரிக்கு முதல்வர் அவருதான் … ஆனா, இங்க எல்லாமே நான்தான் ” மருத்துவக்கல்லூரி அக்கப்போர் !
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் பரிட்சைக்கு கேட்கப்படும் கேள்வித்தாளை போல ஒன்றை நீட்டி கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரைப் பற்றி கல்லூரி தரப்பில் நடத்தியிருக்கும் இரகசிய விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களையடுத்து, அந்தக் குறிப்பிட்ட பேராசிரியரை தெரியுமா? அவர் என்ன பதவி வகிக்கிறார்? நீங்கள் கல்லூரியில் சேரும்போது அவர் உங்களிடம் பணம் பெற்றாரா? என்பதாக அந்தக் கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதற்கு முன்னதாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி, அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் என்பதாக குறிப்பிட்டு மூன்றுபக்க மொட்டைக்கடுதாசி ஒன்று, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பறந்திருக்கிறது.
அந்த கடுதாசியின் எதிரொலி தான், மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட இரகசிய விசாரணை என்கிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது, அந்தக்கடிதத்தில்?

கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியின் துணைமுதல்வராக (பொறுப்பு) பதவி வகிக்கும் மருத்துவர் சாத்விகா பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களை கொண்டிருக்கிறது, அந்தக் கடிதம்.
கல்லூரியின் முதல்வராக பூவதி இருக்கிறார். துணை முதல்வர் பதவி பணிமூப்பு அடிப்படையில் பேராசிரியர் ஒருவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துணைப் பேராசிரியரான சாத்வீகா முறைகேடான முறையில் அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார் என்பது முதன்மையான குற்றச்சாட்டு.
அடுத்து, முதல்வர் எல்லாம் சும்மா. மொத்தக் கல்லூரி நிர்வாகமே சாத்விகாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவரது கண் அசைவு இல்லாமல், அங்கே எதுவுமே நடந்துவிட முடியாது. யாரும் எளிதில் முதல்வரை அணுக முடியாத அளவுக்கு நந்தி மாதிரி குறுக்கே நிற்கிறார், சாத்விகா.
சில விசயங்களில் அவரே இறங்கி வந்தாலும் அதையும் தடுத்து கெடுத்து விடுகிறார். சக பேராசிரியர்களை மதிப்பது கிடையாது. மருத்துவமனைக்கு புதியதாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க வேண்டுமா? மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய வேண்டுமா? சாத்விகாவை தனிப்பட்ட முறையில் கவனித்தால் மட்டுமே அவை சாத்தியம்.

பணிமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் மருத்துவர்களுக்கு அவசியமான விடுவிப்பாணையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் அந்த அதிகாரமே அவருக்குக் கிடையாது. ஆனாலும், முதல்வரின் சார்பாக அதை செய்கிறார். சாத்விகா
”தேர்வில் வெற்றி பெற, செய்முறைத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க இவரை அணுகவும்” என்று போர்டு மாட்டாத குறையாக வசூல் வேட்டை நடத்தி வருகிறார். அதுவும், இதற்கென்று விடுதியில் பணியாற்றும் சில ஊழியர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு செயல்படுத்தி வருகிறார். மிக முக்கியமாக, மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது, தலை ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் வசூலித்தார் என்பது மிக பிரதானமான குற்றச்சாட்டாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புகார் குறித்து கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதியிடம் பேசினோம்.
மருத்துவர் சாத்விகா பற்றி கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் விசாரணையை மறுக்கவில்லை. மாறாக, ”அது Confidential Enquiry ங்க… அத பிரஸ்கிட்ட சொல்லவும் முடியாது. இதுல நியூஸ் பண்ண எதுவுமே இல்லியே? நீங்க நியூஸ் பண்ணக்கூடாது.” என்பதாக மழுப்பலாகவே பேசினார் அவர்.
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும், சம்பந்தப்பட்ட மருத்துவர் சாத்விகாவிடம் பேசினோம். “
நீங்கள் நேரில் வாங்க, இன்றே வாங்க , உங்களுக்கு அனைத்தும் clarify பன்றேன்” என்று எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாகவே முடித்துக் கொண்டார்
மாவட்ட ஆட்சியருக்கும் அந்தப் புகார் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதால், ஆட்சியர் சரயுவின் கருத்தை அறிய முற்பட்டோம். “ விசாரிக்கிறேன்” என்பதாக பதிலளித்தார்
சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரி ஊழியர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் கூறுகையில் ,புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரின் அரசியல் அழுத்தம் காரணமாக பணியிட மாறுதலில் சென்று சமீபத்தில் கிருஷ்ணகிரி முதல்வராக வந்தவர் தான் பூவதி.
இங்கும் கூட முதல்வர் பூவதி மீது யாரும் எந்தக்குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. மாறாக, அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சாத்விகா முதல்வரின் சார்பாக எல்லா விசயங்களிலும் தேவையில்லாமல், மூக்கை நுழைக்கிறார் என்பதுதான் மையமான குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி செயல்பாட்டுக்கு வந்து இரண்டே ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. ஆனால், இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அசோகன், திருவாசகமணி, சங்கீதா, ராஜஸ்ரீ என நான்கு முதல்வர்கள் அடுத்தடுத்து என்ன காரணத்தினால் மாற்றப்பட்டார்கள் ? என்ற சந்தேகம் எழுகிறது !
தற்போது சர்ச்சையான கடிதத்தின் மீது விசாரணையின் முடிவில், யார் தலை உருளப்போகிறது, என்று பொருத்திருந்துதான் பார்ப்போமே?
– கா.மணிகண்டன்.