இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !
இருமேனி. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? அது ஒரு கிராமத்தின் பெயர். சீராக அமைக்கப்பட்ட அந்த கடலோர முஸ்லிம் கிராமம் இராமநாதபுர மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் மண்டபம் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி சோழ மண்டலத்தின் கரையோரப் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்விரிகுடா (ஜலசந்தி) பகுதியில், மண்டபம் தீபகற்பத்தை ஒற்றியுள்ள பாம்பன் தீவு மற்றும் அதிலுள்ள இராமேஸ்வரம் கோயில் மற்றும் கடலுக்குள் முங்கி எழும் ஆதம் அல்லது இராமர் பாலம் மூலமாக ஸ்ரீலங்காவின் மன்னார் தீவுடன் இணைந்துள்ளது. இருமேனியும், அங்கு உள்ள இஸ்லாமியக் குடியிருப்புகளும் தோன்றி ஏறக்குறைய 300 – 350 ஆண்டுகள்தான் இருக்கும். இவர்கள் முதலில் கடல் தொழிலிலும் விவசாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். பின் இலங்கை, மலேசியா நாடுகளுக்குச் சென்று சிறுதொழில் முனைவோராகவும் தொழிலாளர்களாகவும் இருந்து, வருமானம் ஈட்டி இந்தியாவிற்கு வரப்போக இருந்துள்ளனர். அதன்பின் சிலர் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று வேலை செய்தும், சிலர் சென்ற இடத்தில் நிரந்தரமாகத் தங்கியும் விட்டனர். இதற்கிடையில் மலேசியா சென்ற பலர் இந்தியாவிலிருந்த தங்களது குடும்பங்களை வரவழைத்து மலேசியாவில் பல இடங்களில் நிரந்தரமாக வாழ்ந்தும் வருகின்றனர். தற்போது பல இருமேனி வாலிபர்கள் அரபு நாடுகளில் வேலை செய்து வரப்போக உள்ளனர்.
இருமேனியின் வரலாற்றையும், அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை முறைப்படி, வரலாற்று சான்றுகளுடன் எழுதவேண்டும். அதன்மூலம் மற்ற ஊர்களிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரத் தூண்டுதலாக அமையும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
எமது இருமேனி புத்தகத்தை, ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில், நமது ஜமால் முகமது கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் இஸ்மாயில் முகைதீன் என்னை அழைத்து, நமது கல்லூரி மலருக்கு ஒரு கட்டுரை கேட்டபோது. எனது புத்தகத்தின் ஒரு பகுதியான, “இருமேனி பெயர் எப்படித் தோன்றியது” என்ற ஆராய்ச்சி கட்டுரையைச் சுருக்கி, தமிழாக்கம் செய்து, நமது தமிழ் முஸ்லீம்களுக்கு மத்தியில் உலாவர வேண்டும், நமது மக்களுக்கு வரலாற்று உண்மைகள், சிறப்புகள் தெரிய வேண்டும். இதனால் பிற்கால மக்களும் பயனடைவார்கள் என்ற நம்பிக்கையில் அன்று கேட்ட கட்டுரை தற்போதுதான் எழுதி முடிக்கப்பட்டு உங்கள் முன் உலா வருகிறது.
தமிழ் முஸ்லீம் இலக்கியவாதிகள், கவிஞர்கள் மற்றும் புலவர்கள் பல செய்யுள்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்று வாழ்ந்தனர். ஆனால் அவர்களைக்கூட நாம் முறைப்படி தொகுத்து வைக்கவில்லை. அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடக்கிறது, நாம் அதைத் தேடவேண்டியதாக உள்ளது. பல அழிந்து போய்விட்டது. இதுபோல்தான் சரித்திரச் சான்றிதழ்களிலும், வரலாற்று உண்மைகளும் அதிகமாக எழுதப்படவும் இல்லை, தொகுக்கப்படவும் இல்லை. இதை உணர்ந்து நான் இந்தக் கட்டுரையை நமது தமிழ் மக்கள் அதிகமாகப் படிக்க வாய்ப்பிருக்கக் கூடிய ஒரு மலருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த எண்ணம், அங்குசம் வார இதழ் வழியே தொடராக உங்களோடு உரையாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சிதான். இனி வாரம் தோறும் உரையாடுவோம் …
ஹாஜி.Dr.இ.சு.அ.நாதர்கான்,
Chairman, Ecotone Worldwide Sdn. Bhd, Malaysia.








Comments are closed, but trackbacks and pingbacks are open.