மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 7
நம் திருச்சி மாவட்டத்தின் நற்கவிஞர் ரத்திகா. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பணி நிறைவிலிருப்பவர். கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே தமது எழுத்து முயற்சியைத் தொடங்கியவர். அப்போதே குழந்தைப் பாடல்கள் எழுதியவர். பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கையில் கவிதைகள் எழுதி அதைத் தினமலர் வெளியிட தமது கவிதைப் பயணத்தை இனிதே துவங்கியவர்.
உயிர்மை வெளியீட்டில் ‘தேய்பிறையின் முதல் நாளிலிருந்து’ இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ஆனந்த விகடன், கல்கி, உயிர் எழுத்து, சுகன், கல்வெட்டு போன்ற பல இதழ்களில் கவிதைகள் எழுதியவர். கவிதைகளோடு சிறுகதைகளும் எழுதக்கூடிய ஆற்றலுள்ளவர். தனது முதல் சிறுகதைக்கு கல்கி விருது பெற்றவர். இதோடு திருப்பூர் சக்தி விருது, அரிமா , ரோட்டரி சங்க விருதுகள், சில அறக்கட்டளை விருதுகள், நல்லாசிரியர் விருது, வீரமங்கை வேலுநாச்சியார் விருது (கம்போடிய தமிழாச்சங்கம்), திருச்சிராப்பள்ளி மாவட்ட விருதுகள், என பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றவர்.
இவற்றோடு திரைத்துறைக்கான முயற்சியில் பதினோரு பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்புச் செய்தி.
தற்போது, மகாகவி காளிதாசனின் ‘சாகுந்தலம்’ நாடகத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். கவிஞர் ரத்திகாவின் நாவல் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்.