தமிழ்ப் பண்பாட்டை உயிர்ப்புடன் பறைசாற்றிய அயர்லாந்துத் தமிழர்கள்
தமிழ்ப் பண்பாட்டை உயிர்ப்புடன் பறைசாற்றிய அயர்லாந்துத் தமிழர்கள்
தமிழ் மொழியின் மேன்மையைப் பறைசாற்றி, உலகளாவிய பார்வையோடு, உயர்தரத் தமிழ் மொழிவளர் மையமாக உருவெடுத்து, அனைவரின் ஒத்துழைப்போடு தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் என்கிற தொலைநோக்கோடு தொடங்கப்பட்டு இயங்கிவரும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அயர்லாந்துக்கான இந்தியத் தூதர் அகிலேஷ் மிஷ்ரா இவ்விழாவிற்குத் தலைமையேற்றது விழாவிற்கு பொன்மகுடமிட்டதாக அமைந்தது. தன்னார்வப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கிய பிறகு அவர் ஆற்றிய சிறப்பு ரையில், தமிழ் மொழியின் தொன்மை, உலகளவில் தமிழர்களின் சமூக, பொருளாதார பங்களிப்பு, தமிழர்களின் தாய்மொழிப் பற்று குறித்து உரையாற்றியதோடு, அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியையும், பண்பாட்டையும் கொண்டு சேர்க்கும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் தமிழ்த் தொண்டையும் பாராட்டினார். மாணவர் களின் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளும், தமிழகம் குறித்துக் குழந்தைகள் வரைந்த ஓவியங்களும், கண்காட்சிப் படுத்தியிருந்த மாதிரிகளும், கலை இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற ஆர்வமும் அயர்லாந்துத் தமிழர்கள் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதை பறைசாற்றுவதாக அமைந்தது.
-யுகன்