பணமும் போச்சு, நகையும் போச்சு! குறைந்த வட்டிக்கு ஆசை காட்டி மோசடி !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏழுமலை பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீ முருகன் தங்க நகை அடகு கடையை துரைமுருகன் என்பவர் தொடங்கி நடத்தி வந்துள்ளார். குறைந்த வட்டியில் நகை அடகு வைப்பதாக கூறி ஆசை காட்டிய நிலையில் ஏழுமலை, பேரையூர், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளிகள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
தங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக சிறியசிறிய நகைகளை கூட அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துரைமுருகனுக்கு சொந்தமான அடகு கடையில் நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் அதற்கான வட்டி தொகையையும் அடமான தொகையும் முழுவதுமாக செலுத்திய நிலையில் நகையை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அங்குள்ள பணியாளர்களிடம் கேட்கும்போது துறைமுருகனிடம் கேட்டு விட்டு பணத்தை தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் நகை கிடைக்காத நிலையில் திடீரென அடகுகடை மூடப்பட்டுள்ளது. இதனை பார்த்து நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் துறைமுருகனின் வீட்டிற்கு நேராகச் சென்று கேட்டபோது தனக்கு பிரசர் இருப்பதால் அடிக்கடி தலை சுற்றுகிறது. எனவே கடைக்கு வந்தால் நீங்கள் நகை கேட்பீர்கள் அதனால் உங்கள் நகையை அடுத்தவாரம் தந்து விடுகிறேன் என கூறி சமாளித்துள்ளார்.
பின்னர் ஒரு வாரம் ஆகியும் நகைகளை தராத நிலையில் ஏமாற்றம் அடைந்த நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் துரைமுருகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உசிலம்பட்டி நகர எழுமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நான்கு மாத காலம் ஆகியும் தங்களுக்கான வட்டி தொகையும் அசல் தொகையும் செலுத்தியும்கூட நகைகளை இழந்து தவிப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளோடு தற்பொழுது துரைமுருகன் தலைமறைவாக உள்ளதால் தங்களது நகைகளை மீட்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது, எங்களது நகைகளை மோசடி செய்த ஸ்ரீமுருகன் கோல்டு லோன் கடையின் உரிமையாளர் துரைமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது நகைகளை மீட்டு தர முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறைந்த வட்டியில் கோல்டு லோன் என கூறி கூலித்தொழிலாளர்களான தங்களை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார். தனியார்பேங்க்ல வச்சு திருப்ப முடியாதுனு அடகுகடைல வச்சோம். புள்ளங்க படிப்புக்காக வச்சோம் இப்போ பணமும் போச்சு நகையும் போச்சு. கஷ்டப்பட்டு உழைச்சு வாங்கின எங்க நகையை காவல்துறை அதிகாரிகள் மீட்டு கொடுக்க வேண்டும் என தொிவித்தனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.