கவியாட்டம்
கவியாட்டம்
இயற்கையானவள் அவள்
வானத்தில் வண்ணம் தீட்டும்
கண்களுக்குள் ஜொலிக்கிறது
கருப்பு வெள்ளை நட்சத்திரங்கள்!
இதழில் கசிந்த முத்தங்களின் வண்ணத்தை
பூசிக்கொண்டு உதிர்கிறது
உன் கூந்தல் பூக்கள்!
மலைச்சாரலில் கலந்து
மழையாய் பொழிகிறது
உன் சிரிப்பின் சாரல் துளி!
சமநிலையில்லா பள்ளத்தாக்கில்
காற்றோடு நடனமாடுது
உன் தலைமுடியின் கால்கள்!
தவழும் மேகத்தை விளையாட இழுத்து
உன் நெற்றி பொட்டை
அதன் கன்னத்தில் வைக்கிறாய்!
உன் மூக்குத்தி திருகாணியில்
திருகி திரும்புகிறது
இயற்கையின் ஆன்மா…
-மாரிகார்த்தி, கழுகு மலை
நிழல் உணர்வு
ஏதோவொரு
நிழல்….
எப்போதும்
படர்ந்த படி
பங்கு போடுகிறது
உணர்வுகளை”….
-இராஜேஷ்.சங்கரப்பிள்ளை
இரவின் இனிமை
மௌனம் நிரம்பிய
அடர் இருளின்
ஏகாந்தத்தில்….
மெல்லிய தென்றலின் இசையில்
சிலிர்த்து சிறு சாரலென…
பனிப்பூக்கள் தூவியே
நிலவை தாலாட்டி
விண்மீன்கள் மிளிர…
பேரழகுப் பெருங்கடலென
விழி விரிக்கிறது
நீலவானம்….
-லீலா லோகநாதன், காஞ்சிபுரம்
காதல் தேசத்தில்…
என் நேசத்தை
அகழ்ந்தாய்வு செய்து
அள்ளிப்போகிறாய்
மொத்தமாய்….
பிரியங்களை
விதைத்து போகிறாய்
விருட்சமாய்….
விழிப்பார்வையில்
வேறுலகம் கூட்டிப்போகிறாய்
மௌனமாய்….
சலனநதியில் சாவகாசமாய்
நீ பதித்த ஈரமுத்தம் சேமித்து
தேவகணமாகிறேன்…
-கவிஞர் லீலா லோகநாதன், ஆரணி
நெகிழியில்…துளி
தூக்கி வீசப்பட்ட
நெகிழி போத்தல்களில்
அடைபட்டுக்கிடக்கிறது
ஓர் யுகத்தின்
பெரும் மழை….?
சோழநிலா