திருச்சி வாழவந்தான்கோட்டையில் குட்கா பதுக்கி விற்ற புகாரில் சட்ட மாணவர் கைது ! கடைக்கு சீல் !
திருச்சி வாழவந்தான்கோட்டையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து கடை உரிமையாளரை போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர், துவாக்குடி தாலுகா பகுதியில் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது வாழவந்தான் கோட்டை, மெயின் ரோட்டில் உள்ள ஆ.ஹென்ரி சின்னப்பன் என்பவரது ஹென்ரி மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு சுமார் 5.16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மேல்நடவடிக்கைகாக துவாக்குடி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த ஆய்வின்ல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வராஜ், மகாதேவன் மற்றும் மாவட்ட ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர்.
“தொடர்ந்து இது போன்று தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும். இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவுபொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் திருச்சி மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95 மாநிலபுகார் எண் : 9444042322 ஆகிய எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் தகவல் கொடுப்பவரின் விபரம் இரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்கிறார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு.

தற்போது கைதாகியிருக்கும் சின்னப்பன் சட்ட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில், முசிறியில் வழக்கறிஞர் மகாலிங்கம் என்பவர் அலுவலகத்தில் இருந்து புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் பொறுப்பும் கடமையும் கொண்ட வழக்கறிஞர்களே இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க; வியாபாரியாக இருந்தாலும், வக்கீலாக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கை பாயும் என்பதை தனது அதிரடி நடவடிக்கைகளால் செயல்படுத்தி வருகிறார், டாக்டர் ரமேஷ்பாபு.
— அங்குசம் செய்திப்பிரிவு.