சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் : தமிழக செய்தித்துறை அமைச்சர் ஆய்வு!
சோழர் அருங்காட்சியகம்
அமைப்பதற்கான இடம் :
தமிழக செய்தித்துறை அமைச்சர் ஆய்வு!
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின்போது தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள மேம்பாலம் அருகேயுள்ள பகுதியில் உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தேர்வு செய்து துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார்.
இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பாக இருக்கிறது.
தமிழக முதலமைச்சரின் எண்ணம் வீண் போகாத வகையில் சிறந்த அருங்காட்சியகத்துக்கு இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது.
மேலும் இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.
இதை மேலும் ஆய்வு செய்து முடிவு எடுத்து தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அருங்காட்சியகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் சாமிநாதன்.
அருங்காட்சியகம் அமைப்பதற்காக துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இதற்காக ஒரு குழு அமைக்கப்படும்.
திட்ட மதிப்பீடு இன்னும் தயார் செய்யப்படவில்லை.
தயார் செய்தவுடன் அதற்கான பணி தொடங்கும் என்றார் அமைச்சர்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கே.நெல்சன், தஞ்சாவூர் அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.