‘மொத ராத்திரி’க்கு போலாமா ? வேண்டாமா ?
குடும்பத்தைக் காப்பாற்ற தூத்துக்குடியிலிருந்து துபாய்க்கு போய் சம்பாரிக்கிறார் மருதநாயக்ம் [ ரிஷிகாந்த்] அவரின் முதல் காதல் தோல்வியால் கல்யாணத்தையே வெறுக்கிறார். அப்படிப்பட்டவரை தங்கச்சி மகனுக்கு காதுகுத்து என பொய் சொல்லி தூத்துக்குடிக்கு வர வைக்கிறார்கள். வந்த பிறகு தான் தனக்கு கல்யாணம்னு ரிஷிகாந்துக்கு தெரிகிறது. இவருக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணு யாருன்னா, வேறொருத்தனை காதலிச்சு, வேற வழியே இல்லாம, மருதுவுக்கு கழுத்தை நீட்ட சம்மதிச்சுட்டு, கல்யாண வீட்டிலிருந்தே கம்பி நீட்ட ப்ளான் போடும் முத்துச் செல்வி[ அனிஷ்மா அனில்குமார்].
காலையில் தாலிகட்டு முடிஞ்சு மொத ராத்திரி ஆரம்பிக்கும் போது தான் முத்துச்செல்வியின் லவ் பத்தி மருதுவுக்குத் தெரிகிறது. “இதை காலையிலேயே சொல்லியிருந்தா நானே கல்யாணத்தை நிப்பாட்டியிருப்பேண்டி. இப்ப வந்து கண்ணீர்விட்டு கதறி என்ன பயன்? சரி வந்து தொலை, நானே உன் காதலன் கூட சேர்ந்து வைக்கிறேன்” எனச் சொல்லி யாருக்கும் தெரியாமல் முத்துச் செல்வியைக் கூட்டிப் போகிறார் மருது. காதலனுடன் முத்துச் செல்வி சேர்ந்தாளா? இதான் இரண்டே கால் மணி நேர கலகலப்புக்கு க்யாரண்டியான ‘மொத ராத்திரி’.

டைட்டில் தான் ஒரு தினுசா இருக்கே தவிர, படம் வேற தினுசல போய், ஃபேமிமிலியுடன் என்ஜாய் பண்ணக் கூடிய பியூர் வெஜிடேரியன் படம். இடைவேளை வரை சும்மா ஜிவ்வுன்னு காமெடி டிராக்ல கொண்டு போய் தியேட்டரையே சிரிப்பால அதிர வைக்கிறார் டைரக்டர் ராஜா கருப்பசாமி.
இடைவேளைக்குப் பிறகு சீனுக்கு சீன் ட்விஸ்ட், செண்டிமெண்ட், காதலில் சாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வு, பெண் கல்வியின் முக்கியத்துவம் என நல்ல கண்டெண்ட்டையும் ஸ்கிரிப்டில் கொண்டு வந்து அமர்க்களப்படுத்திவிட்டார் ராஜா கருப்பசாமி.
ஹீரோ ரிஷிகாந்த் டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டார். காதலனிடம் சேர்ந்து வைக்க அனிஷ்மாவைக் கூட்டிக் கொண்டு போன பின் கடும் மழையில் கோவில் பூசாரி சேத்தனிடம் சாதி ஆணவத்தால் தனது காதலி செத்த கதையைச் சொல்லி கதறியழும் சீனில் சபாஷ் ரிஷிகாந்த். ‘சிறை’யில் தனது நடிப்பால் ரசிகர்களின் மனச்சிறைக்குள் வந்த அனிஷ்மா அனில்குமார். இதிலும் டாப் ஸ்கோரர் தான். அதிலும் இடைவேளைக்குப் பிறகு முக்கால்வாசி சீன்களில் வசனமே பேசாமல் தனது முகபாவனையாலேயே நடித்து அசத்திவிட்டார். ஹீரோவை ஏமாற்றிவிட்டு, காதலனுடன் ஓட நினைத்தாலும் இவர் மீது ரசிகர்களுக்கு கோபமே வராமல் இருப்பது தான் அனிஷ்மாவின் நடிப்புக்கு சாட்சி.
இந்த இருவருக்கும் அடுத்து பட்டையக் கிளப்பியிருப்பவர் ரிஷிகாந்தின் தங்கச்சி கணவராக வரும் அப்துல் லீ தான். ரிஷியை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைப்பது, அனிஷ்மாவின் தாய்மாமா பக்ஸுடன் போதையில் மல்லுக்கட்டுவது, என மனுஷன் அசத்திவிட்டார்.

கோவில் பூசாரியாக சேத்தன், ரிஷிகாந்தின் அப்பாவாக ஏ.வெங்கடேஷ், அம்மாவாக சங்கீதா பாலன், அனிஷ்மாவின் அம்மாவாக ஷெல்லி கிஷோர், ரிஷிகாந்தின் தங்கச்சியாக வரும் நடிகை, முறைப்பெண்ணாக வரும் நடிகை என அனைவருக்குமே நச்சுன்னு வசனம் கொடுத்து நன்றாகவே நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கார் டைரக்டர். மைக்செட் இளைஞனுக்கும் ரிஷிகாந்தின் முறைப்பெண்ணுக்குமிடையே கண்களால் காதல் சீன், அருப்புக்கோட்டைக்காரி கேரக்டர், என ஏகப்பட்ட பேரை திரையில் காட்டி நினைவில் வைத்திருக்கும்படி செய்திருப்பது தான் டைரக்டர் ராஜா கருப்பசாமியின் சாமர்த்தியம். பெண்கள் பெருங்கூட்டத்தை வைத்து சமாளித்திருப்பது அதைவிட சாமர்த்தியம். தூத்துக்குடி வட்டார மொழி வசனம், பேரானந்தம்.
மியூசிக் டைரக்டர் பரத் சங்கர் தான் ராஜா கருப்பசாமியின் ஸ்கிரிப்ட்டுக்கு ஏகப்பட்டசீன்களில் தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்திருக்கிறார்.
அவசியம் குடும்பத்துடன் போய் இந்த ‘மொத ராத்திரி’யைப் பாருங்க.
அங்குசம் பார்வையில் ‘மொத ராத்திரி’ 55/100
–ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.