‘மிஸ்டர் எக்ஸ்’ சினிமா…! டைரக்டர் சொன்ன டாப் சீக்ரெட்…!
‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்ஷ்மண்குமார், ‘மேவ்ரிக் மூவிஸ்’ வினீத் இணைந்து தயாரித்து வரும் 17-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘மிஸ்டர் எக்ஸ்’ படம். மனு ஆனந்த் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஆர்யா, கெளதம் ராம்கார்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, அனகா, ரெய்சா வில்சன், சஞ்சனா சிங், காளிவெங்கட், ஜெயப்பிரகாஷ் என பெரிய ஸ்டார் பட்டாளமே உள்ளது.
ஒளிப்பதிவு : அருள் வின்செண்ட், இசை : திபு நைனன் தாமஸ், எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, ஸ்டண்ட் வடிவமைப்பு :’ஸ்டண்ட்’ சில்வா, பி.ஆர்.ஓ. : ஏ.ஜான்.

மெகா பட்ஜெட்டில், மிகபிரம்மாண்டமாக, ஹாலிவுட் சினிமாக்களுக்கு சவால்விடும் ‘மிஸ்டர் எக்ஸ்’சின் டிரெய்லர் வெளியீட்டு விழா,சென்னை வடபழனி நெக்சஸ் மாலில் உள்ள பளாஸோ தியேட்டரில் ஏப்ரல் 09-ஆம் தேதி மதியம் நடந்தது. இதில் பேசியவர்கள்…
கேமராமேன் அருள் வின்செண்ட், “இந்தப் படத்தில் நடித்தவர்கள், பணிபுரிந்த டெக்ச்னீஷியன்கள் அனைவருமே கொடுத்த காசுக்கு மேலாக கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். நாங்கள் ஷூட்டிங் நடத்திய அஜர்பைஜான் உட்பட எல்லா இடங்களுமே பஞ்சபூதங்களும் ஆக்ரோஷமாக வந்தன. அதையெல்லாம் சமாளித்து இப்படத்தினை முடித்து திரைக்கு கொண்டு வந்துள்ளோம்”.
ரைசா வில்சன்: “அரசியல் ரீதியாக சரியான படம் இது. சீரியசான டாபிக்காவும் மாறும், அறிவார்ந்த படமாகவும் இருக்கும்”.
தங்களை இந்தப் படத்திற்காக செலக்ட் பண்ணிய தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் நன்றி சொன்னார்கள் நடிகைகள் அனகாவும் அதுல்யா ரவியும்.
சரத்குமார்: “என்னிடம் மனு ஆனந்த் இந்தக் கதையை வெறுமனே சொல்லவில்லை. சில ஆராய்ச்சிப் பேப்ப்ர்கள், தரவுகளைக் கையில் வைத்திருந்தார். சில உண்மைச் சம்பவங்களைத் தான் இதில் கதையாக்கியுள்ளார். நம்ம நாட்டுக்காக வெளிநாடுகளில் உளவாளிகளாக இருந்து உயிரைவிடும் போராளிகளுக்கு பரம்வீர் சக்ரா போன்ற விருதுகளைக் கொடுக்க முடியாது. அதனால் அந்த வீரர்களுக்கு இது போன்ற படங்கள் தான் உயரிய விருது”.
மஞ்சு வாரியர்: “இதுவரை நான் செய்திராத அளவுக்கு இதில் ஆக்ஷன் சீன்களிலும் இறங்கியுள்ளேன். நான் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் கதைகள் போல இந்தக் கதை இல்லை. இதன் உலகமே வேற”.
கெளதம் ராம் கார்த்திக், “இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றதுமே நான் யோசித்தேன். ஆர்யா தான், “மச்சான் நீ பண்ணுடா” என உற்சாகப்படுத்தினார். மனு ஆனந்தின் உழைப்பும் திட்டமிடலும் அபாரமானது”.

ஆர்யா, “இந்தக் கதையை டைரக்டர் சொன்னதுமே நம்மள நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்தத் தயாரிப்பாளராவது படம் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஆனால் இதன் கதையை நம்பி, எங்களை நம்பிய லக்ஷ்மண்குமார் சாருக்குத் தான் எல்லா பெருமையும் சேரும். கண்டிப்பாக ஹாலிவுட் சினிமாக்களுக்கே சவால்விடும் இந்தப் படம்.”
டைரக்டர் மனு ஆனந்த்: “இந்தியாவில் 1965-லிருந்து 2020 வரை பல்வேறு காலகட்டங்களில் நடந்த ஏழு உண்மைச் சம்பவங்களைத் தான் கதையாக்கியுள்ளேன். இது பான் இந்தியா படம் இல்லை. தமிழர்களின் படம், தமிழ்ப்படம். இந்தக் கதையை ஆர்யாவிடம் சொன்னப்ப, “மச்சான் நான் இந்தக் கதைக்குத் தாங்குவேன். தயாரிப்பாளர் தாங்குவாராடான்னு கேட்டார். அந்தளவுக்கு ஹெவியான இன்வெஸ்ட் தேவைப்படும் கதை. ஆனால் தயாரிப்பாளர் லக்ஷ்மண் சாரும் மேவ்ரிக் மூவிஸும் இணைத் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாரும் துணிந்து நம்பிக்கையுடன் களம் இறங்கினார்கள். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன்.
பொதுவாக நம்ம எல்லோருக்கும் ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் யார்னு தெரியும். ஆனால் இந்திய உளவாளிகளை யாருக்கும் தெரியாது. தனது மனைவியிடம் கூட தான் யார் என்பதை அவர்களால் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. அப்படிப்பட்ட இருவரை நான் சந்தித்து அவர்கள் சொன்ன சம்பவங்களை வைத்துத் தான் இந்தக் கதையை எழுதியிருக்கேன். அந்த இருவரில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. அவர்களைப் பற்றி நான் வெளியே சொல்லவும் முடியாது. டைட்டில் கார்ட்டில் அவர்களுக்கு நன்றி கூட போட முடியாது. இந்தப் படத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் என நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் படம் நல்லா இருக்கும், எண்டெர்டெய்ன்மெண்டுக்கு கியாரண்டி. படம் நல்லா இருந்தா மீடியாக்கள் சப்போர்ட் பண்ணுங்க. நல்லா இல்லேன்னா சப்போர்ட் பண்ணாதீங்க. எந்தப் படமா இருந்தாலும் சரி, நல்லா இல்லேன்னா சப்போர்ட் பண்ணாதீங்க”.
— ஆண்டவர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.