நியோமேக்ஸ் : ஏலத்துக்கு எதிராக வீடியோ – கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதியரசர் பரதசக்ரவர்த்தின் முன்னெடுப்பில் நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பிளாட்டுகள் பொது ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில், மார்ச்-17 அன்று நடைபெற்ற விசாரணையில், அன்றைய தேதியில் தொடங்கிய ”முதல்நாள் ஏலத்தில் 500 பேர் வரையில் பதிவு செய்திருக்கிறார்கள். இதில், 400 பேர் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள். 100 பேர் வெளி நபர்கள்.” என்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும் முடிந்தவரை ஏலத்தில் பங்கேற்குமாறு நீதிமன்றம் எதிர்பார்க்கும் நிலையில், நாங்களும் ஏலத்தில் பங்கெடுத்து நிலத்தை தேர்வு செய்தாலும், வித்தியாசத்தொகையை கட்ட சொல்லி நிர்ப்பந்தித்தால் என்ன செய்வது? ஒன்று இத்தனை சதவிகிதம் அளவுக்கு பாண்டுகளின் மதிப்பில் நிலங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதாக வரையறுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த ஏலம் எப்படி போகும்? எவ்வளவுக்கு போகும்? என்பதையெல்லாம் பார்க்காமல் நீதிமன்றம் அப்படி எந்த ஒரு உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்பதே நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் பதிலாக இதுவரையில் இருந்து வருகிறது.

நீதிமன்றம் இறுதியாக கெடு விதித்திருந்த 2025, அக்-8 ஆம் தேதிக்குப் பிறகு புகார் அளித்தவர்கள், அல்லது இதுவரை புகார் அளிக்காதவர்களையும் இ.எம்.டி. கட்டண சலுகையுடன் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, எம்ஸ்டார் ரெரா அசோசியேசன் சார்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் யாராக இருந்தாலும், புகார் கொடுத்தவர்கள் புகார் கொடுக்காதவர்கள் யாராக இருப்பினும் ஏலத்தில் பங்கேற்க சொல்லுங்கள். செட்டில்மெண்ட் சமயத்தில் உங்களது கைவசம் உள்ள ஆவணங்களிலிருந்து நீங்கள் உண்மையான பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களாக இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பிக்கும் என்பதாக பதில் அளித்திருக்கிறார்.
அடுத்து, புதியதாக புகார் தெரிவிப்பது தொடர்பாக தனக்கும் பல்வேறு கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தவர், இது தொடர்பான பட்டியலை தனியே பராமரிக்குமாறு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசிடம் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். 2025-அக்-8 ஆம் தேதிக்குப்பிறகு, மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால் வழியே புகார் அனுப்பி வைத்தவர்களின் பெயர்கள் இணைப்பு பட்டியலாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த பொது ஏலத்தை தற்போது நடத்தும் எம்.எஸ்.டி.சி. யின் அலுவலர்கள், மார்ச்-23 மற்றும் மார்ச்-24 ஆகிய இரண்டு நாட்களில் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் உதவி மையம் அமைத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தகுந்த ஆலோசணைகளை வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த திருச்சியை சேர்ந்த சுந்தர்தியாகராஜன் என்பவர், “வழக்கறிஞர் அழகர்சாமி என்பவர், இந்த ஏலத்தில் யாரும் கலந்துகொள்ள கூடாது என்ற நோக்கில் தவறான தகவல்களை யூடியூபில் பரப்பி வருகிறார்” என்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். வழக்கறிஞர் அழகர்சாமி அதனை மறுத்து, தனது வழக்காடிகளுக்காக வீடியோ பேசி வருவதாக குறிப்பிட்டார். மேலும், பார்ட்டி இன் பெர்சனாக உரிய அனுமதி இல்லாமலேயே, நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் இப்படி பேசுவதை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை வழக்கறிஞர் அழகர்சாமி முன்வைத்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கமிஷன் அமையுங்கள் நான் அதில் எனது வீடியோக்களை சமர்ப்பிக்கிறேன். அவர்களும் அவர்களுடைய வீடியோவை சமர்ப்பிக்க சொல்லுங்கள் என்பதாக வாதத்தையும் அவர் முன்வைத்தார். நிறைவாக, நீதியரசர் பரதசக்ரவர்த்தி ஏல நடைமுறைக்கு எதிராக யாரும் பதிவிடாதீர்கள் என்று வழக்கறிஞர் அழகர்சாமிக்கும் இதுபோன்ற வீடியோக்களை கடந்து செல்லுங்கள் என்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணையை மார்ச்-25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
விரிவான வீடியோவை காண
நியோமேக்ஸ் ! ஏலத்துக்கு எதிராக வீடியோ – கடுப்பான நீதியரசர் பரதசக்ரவர்த்தி !
அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.