“தியேட்டர் கேண்டீன்களுக்காகத் தான் படம் தயாரிக்கணும் போல” – ‘நிழற்குடை’ விழாவில் விளாசிய ஆர்.கே.செல்வமணி!
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
தமிழ்நாடு மற்றும் புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரொடக்சன் நிறுவனம் பெற்றுள்ளது. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது..
இதனால் ‘நிழற்குடை’ யின் இசை& டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 24 இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாதக சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய சிலர்…
*இயக்குநர் சிவா ஆறுமுகம்*
“இந்தப் படத்தில் இன்றைக்கு தேவையான கருத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கும் பிடிக்கும் விதமாக நான் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்து ஆதரவாக இருந்தனர்”.
*நாயகன் விஜித்*
“தேவயானி இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்று சொன்னதும் கொஞ்சம் எனக்கு படபடப்பாகத்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் படப்படிப்பிலிருந்து அவர் என்னை எளிதாக உணர வைத்து விட்டார். இந்தப்படத்தில் நான் நடித்தது எல்லாமே பல சீனியர் நடிகர்களுடன் தான்”.
*நாயகி கண்மணி*
“என்னுடைய முதல் சினிமா மேடை இது. சின்னத்திரைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் எனக்கு நீங்கள் கொடுத்து வந்த அதே அன்பையும் ஆதரவையும் வெள்ளித்திரையிலும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். படம் சிறிய படமாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே இதற்கு மிகப்பெரிய கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இது இருக்கும்” .
*நடிகர் ராஜ்கபூர்*
“இப்போது வரும் படங்களில் எல்லாமே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் இது எண்பதுகளில் வந்தது போன்ற குடும்ப அம்சத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று வேலை வாய்ப்பு தேடும் ஒரு தம்பதியினரின் சிரமத்தை இது சொல்கிறது. எல்லோரும் வெளிநாட்டுக்கு சென்று தான் வேலை பார்க்க வேண்டுமா என்கிற கேள்வியையும், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற படிப்பினையையும் இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன்”.
*நடிகர் நகுல்*
“இயக்குனர் கே.எஸ் அதியமான், சிவா ஆறுமுகம் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த படம் நிச்சயம் ஒரு கருத்துள்ள படமாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். கே.எஸ் அதியமான் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவரால் தான் நாங்கள் சினிமாவுக்கு வந்தோம். தமிழர்களாகவே மாறிவிட்டோம். என்னுடைய அக்காவின் கடின உழைப்பை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். இப்போது என் அம்மா இல்லை என்றாலும் அக்கா தேவயானி உருவில் அம்மாவை பார்க்கிறேன். இந்தக் கதை கூட அக்காவை கொஞ்சம் தொடர்புபடுத்தும் விதமாகத்தான் இருக்கும்”.
*தயாரிப்பாளர் மதியழகன்*
” இந்தப் படம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த படத்தை வெளியிட முன் வந்த பிளாக் பஸ்டர் நிறுவனத்திற்கு நன்றி. சின்ன படம், பெரிய படம் என்று பட்ஜெட்டை வைத்து சொல்வதை விட ஓடும் படம் பெரிய படம், ஓடாத படம் சின்ன படம் என்று தான் நான் சொல்வேன்” .
*இயக்குநர் ராஜகுமாரன்*
“இந்த நிழற்குடை எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக, எல்லோரும் பார்க்கும் ஒரு நல்ல படமாக இருக்கும். நல்ல படங்களை காண்பது என்பதே அரிதாக இருக்கிறது. தன்னை 30 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய அதே குழுவினருடன் மீண்டும் தேவயானி இணைந்து நடிப்பதும் மீண்டும் ஒரே குழுவினராக அவர்கள் இங்கே அமர்ந்திருப்பதும் ஒரு மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய நீண்ட நெடிய பயணத்தில் எவ்வளவோ நிழல்கள் நம் பயணத்திற்கு துணையாக இருந்திருக்கின்றது. நிழல் இல்லாத நேரத்தில் கூட சட்டென்று ஒரு குடையாக எத்தனையோ நல்ல உள்ளங்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் திரும்பி பார்க்கும் ஒரு விஷயமாக இந்த நிழற்குடை இருக்கும் என்று நம்புகிறேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
*நடிகை நமீதா*
“இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இப்போது நாட்டில் நடக்கக்கூடிய ஒரு நிஜம் தான். இந்த சமயத்தில் என் வீட்டில் இருக்கும் என் மாமியார், மற்றும் ஆயாம்மாக்கள் இருவருக்கும் நன்றி சொல்லணும். ஆயாம்மா பணிக்கு இப்போது நல்ல மதிப்பும் சம்பளமும் இருக்கிறது. அம்மா இல்லாத இடத்தில் அவர்தான் அம்மா. இந்த படத்தில் அதை கொஞ்சம் த்ரில்லிங் அம்சங்கள் சேர்ந்து காட்டி இருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் பல இடங்களில் தங்களுடன் அதை தொடர்பு படுத்திக் கொள்வார்கள்”.
*நடிகை தேவயானி*
“இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள்.
சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடிக் இருக்கிறது”.
*தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி*
“எனக்கும் இது ஒரு குடும்ப விழா தான். ஏன்னா இயக்குநர் கே.எஸ்.அதியமான் என்னுடைய ஊர்க்காரர். தற்போது அவர் இயக்கி வரும் படத்தை நான் தயாரித்து வருகிறேன். பாதி பட வேலைகள் முடிந்து விட்டன. இந்த படத்தில் பிரிவியூ காட்சி திரையிட்ட போதும் சரி, இந்த நிகழ்வின் போதும் சரி.. நடிகை தேவயானி தனது சொந்த வீட்டு விசேஷம் போல அனைவரையும் வரவேற்று உபசரிப்பதை பார்க்க முடிந்தது. இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகள், தாங்கள் நடித்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வர தயங்குகிறார்கள். திரையரங்குகளில் படம் பிக்கப் ஆகும் வரை தூக்காமல் ஓட்டுவது நம் கையில் இல்லை. இன்று அது தியேட்டர்காரர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு காட்சி நன்றாக ஓடவில்லை என்றாலே அடுத்த காட்சியில் படத்தை மாற்றி விடுகிறார்கள்”.
*ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி*
“நல்ல படம் வர வேண்டும் என்று சொல்கிறோம். நல்ல படத்தை ஓட வைத்தால் தானே அடுத்து இன்னொரு நல்ல படம் வரும். சமூகத்திற்கு தேவையான கருத்தம்சம் கொண்ட ஒரு படத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இதை ஓட வைத்தால் தான் அடுத்தவர்கள் நல்ல படம் எடுக்க முன்வருவார்கள். இப்போதைய சூழலில் தியேட்டர்கள் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன. டிக்கெட் கட்டணத்தை விட அவர்களுக்கு கேண்டீன் வியாபாரம் தான் மிகப்பெரியதாக தெரிகிறது. அதனாலேயே அதற்கேற்ற மாதிரியான படங்களை தயாரிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கிறது .

உற்பத்திக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாத சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பேர் யாரென்றால் ஒருவர் விவசாயி.. இன்னொருவர் சினிமா தயாரிப்பாளர்.. இருவருமே தமிழக மக்களை வாழவைக்கிற, சிந்திக்க வைக்கின்ற, சிரிக்க வைக்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக மாறினால் மட்டுமே தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க முடியும. கத்திரி வெயிலுக்கு எப்படி குடை உதவியாக இருக்குமோ, அதுபோல கத்திரி வெயிலாக காய்ந்து கிடக்கும் இந்த தமிழ் சினிமாவிற்கு இந்த நிழற்குடை படம் ஒரு சிறப்பாக அமையும்”.
*இயக்குநர் பாக்யராஜ்*
“சினிமாவைப் பொறுத்தவரை சில பேருக்கு மட்டும் இவர்களுக்கெல்லாம் எப்படி படம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படும். அதேபோல சில பேரை பார்க்கும்போது இவர்களுக்கு ஏன் படமே கிடைப்பது இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி இரண்டாவது லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குனர் கே.எஸ் அதியமான். ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும் என்று சொல்வது போல, சினிமாவில் அதிர்ஷ்டம் சில நேரம் திறமைசாலிகளுக்கு கை கொடுக்காது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தின் இயக்குனர் சிவா ஆறுமுகத்திற்கு கே.எஸ் அதியமான் உள்ளிட்ட படக் குழுவினர் நிழற்குடையாக இருக்கிறார்கள். அதுபோல இந்தப் படத்திற்கு நிழற்குடையாக தேவையானி நிற்கிறார்”.
*நாதக சீமான்*
“நான் வரும்போது என்னை வரவேற்ற தேவயானி, நீங்கள் வந்ததற்கு நன்றி என்றார். ஆனால் நான் சொன்னேன் நீங்கள் இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி என்று. காரணம் முன்பு கே.ஆர் விஜயா, அடுத்து ரேவதி ஆகியோரைப் போல இப்போது தேவயானி நடித்தால் அது நல்ல படமாகத் தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்யும் விதமாக நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். பெரிய படம் சின்ன படம் என்கிற அளவு எல்லாம் இல்லை. ஓடுகிற படம், ஓடாத படம் அவ்வளவுதான்.. தெலுங்கில் ஆறு கோடியில் எடுக்கப்பட்ட கோர்ட் என்கிற படம் 60 கோடி வசூலித்துள்ளது. இந்த நிழற்குடை படம் நிச்சயம் வெல்லும். தியேட்டர்கள் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அதன் தாய் தான். இந்த படம் தாய்மையை பற்றி சொல்கிறது. நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உங்களுடைய தாய் தான். இந்தத் தாய்மை கதாபாத்திரத்தை தாங்கி நிற்கின்ற தகுதி நம் தேவயானிக்கு இருக்கிறது. மக்களை தியேட்டருக்கு அழைத்து வருவதற்கு அவரே போதும்”.
*தொழில் நுட்பக் குழு*
தயாரிப்பு: ‘தர்ஷன் பிலிம்ஸ்’ ஜோதிசிவா,
கதை திரைக்கதை இயக்கம்: சிவா ஆறுமுகம்
வசனம் : ஹிமேஷ்பாலா,
இசை : நரேன் பாலகுமார்
ஒளிப்பதிவு :ஆர் பி குருதேவ்
கலை இயக்கம் : விஜய் ஆனந்த்
படத்தொகுப்பு :ரோலக்ஸ்
மக்கள் தொடர்பு:
அ. ஜான் & தேன்மொழி
— மதுரை மாறன்.