அங்குசம் பார்வையில் ‘பரமசிவன் –பாத்திமா’
தயாரிப்பு & டைரக்ஷன்; ‘லக்ஷ்மி கிரியேஷன்ஸ்’ இசக்கி கார்வண்ணன். ஆர்டிஸ்ட் : விமல், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம்.சுகுமார், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, கூல்சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா லட்சுமி, சேஷ்விதா, காதல் சுகுமார், வீரசமர், ‘ஆறு’ பாலா. ஒளிப்பதிவு : எம்.சுகுமார், இசை : தீபன் சக்ரவர்த்தி, எடிட்டிங் : புவன், ஸ்டண்ட் : தினேஷ் காசி. பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.
”கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிராமம் சுப்பிரமணியபுரம். இந்த கிராமத்திலிருந்து பிரிந்தது தான் சுல்தான்பேட்டை, யோக்கோபுரம் கிராமங்கள்” லொக்கேஷனோடு, டைரக்டரின் வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பித்ததுமே நமக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. கண்டிப்பாக இது தீவிர இந்துத்வா வாய்ஸ் படமாகத் தான் இருக்க முடியும் என்று. சுப்பிரமணியபுரத்தில் இந்துவாக இருக்கும் மனோஜ்குமாருக்கு கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் வாத்தியார் வேலை கிடைத்ததால், மதம் மாறுகிறார். தனது மகள் தமிழ்ச்செல்விக்கு [சாயாதேவி] பாத்திமா என பெயர் மாற்றுகிறார். இவரின் குடும்பத்திற்கே பெயர் மாற்றம் செய்து ஞானஸ்நானம் செய்து வைக்கிறார் பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கர்.
பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி. இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.
இதன் பிறகு மட்டுமல்ல, படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை கிறிஸ்தவர்களை மதவெறி பிடித்தவர்களாகக் காட்டி மதநல்லிணக்க பூமியான தமிழ்நாட்டில் விஷத்தை விதைக்கும் கேடுகெட்ட வேலையில் இறங்கியுள்ளார் இசக்கி கார்வண்ணன். இந்தப் படத்தை சங்கிகளின் புது ‘வளர்ப்பு’, சீமானும் பழைய வார்ப்பு எச்.ராஜாவும் நியூ டிசைன் நடிகை கஸ்தூரியும் பார்த்து புளகாங்கிதப்பட்டார்கள் என்றால் இப்படத்தின் பேராபத்தை உணர்ந்து கொள்ளலாம்.
இப்படத்தை தமிழர்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும்.
— கரிகாலன்.