கடைசி வரைக்கும் கால்வயிற்று கஞ்சிதான் நிலையா ? பரிதவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் !
தமிழகத்தில், கடந்த 14 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை வாழ்க்கை கல்வி கட்டிடக்கலை தோட்டக்கலை ஆகிய பாடங்களை கற்றுத் தருகின்ற, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை, மனிதாபிமானம் கொண்டு இந்த பட்ஜெட்டிலேயே முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதாக, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை விடுக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சட்டசபை காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது தான் என்பதால் இதிலேயே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றார்கள்.
2016 மற்றும் 2021 என இரண்டு முறை தேர்தல் வாக்குறுதி அளித்து உள்ளதால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுத்து இந்த பட்ஜெட்டிலேயே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராடி வருகிறார்கள்.
10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களிடம், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பணி நிரந்தரம் செய்வதாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்ற மனது வைத்தால் போதும்.

நான்கு ஆண்டே முடிய போகிறது. ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுவரை வெறும் 2,500 ரூபாய் சம்பள உயர்வு மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதுகூட பணி நிரந்தரம் கேட்டு 2023 ஆண்டில் செப்டம்பர் மாதம் 25 ந்தேதி முதல் அக்டோபர் 4 ந்தேதி வரை பத்து நாட்கள் தொடர் போராட்டம் நடத்திப்பட்டதன் விளைவு தான்.
அப்போது 2500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என இரண்டு அறிவிப்பை மட்டும் வெளியிட்டு போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்ட பள்ளிக்கல்வி அமைச்சர் அதைகூட முழுமையாக இன்னும் நிறைவேற்றவில்லை.
மருத்துவ காப்பீடு என்ன ஆனது என்று யாரைக் கேட்பது என்றே தெரியவில்லை. அதுபோல் சம்பள உயர்வு 2500 ரூபாய் என சொன்னாலும், அதை பழைய 10ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து மொத்தமாக 12,500 ரூபாயாக கொடுக்காமல், தனித்தனியாகவே இதுவரை பட்டுவாடா செய்வதும் வேதனை அளிக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்றைய விலைவாசி உயர்வு காலத்தில் இந்த சொற்ப சம்பளம் 12,500 ரூபாயை வைத்து கொண்டு என்ன செய்வது என பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தவிக்கின்றார்கள். மே மாதம் சம்பளமும் இல்லாமல் என்ன செய்வார்கள் என தமிழ்நாடு அரசாங்கம் கருணை காட்ட வேண்டும். பணி நிரந்தரம் செய்து இருந்தால் இப்படி கஷ்டப்படுவார்களா என்பதை நினைத்து பார்த்து முதல்வர் ஸ்டாலின் பரிவு காட்ட வேண்டும். எனவே, இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கிய 46,767 கோடியில் இருந்து, காலமுறை சம்பளம் வழங்குவதற்கு போதுமான 300 கோடியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி செய்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் இந்த ஐந்தாண்டு காலத்திலேயே நிறைவேற்ற வேண்டும்.” என்பதாக கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.