ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் !
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலை மற்றும் மாலை நேர ரயில் சேவை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று மதுரை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அலுவலகம் முன்பு 12.06.2026 வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை திண்டுக்கல்–குமரி அகல ரயில் பாதை திட்ட போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார்.
போடிநாயக்கனூரில் இருந்து மதுரை நோக்கி காலை நேரத்தில் ஒரு பயணிகள் ரயிலும், மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி மாலை நேரத்தில் ஒரு ரயிலும் இயக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அவர்களிடம் வழங்கப்பட்டது. அதில், போடிநாயக்கனூர்–மதுரை இடையே காலை நேர ரயில் சேவை மற்றும் மதுரை–போடிநாயக்கனூர் இடையே மாலை நேர ரயில் சேவை அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், போடிநாயக்கனூர் ஏலக்காய் நகர ரயில் சங்கம் சார்பிலும் கோரிக்கைகள் மின்னஞ்சல் மூலமாக ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
(மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதை முகநூல் பக்கத்திலிருந்து)






Comments are closed, but trackbacks and pingbacks are open.