பணிநிரந்தரம் கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்த பகுதிநேர ஆசிரியர்கள் அமைச்சரிடம் மனு:
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அவர்களிடம் பகுதிநேர ஆசிரியர்கள் அரக்கோணம் சட்டமன்ற அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தவெக தேர்தல் வாக்குறுதி 93-படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை 24-08-2026 அன்று நடக்க இருப்பதை முன்னிட்டு முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்காந்தி மற்றும் அஸ்வினி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன் விவரம் :
இதில் தமிழக அரசு பள்ளிகளில் 5 ஆண்டுகள் நிறைவு செய்த தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 16 ஆண்டுகளாக ரூ. 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 11,773 பேரை பணி நிரந்தரம் செய்ய முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களில் 16 ஆண்டுகளாக தற்காலிகமாக பணி புரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,







Comments are closed, but trackbacks and pingbacks are open.