பாவேந்தர் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வாழ்ந்தவர் – முனைவர் சீமான் இளையராஜா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாவேந்தர் பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 இல் பாண்டிச்சேரியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். பாவேந்தர் தமிழ் மண்ணில் பிறந்தவர். தமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்தவர். தமிழ் இலக்கண, இலக்கியங்களின் போக்கையும் வளர்ச்சியையும் கற்றுணர்ந்தவர்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

தமிழனின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியவர். தமிழை உயிராகவும், உடலாகவும், உணர்வாகவும் வடித்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனுக்கு உண்டு. தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் சான்றோருக்கும் பெருமை சேர்த்தவர். பாவேந்தரின் படைப்புகளிலும், சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும் தமிழ் உணர்வையும், தமிழ்ப் பண்பாட்டையும் காணலாம்.

தமிழ்ச் சமுதாய எழுச்சிக்கும், சீர்திருத்தத்திருக்கும் குரல் கொடுத்தவர். தமிழை முறையாகப் பயின்றவர். தமிழ் உணர்வால் தமிழாசிரியராகப் பணி புரிந்து, தமிழ் வளர்த்த சான்றோர்களின் நட்புறவில் திளைத்து, பகுத்தறிவு இயக்கத்தில் வளர்ந்து, தனித்தமிழ் உணர்வில் கனிந்து தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் வாழ்ந்தவர்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெணகள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’ போன்றவை தமிழர்கள் மனதில் நீக்கா இடம் பிடித்தவை.

பாவேந்தருக்கு தமிழ் உணவுர்கள் எழக்காரணமாக இருந்தவை, அவரது பண்பாட்டுப் பின்னணியும், அவர் வாழ்ந்து வந்த சூழலுமாகும். இந்திய விடுதலைக்கு முன்னர் இந்திய நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சி இருந்தது. தமிழகத்தில் தாய் மொழியான தமிழைப் பயன்படுத்த முடியாத நிலையை உணர்ந்த பாவேந்தரின் மனதில் தமிழ் உணர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விடுதலை பெற்ற பின்னரும் வடமொழித் திணிப்பு பாவேந்தரின் தமிழ் உணர்வை மேம்படுத்தியது.

காலங்காலமாக வடமொழியினருக்கும், தமிழ் மொழியினருக்கும் நிகழ்ந்து வந்த பண்பாட்டு மோதலும் மொழிப்போரும் பாவேந்தரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மொழிபோரின் தாக்கம் பாவேந்தரின் தமிழ் உணர்வுக்கு காரணமாக அமைந்தது. அன்னியர் ஆட்சியில் பிறமொழிகளின் ஆதிக்கம் ஓங்கிய நிலை விடுதலைக்குப் பின்னரும் வடமொழியின் ஆதிக்க உயர்வுக்கான இந்தித்திணிப்பு முயற்சிகள் போன்றவை பாவேந்தரின் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியது.

பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் தமிழ் மொழியை உடல், உயிர், உணர்வு எனப்பாவித்து கவிதை படைத்ததோடு நின்று விடாமல், தமிழில் கல்வி, தமிழரின் ஆட்சி, தமிழ் மேம்பாடு, தமிழியக்கம், தமிழ் நடை, தமிழ் உணர்வு, தமிழ்ப் பத்திரிக்கை தமிழ்வழி அறிவியல் எனப் பல நிலைகளில் தமிழை உயர்த்த வேண்டும்; வளப்படுத்த வேண்டும்; காக்க வேண்டும்; தமிழின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் எல்லா முயற்சிகளையும் முளையிலேயே திருகி எறிய வேண்டும் என்ற உணர்வு பாவேந்தரின் படைப்பிலும், பேச்சிலும், எழுத்திலும் தோன்றின.

மொழி வளர்ச்சி என்பது சமுதாய வளர்ச்சியோடு இணைந்தது. சமுதாயம் வளர்ச்சியடையும் பொழுது மொழியும் இணைந்து வளர்ச்சியடையும். தாய் மொழியின் வழியாக சமுதாய வளர்ச்சி உருவாகின்ற போது சமுதாயத்தின் பண்பாடு வளர்ச்சி பெறும். தாய்மொழியில்லாத பிற ஆதிக்க மொழிகளின் வழியாகச் சமுதாய வளர்ச்சி நடைபெறும் போது அச்சமுதாயத்தின் மொழியும், பண்பாடும் அழியலாம். இத்தகைய சூழலில், தாய்மொழி வளர்ச்சி இன்றியமையாதது. பிறமொழி ஆதிக்கச் சூழலில் இவ்வளர்ச்சி திட்டமிட்ட நிறுவனச் செயல்பாடுகளினாலும், அரசியல் இயக்க செயல்பாடுகளினாலும் அமைய வேண்டியதாகிறது. இதன் வழியாக ஒரு மொழியை மற்றொரு மொழியுடன் திணித்து அதன் பண்பாட்டை அழிக்க நினைக்கின்றனர்.

ஒரு நாட்டில் ஒரு மொழி மட்டும் பேசப்பட்டு வந்தால், அங்கு மொழி வளர்ச்சி மட்டுமே இருக்கும். ஆனால் பல மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில் எந்த மொழியை எந்தச்சூழலுக்குப் பயன்படுத்துவது என்பது ஒரு சிக்கலை உருவாக்கும். அத்தகைய சூழலில் ஆட்சிமொழி, கல்விமொழி என்று சில மொழிகள் முடிவு செய்யப்படும். இத்தகைய சூழல்களில் அந்தந்த நாட்டு மொழிகளை ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது அவசியமான செயல்பாடாகும். பிறமொழி ஆதிக்கச் சூழல், மொழிக் கலப்பின் வழியாகத் தாய் மொழியின் அழிவிற்கும் தாய் நாட்டுப் பண்பாட்டு அழிவிற்கும் காரணமாக அமைந்துவிடும். ஒரு நாட்டின் மொழிக்கொள்கைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைய வேண்டும். அவ்வாறான மொழிக்கொள்கைகளை உருவாக்க, மொழி, சமுதாயம் போன்றவற்றில் உள்ள அடிப்படைத் தேவைகள் முதலில் கண்டறியப்பட வேண்டும்.

ஒரு நாட்டில் நிலவுகின்ற மொழிகள், அவை பயன்படுத்தப்படும் இடங்கள், துறைகள் அம்மொழி பேசும் மக்கள், அவர்களின் மனப்பாங்குகள், சமுதாயசூழல், அரசியல் நிலை, நடைமுறையில் உள்ள மொழிப்பிரச்சனைகள் முதலியவற்றை அறிந்து, அவற்றிற்கு ஏற்ப மொழிக்கொள்கைளை உருவாக்க வேண்டும். ஒரு மொழியை தாய் மொழியாகப் பேசும் சமுதாயத்தினர் மேல் திணித்தல், என்பது எதிர்ப்பை ஏற்படுத்தும்.

பாவேந்தரின் மொழிப்பற்று

“மொழியே தானே மூச்சு மொழியே தானே உணர்வு

                            மொழியே தானே வாழ்வு மொழியே தானே இன்பம்

                            மொழியே தானே மனிதன் மொழியே தானே விழிகள்.

                            மொழியே தானே உலகம் மொழியின்றேல் நாம் யாரோ?

என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப நாம் தமிழை மூச்சாகவும், உணர்வாகவும், வாழ்வாகவும், இன்பமாகவும், விழியாகவும், பாதுகாத்து வாழ்ந்து வருகின்றோம்.

“தமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழ்வார்

                            தமிழ் மீண்டால் தான் தமிழ்நாடு மீளும்”

என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் விடுதலைக்காகவும், தமிழ் வாழ்விற்காகவும், வாழ்நாளெல்லாம் போர்க்குரல் கொடுத்தவர். மொழிக்கலப்பு மொழித் திணிப்பு, பண்பாட்டுக் கலப்பு என்ற நிலை வரும் போது தமிழன் மொழி உணர்வாளனாகவும் மொழிப்போர் வீரனாகவும் மாறி விடுகின்றான்.

“தமிழாய்ந்த தமிழன் தான்

                                தமிழ்நாட்டின் முதலமைச்சராய்

                                வருதல் வேண்டும்

                                தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில்

                                கட்டாயம் என்பதொரு

                                சட்டம் செய்ய!”

என்று மொழிக்கொள்கையும், அரசியல் அமைப்பின் வழியாக வெற்றியடையும் என்பதையும், அதைச் சட்டம் வழி நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அன்றே பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாவேந்தரின் தமிழ் உணர்வு எல்லா நிலைகளிலும் எழுச்சியுற்றிருப்பதை அவரது பாடல்கள் பறைச் சாற்றுகின்றன. இதனால் தான் அவர் தமிழினக் கவிஞராக மிளிர்கிறார். இயற்கையைப் பாடும் போதும், பறவையைப் பாடும் போதும், மாந்தர்களைச் சித்தரிக்கும் போதும், கருவிகளைக் குறித்துப் பாடும் போதும் தமிழ் அங்கு இழையோடுவதைக் காணமுடியும். தமிழுணர்வில் தழைத்தோங்கிய பாவேந்தர் தமிழ் உணர்வை வெளியிடுவதோடு மட்டும் தன் பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழரின் உணர்வுக்கும், தமிழரின் எழுச்சிக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் வித்திட்ட பல சான்றோர்களைப் பாடியுள்ளார். இராவணன், திருவள்ளுவர், பாரதியார், தந்தை பெரியார், அண்ணாமலையார், தண்டபாணி தேசிகர் ஆகிய பல தமிழ்ச் சான்றோர்களின் பெருமைகளைப் பாடியுள்ளார். பாரதியார் கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும் பாடினார். பாவேந்தர் கம்பனைப் பாடவில்லை. வள்ளுவனைப் பாடுகிறார் வடநாட்டு ஆதிக்க வெறியால் எழுந்த இராமன் காவியத்தைத் தமிழில் தந்ததால் கம்பனைப் பாரதிதாசன் பாடவில்லை. பாவேந்தரின் பாடலில் வள்ளுவருக்குத் தனியிடமுண்டு.

திருவள்ளுவரின் கவித்திறத்தையும், கருத்துச் செறிவையும் “வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்” என்ற கவிதையில்…

“தெள்ளு தமிழ் நடை

                     சின்னஞ்சிறு இரண்டடிகள்

                     அள்ளுதொறும் சுவை

                     உண்ணும் தொறும் உணர்வாகும் வண்ணம்

                     கொள்ளும் அறம் பொருள்

                    இன்பம் அனைத்தும் கொடுத்த திரு

                    வள்ளுவனைப் பெற்ற

                     தாற் பெற்றதே புகழ் வையகமே”

என்றும்,

“திருவள்ளுவரின் திருக்குறள் தன்னை

                     கசடறக் கற்க கற்றே

                    இசையொடு தமிழர் இனிது வாழ்கவே”

Apply for Admission

என்றும் திருக்குறளைக் கசடறக் கற்க, கற்று இசையோடு தமிழர் இனிது வாழ்கவே” எனப் பாவேந்தர் திருக்குறளின் பண்பாட்டை விளக்குகிறார்.

தமிழை வளர்த்தல் ஒன்று, சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர். 1929-ஆம் ஆண்டே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை, பாவேந்தரின் பாடல்கள்தான்.

சாதி ஒழிப்பும் தமிழ் வளர்த்தலும்

“சாதி ஒழித்திடல் நன்று – நல்ல

                     தமிழ் வளர்த்தல் மற்றொன்று

                     பாதியை நாடு மறந்தால் – மற்றப்

                     பாதி துலங்குவதில்லை

                     சாதி களைந்திட்டஏரி – நல்ல

                     தண்டமிழ் நீரினை ஏற்கும்

                     சாதி பிணிப்பற்ற தோளே – நல்ல

                     தண்டமிழ் வாளினைத் துக்கும்”

சாதியை ஒழித்தல் ஒரு செயல், தமிழை வளர்த்தல் மற்றொரு செயல். சாதி என்ற குப்பையைக் களைத்தல் ஏரிதான் தீந்தமிழ் என்ற நீரை ஏற்கும் தன்மைபெறும். சாதி என்ற குறையில்லாத் தோள் தான் தமிழ் என்ற வாளை ஏந்தும். இத்தகைய கருத்தையே பாரதியின் உள்ளம் பறைசாற்றியது என்று பாவேந்தர் சாதி ஒழிப்பையும் தமிழ் வளர்த்தலையும் குறிப்பிடுகிறார்.

“உயர்ந்த சாதி, கீழ்ச்சாதி என்னும்

                       வேற்றுமைகள் தமிழ்க்கில்லை; தமிழர்க்கில்லை

                       பொய்க் கூற்றே சாதி எனல்”

உலகில் உயர்ந்த சாதி என்றும், கீழ்சாதி என்றும் தமிழ்க்கும் இல்லை, தமிழர்க்கும் இல்லை இவை அனைத்தும் பொய்க் கூற்றே எனப் பாவேந்தர் குறிப்பிடுகிறார்.

பாவேந்தர் பாடல்களில் தமிழ் உணர்வின் வெளிப்பாடும், தமிழ் காத்தல், வளர்த்தல் நிலைப்பாடும் எப்பொழுதும் மேலோங்கி நிற்கும்.

             “எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்

               இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

              செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்

              எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்

               இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்”

தமிழைக் கால வளர்ச்சிக்கு ஏற்ப வளர்க்க வேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்ட பாவேந்தர் அதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளார். எது வேண்டும், எது வேண்டாம் எனப் பட்டியலிட்டு தமிழ் வளர்ச்சிக்கு வழி காட்டியவர் பாரதிதாசன். மொழியை மதத்தோடு சாய்த்தல் வேண்டாம். மொழியை உயர்ந்ததெனப் போற்றி வீணாய் காலம் கழிக்க வேண்டாம் எனவும், எளிய நடையில் நூல் எழுத வேண்டும், புதிய தமிழுக்கான இலக்கணம் எழுத வேண்டும். துறைசார் நூல்களைப் படைக்க வேண்டும். தமிழ்ப் படைப்புக்களை வெளியிடக் கழகங்கள் வேண்டும். நூற்களை இலவசமாய்த் தரவழி வகுக்கவேண்டும், தமிழனுக்கும் படிப்பில்லையாயின் நாம் நாணித் தலை குனியவேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

“தமிழர்க்குத் தமிழ் மொழிற் சுவடிச்சாலை

           சர்வகலா சாலையப் போல் எங்கும் வேண்டும்

           தமிழிலிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல

           தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்”

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு நல்ல நூல்கள் தேவை. நல்ல நூல்கள் தேவை என்றால் நூல்களைப் பெறுவதற்கான சுவடிச்சாலைகளும் தேவை. தமிழ் வளர்ச்சியில், தமிழ் காத்தலில் நாட்டம் கொண்ட பாவேந்தர் நூலகத்தின் பெருமைகளைக் கூறி தமிழ் நூல்களைக் கொண்ட சுவடிச் சாலைகள் வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

பாவேந்தர் பார்வையில் பத்திரிக்கைகள்

தமிழை வாழ்வாகவும், தமிழை உயர்வாகவும் தமிழை மூச்சாகவும், தமிழை உயிராகவும் தமிழருக்கு உணர்த்தியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

“காரிருள் அகத்தில் நல்ல

                  கதிரொளி நீதான்! இந்தப்

                 பாரிடைத் துயில்வோர் கண்ணில்

                 பாய்ந்திடும் எழுச்சி நீதான்!

                 ஊரினை நாட்டை இந்த

                 உலகினை ஒன்று சேர்க்கப்

                 பேரறிவாளர் நெஞ்சில்

                 பிறந்த பத்திரிகைப் பெண்ணே”

என்று பாவேந்தர் பார்வையில் பத்திரிகை எழுச்சியூட்டும் ஒரு ஊடகமாகவும், தமிழ் உணர்வை நிலை நாட்டும் ஊடகமாகவும் தோன்றுகிறது. கதிரொளி தருவதாகவும், எழுச்சி தருவதாகவும் நாட்டினை நாட்ட உதவுவதாகவும், உலகினை ஒன்று சேர்க்க உதவுவதாகவும், பேரறிவாளர் நெஞ்சில் பிறந்ததாகவும் பத்திரிகையின் பண்புகளை குறிப்பிடுகிறார்.

பாவேந்தர் பாரதிதாசன் இத்தனை சிறப்பிற்குரிய பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 5-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்றும், இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்” என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்கங்கள் நடைபெறும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர் இதில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும் என்றும், புகழ்பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும் என்றும், பள்ளிகளில் மாணவர்களிடையே தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும், தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும்.

இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் விழா தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும் என்றும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார் என்பது வரவேற்கத்தக்கது. எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், 1964 ஆண் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழை உயிராகவும், உடலாகவும், காதலாகவும், வீரமாகவும் கருதி தமிழின் பெருமைக்கு வளம் சேர்த்த பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்போம்.

 

கட்டுரையாளர்: பேராசிரியர் சீமான் இளையராஜா, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

உலக தரத்தில் உங்கள் சமையல் அறை - நேஷனல் மாடூலர் கிச்சன்...

Leave A Reply

Your email address will not be published.