பிரபல நிறுவன சம்பா ரவையில் பூச்சிக்கொல்லி … வைரலான வீடியோ … நீதிமன்றம் வைத்த குட்டு ! நடந்தது என்ன ? !
சில விநோதமான வழக்குகளையும் விசித்திரமான வழக்குகளையும் கண்டிருக்கிறோம். கடந்த பிப்-07 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக வந்த அந்த வழக்கு ’விவகாரமான’ வழக்கு என்றே சொல்லலாம்.
கோவை, தொப்பம்பட்டியைச் சேர்ந்த ரவிகாந்த் ரம்பால்சிங் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கு, பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் உள்நோக்கத்தோடு தொடுக்கப்பட்டிருப்பதாகக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார், நீதியரசர்.
அப்படி என்னதான், பஞ்சாயத்து? வழக்கை தொடுத்த ரவிகாந்த் என்பவர் கடந்த ஆண்டு தனது வீட்டு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் “மயில் மார்க் சம்பாரவை”யை வாங்கியதாகவும்; அதனை எடுத்துக் கொண்டு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று சமைத்து சாப்பிட்டதாகவும்; அதனை சாப்பிட்டதால் தனக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு திருநெல்வேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும்; அந்த ரவைதான் பிரச்சினை என்றும் அதில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் சொன்னதாகவும்;

அதனை உறுதிபடுத்த மீண்டும் கோவைக்கு கிளம்பி வந்து அங்கு ஒரு தனியார் ஆய்வகத்தில் அந்த ரவையின் மாதிரியை கொடுத்ததாகவும்; அதை அவர்கள் ஆய்வு செய்து அந்த ரவையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட க்ளோரிபைபாஸ் என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக சொன்னதாகவும்; இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் மயில்மார்க் நிறுவனம் பெரிய நிறுவனம் என்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்பதால், பொதுநலன் கருதி நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ரவிகாந்த்.
முழுமையான வீடியோ செய்தி
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மயில்மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்முருகனிடம் பேசினோம். அவர், “முதலில் ரவிகாந்த் என்பவர் யார் என்றே எங்களால் அறிய முடியவில்லை. அவருக்குப் பின்னால் யாரோ ஏதோ உள்நோக்கத்துடன் அவரை இயக்கி வருகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு வீடியோவை தயாரித்து சமூக வலைதளத்தில் பரவவிட்டிருக்கிறார். நேர்த்தியான முறையில் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அவதூறுக்கு எதிராக கோவை ஆணையர் மற்றும் சைபர் கிரைம் போலீசில் எங்கள் மயில்மார்க் நிறுவனம் சார்பில் புகார் கொடுத்தோம். போலீசு புகாரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியபோதுதான், நீதிமன்றத்தில் அவர் கொடுத்த முகவரியே போலி என்பது தெரிந்தது.
பின்னர், போலீசார் கடும் முயற்சி எடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் அவரை கண்டுபிடித்து சம்மன் கொடுத்தார்கள். அதன்பிறகும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது தரப்பில் சென்னையிலிருந்து பி.நெடுஞ்செழியன் என்ற வழக்கறிஞர்தான் ஆஜர் ஆனார்.
போலீசாரின் விசாரணையில், கோயம்புத்தூரில் இயங்கிவரும் இன்னொரு சம்பாரவை உற்பத்தி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றியவர் இந்த ரவிகாந்த் என்ற உண்மை வெளியாகியிருக்கிறது. அடுத்து, அவர்கள் சொல்லும் அந்த சூப்பர் மார்க்கெட்டில் ரமேஷ் என்ற வழக்கறிஞர் ஒருவர்தான் தனது கிரடிட் கார்டை பயன்படுத்தி அந்த சம்பா ரவையை வாங்கியிருக்கிறார்.
இங்கு வாங்கியவர், ஏன் திருநெல்வேலிக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட வேண்டும்? அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், மீண்டும் ஏன் இங்குள்ள ஆய்வகத்தில் ஏன் ஆய்வுக்கு கொடுக்க வேண்டும்? போலீசில் புகார் கொடுக்காமல், வீடியோ-வை ஏன் வெளியிட வேண்டும்? போலீசு விசாரணைக்கு ஆஜராகாமல் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?” என்பதாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். “இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர்களைப்போல தரம்தாழ்ந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே தவிர்க்கிறோம். நாங்கள் இந்த ஃபீல்டில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறோம். எங்களது தாத்தா வன்னியராஜன் 1960 இல் சிறிய அளவில் ஆரம்பித்த பிசினஸ் இது. இன்று மூன்றாம் தலைமுறையாக அவர்களது பேரப்பிள்ளைகள் நடத்திவருகிறோம்.
இன்று வரையில் கூட்டுக்குடும்பமாகவே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை நம்பி சாப்பிடுகிறார்கள். இது உணவுத்தொழில் என்பதால், சத்தியத்துக்கு கட்டுப்பட்டு செய்து வருகிறோம். நாங்கள் யாரையும் தொழில் போட்டியாக கருதியதில்லை. எங்களுக்கான வாடிக்கையாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். இது மோசமான முன்னுதாரணம்.
வாடிக்கையாளர்களை தங்கள் வசப்படுத்த, அவர்களை தங்களது பொருட்களை வாங்க வைக்க பல்வேறு நல்ல உத்திகளை கையாளலாம். இலவசத்தை கொடுக்கலாம். விளம்பரம் கொடுக்கலாம். கலர் கலராக கவர்களை மாற்றலாம். அல்லது விலையை குறைக்கலாம். இதையெல்லாம் செய்யாமல், இப்படி கீழ்த்தரமான முறையில் அவதூறு வீடியோக்களை வெளியிட்டும் பொய் வழக்குகளை போட்டும் எங்களது நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுத்து ஆதாயம் அடைய நினைப்பது முட்டாள்தனம்.” என்பதாக குறிப்பிடுகிறார், பொன்முருகன்.
எதிர்த்தரப்பின் கருத்தையறிய, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்தியவரும், கோவை போலீசில் ரவிகாந்துக்கு ஆதரவாக விசாரணையில் ஆஜரானவருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியனை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. வாட்சப் வழி அனுப்பிய தகவலுக்கும் பதிலளிக்கவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வாட்சப் வதந்திகளின் காலமாகிப்போன இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தள கணக்குகளை பலரும் பல்வேறு வகையிலான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் சூழலில், உணவு சம்பந்தபட்ட விவகாரத்தில் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தும் வகையில் பொய்யான தகவல்களோடு வீடியோ தயாரித்து வெளியிட்டிருப்பதோடு, பொய் வழக்கையும் தொடுத்திருக்கும் இந்த சம்பவம் மோசமான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
— ஆதிரன்.
இந்த வழக்கில் தொடக்கம் முதல் இறுதிவரையில் நடந்தது என்ன? 60 ஆண்டுகாலம் வெற்றிகரமாக தொழிலை நடத்தி வந்த பின்னணி என்ன? தங்களது தயாரிப்பின் தரம் எவ்வாறு உறுதிபடுத்தப்படுகிறது? இந்த வழக்கில், எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறார்கள்? யாரெல்லாம் துணை நின்றிருக்கிறார்கள்? அதனை எவ்வாறு கண்டறிந்தோம் என்பது குறித்து விரிவாகவே அங்குசத்துடன் பகிர்ந்திருக்கிறார், மயில்மார்க் பொன்முருகன். இந்த விவகாரம் தொடர்பான முழுமையான காணொளியை காண …
பிரபல நிறுவன சம்பா ரவையில் பூச்சிக்கொல்லி… வைரலான வீடியோ… நீதிமன்றம் வைத்த குட்டு ! நடந்தது