காகிதப்பை தினம்: தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திய டி.எஸ்.யூ. மாணவர்கள் 15.07.2026 காகிதப்பை தினத்தை முன்னிட்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம்(NSS) மாணவர்கள் இணைந்து, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப்பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் வளாகத்தூய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தின.
இந்நிகழ்ச்சியில் என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக் இல்லா வளாகத்தை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாணவர் நலன் புல முதல்வர் டாக்டர்ராஜு மற்றும் முதலாம் ஆண்டு இணை புல முதல்வர் டாக்டர்.லட்சுமி ஆகியோர் மாணவர்களின் பங்களிப்பை பாராட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, காகிதப்பைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.மேகநாதன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் டாக்டர்.பாலமுருகன், என்.சி.சி. அதிகாரி டாக்டர்.ஹென்றி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர்.ரமேஷ்குமார், டாக்டர்.ராஜகுமார், டாக்டர். லயோலாபால்ராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு மாணவர்களை ஊக்குவித்தனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.