போலீசை அடிக்கலாமா?
இதுதான் இப்போது பிரச்சனை என திருப்பப்பட்டு விட்டது. போலீஸ் அடிக்கலாமா? என கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல இடங்களில் வேறு பக்கம் திருப்பி விடப்படுகிறது. இந்தப் பையனின் நிலைமையும் இப்போது சட்டப்படியான பார்வையில் அவனது கோபம் குற்றப்படுத்தப்பட்டு விட்டது.
அவன் சாதிய பின்னணி கட்டுக்கடங்காத கோபம் ஆகியவற்றின் மீது சமூக வலைத்தள விசாரணைகளும் தொடங்கிவிட்டது.
ஆனால் இதுதான் இப்போதைய இளைஞன்! அவன் எல்லா இடங்களிலும் கோபப்படுத்தப்படுகிறான். அதற்கான சூழலைத் தணிக்காமல் அவனை எப்படி அடக்குவது என்பது எல்லா இடங்களிலும் தோற்றுப் போகிறது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு போலீஸ்காரர் வீட்டில் வளரும் பிள்ளை கூட இன்று இப்படித்தான் ஒரு அளவுக்கு மேலே போனால் அப்பனையே அடித்து விடுவான்!
இது தனிமனிதன் மூலமாக வெளிப்படும் ஒரு சமூக நிலைமை. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் இங்கே இடமில்லை. அவனுக்கு இவ்வளவு கோபம் தேவையா? போலீஸ் மேலயே கைய வைக்கலாமா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே போவதும் அதை போலீசின் கோபத்திற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும் என தீர்ப்பு எழுதுவதும் தான்! பொது உளவியலாக ஆக்கப்பட வேண்டும் என்பது மரபாக்கப்பட்டு விட்டது.
குறைந்தபட்ச பல பிரயோகம் என்கிறது போலீஸ் தரப்பு. ஒரு தனி மனிதனை மடக்கிப் பிடிப்பது என்பது கூட மூன்று போலீசால் முடியாத அளவுக்கு அவனுடைய ஆவேசம் இருக்கிறது.
அந்த இளைஞனின் கழுத்து எலும்பு முறிக்கப்படும் அளவுக்கு அமுக்கி அடக்குகிறது போலீசு.
பொது இடத்தில் இன்றைக்கு ஒரு தந்தை தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை அறைந்தால் கூட அவன் திருப்பி அடித்து விடுவான்!
இன்றைய இளைஞர்களின் உணர்ச்சி நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் யாராக இருந்தாலும் எனது அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்பது இந்த சம்பவத்தில் கேள்விக்குறியாகிவிட்டது.
அவன் இடைஞ்சல் செய்கிறான் என்பதை விட போலீசுக்கு வந்த ஆத்திரம் சொன்னதைக் கேட்கவில்லை என்பதுதான்.
(இந்த அதிகார மனநிலைதான் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றவாளிக்கு எதிராக போராடிய ஒரு நிகழ்வில் இளைஞர்கள் அமைப்பினர் மீது கூட அடித்து தூக்கி வேனில் ஏற்றுவதாக அமைகிறது. இவர்கள் என்ன போலீசை அறைந்தார்களா? இல்லையே! )
உண்மையில் இந்த கோபம் படக் காட்சி அடிப்படையில் அவனோடு மல்லுக்கு நின்ற மறியல் செய்த விசிக நபர்களின் மீது போலீசுக்கு வந்திருக்க வேண்டும். அந்த சம்பவத்தில் அவன் ஆவேசமாக ஏன் வழியை மறுக்கிறாய் என்று கேட்கிறான்.
அவனிடம் எந்தவித நியாயத்தையும் பேச தயார் இன்றி கும்பல் மனப்பான்மையில் கூட்டத்தில் மறியலில் இருக்கும் நபர் அவனை தெனாவட்டாக அணுகுவதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது.
இரண்டாவது இது மக்களுக்கான போராட்டம் பிரச்சனை அல்ல. ஒரு கட்சிப் பிரச்சனை கட் அவுட் பேனர் பிரச்சனை. அதை அகற்றியது மாநகராட்சியோ அல்லது போலீஸ் தான். இந்தப் பிரச்சனைக்கு சாலை மறியல் என்பதை போலீசையே எதிர்த்தா என்று ஏன் போலீசுக்கு கோபம் வரவில்லை!
மறியல் செய்த நபர்களில் ஒருவருடன் அந்த இளைஞன் வாக்குவாதம் முற்றிய நிலையில் போடா! வாடா! என வார்த்தைகள் தடித்து அவன் செல்ல வேண்டிய நிலையில் போலீஸ் போய் அவனுக்கு அறிவுரை சொல்வது என்ற பெயரில் சின்னப் பையன் தானே என அணுகியதிலும் பிரச்சனை தொடங்குகிறது.
உண்மையில் போலீசின் கோபம் மறியல் செய்த விசிக வின் மீது இருந்திருக்கும். அங்கே கோபத்தை காட்ட முடியாமல் சாலையின் ஒரு நபரின் ஆவேசப் போக்கில் இடம் மாறி விட்டது போலீசின் கோபம்.
போராடிய விசிக கட்சியினரின் கோபம் கூட பேனரை அகற்றிய மாநகராட்சி அலுவலகத்தையோ அதிகாரிகளையும் எதிர்த்து அங்கே போய் குவிந்து பணியிடத்தில் மறியல் செய்திருக்க வேண்டும்.
அங்கே கோபத்தை காட்டினால் என்ன விளைவுகள் வரும் என்று தெரிந்த கோபத்திற்கு, ரோட்டில் போகும் ஒரு இளைஞனின் கோபத்திற்கு மட்டும் பதிலுக்கு பதில் மல்லுக்கு நிற்கிறது.
பொதுமக்களிடம் தங்கள் பிரச்சனைக்கான நியாயத்தை பெற வேண்டிய அரசியல் நடவடிக்கையாக இல்லாமல் அடாவடியாக நடப்பதுதான் இதில் வெளிப்பட்டது. மக்களை மறித்து நியாயம் கேட்பதற்கான அடிப்படை இந்த பிரச்சனையில் இல்லை.
எப்படி போலீசும் போராடிய தரப்பும் தங்களது கோபத்தை காட்டுவதற்கு
ஒரு வழிப்போக்கனாக அந்த இளைஞன் வாய்த்து விட்டான். அவனுடைய மனப்போக்கு உட்பொருள் என்னவென்று நமக்கு இப்போதைக்கு தெரியாது.
தெரிந்த அளவில் கோபப்பட்ட இளைஞனை ஒரு வீட்டில் அணுகுவது போல பக்குவமாக அணுகி அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளையே போலீசும் போராடும் தரப்பும் செய்திருக்க வேண்டும்.
பொது இடத்தில் தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு இளைஞனை அறஞ்சிருவன் போடா! என்று ஆத்திரமூட்டி அறையும்போது பதிலுக்கு அறைவது அவனுடைய தன்மானப் பிரச்சனையாக ஆக்கப்பட்டு விடுகிறது. இதற்கு அடிகோலிய சூழல், நபர்கள் மீதும் நடவடிக்கை தேவை.
தவறே செய்து விட்டான்! என்ற வாதத்துக்காக அவனை பொது இடத்தில் அறைவதும் தாடை எலும்பு முறியும்படி அமுக்கி அடிப்பதும் கண்டனத்துக்கு உரியது.
எந்த வழக்குமின்றி தேவையான அறிவுரைகளை வழங்கி அந்த இளைஞனை விடுவிப்பதுதான் நிதானமான அணுகுமுறை. அவனது எதிர்வினையை மட்டும் கணக்கில் கொண்டு அவனையும் பாத்ரூமில் வழுக்கி விழுந்தவனாக ஆக்காமல் பத்திரமாக அனுப்பினால் நல்லது.
— தோழர். துரை.சண்முகம்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.