திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.

இதற்கான எதிர்வினை தான் தோழமைக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதென்பது. திமுக மீண்டுவரக்கூடாது. மக்கள் மத்தியில் விஜய் தடுமாறுவது போன்ற செய்தி போகக்கூடாது என்பது தான் திட்டம். இது ஒரு பெர்ஷப்சன் வார் (perception war). நிஜத்தை விட தோற்றங்கள் தான் சக்தி மிக்கவை. பங்கு சந்தை போல, யார் மேலே, யார் கீழே என்கிற விளையாட்டு காட்சிப்பொருளாக நடக்கிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இப்போதாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது, இங்கு நடப்பது நீங்கள் வாக்களித்தது போல, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. அது வெறும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கற்கள்.

இங்கு நடப்பது திராவிட மாடல் போன்ற ஆட்சியை திமுகவை அகற்றிவிட்டு, தவெக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்வது என்பதே. அதனால் தான் விஜய், எடப்பாடியைச் சந்திக்கவில்லை. ஆனால் அதிமுக பிரிவினரைச் சந்தித்தது, திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவே.

இதை யார் செய்கிறார்கள்?

கண்டிப்பாகத் திமுக எனும் கட்சியை எதற்கோத் தடையாகப் பார்க்கிற சக்திகள் தான் இந்த கண்ணுக்குத் தெரியாத காய் நகர்த்தலைச் செய்கின்றனர்.

கண்டிப்பாக இவர்களுக்கு திமுக குடும்ப ஆட்சி, பண்ணையார் கட்சி, சில ஜாதிகளே அந்தக் கட்சியை வழிநடத்துகின்றன என்பதல்ல பிரச்சனை.

திமுக எதையோ ஒன்றை அல்லது ஒரு தொகுப்பை உறுதியாகக் கடந்த ஐந்தாண்டுகளில் செய்திருக்கிறது. அது இந்த ஆளும் வர்க்கத்திற்கும், இந்தி, இந்து, இந்தியாவிற்கும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

இந்தச் சதியில் காங்கிரசும் உடந்தை என்பது, கேரளாவில் அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி நிரூபித்திருக்கிறது. ஏனெனில் திமுக அணியின் தோல்வியை சீட்டுப் பேரச் சிக்கல் மூலம் தொடங்கி வைத்தது காங்கிரஸ் தான். அவர்கள் தவெகவுடன் போகாமல் திமுக அணியை மூழ்கடித்தது வெளிப்படை.

சோஷியல் எஞ்சினியரிங் அரசியலை பாஜக பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் – பட்டியலின மக்கள் வெளியேற்றம், கவுண்டர்கள் – வன்னியர்கள் ஒருங்கிணைப்பு, சசிகலாவை சிறையிலடைத்தது, பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, அதிமுக அழிப்பு – என பல கட்டங்களில் செய்தது.

அதன் ஒரு அங்கமாக, தோழர் திருமா அவர்களை திமுக அணியிலிருந்து பிரித்தெடுக்க பல முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டு தான் இருந்தன. அந்த முயற்சியை எதிர்கொள்வதில் தோழர் கடும் நெருக்கடிக்கு உள்ளானார் என்பதை நாம் பார்த்தபடி தான் இருக்கிறோம்.

திமுகவுடன் உறவைத் தொடர்வதற்காக திருமா கடும் எதிர்ப்பை அவரது ஆகரவாளர்களிடம் இருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம். எட்டு சீட்டுகளைப் பெற்றதற்கே அவர் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் (ஆறிலிருந்து எட்டு என்பது வளர்ச்சி தான்; ஆனால் அது பெரும் குற்றமாகச் சித்தரிக்கப்பட்டது; அதற்கு முன்பு தான் நான்கு உறுப்பினர்களை முதன்முறையாகப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக தம்மை நிறுவியிருந்தது; அதற்கு திமுக கூட்டணி மிக முக்கியமான பங்கு வகித்திருந்தது). ஆளூர் ஷாநவாஸ் ஓரங்கட்டப்பட்டது இந்த அரசியலின் ஒரு பகுதி தான். திமுகவை நட்போடு விசிகவில் யாரும் பார்க்கக்கூடாது என்கிற வாதம் பரவத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஊடகங்கள் தோழர் திருமா அவர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டபடியே இருந்தனர். ஆட்சியில் பங்கு தருகிறாரே அவர், நீங்கள் ஏன் போகக்கூடாது? என்று அவர் தொடர்ந்து அழுத்தப்பட்டார். திமுகவுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக அவர் பூடகமாக மன்னிப்புக் கோரியபடியும் விளக்கம் கொடுத்துக்கொண்டும் இருந்தார்.

இப்போது, “தீயசக்தி” என்று நடிகர் விஜய்யால் அழைக்கப்பட்ட திமுகவின் ஆதரவால் வெற்றி பெற்ற கூட்டணிக்கட்சிகள் ஏறக்குறைய அனைவரும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததும், இப்போது விசிக மந்திரிசபையில் பங்கேற்பதும், இந்த “தொலைநோக்குப் பார்வையின்” ஒரு அங்கம் தான்.

திமுக இதனால் உற்சாகம் தான் அடையவேண்டும். அது தமது அரசியலை இன்னும் சுதந்தரமாக, துணிச்சலாக வெளிப்படுத்தலாம். திமுகவின் முக்கியத்துவத்தை, இந்த grand spectacle நமக்குக் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கிறது.

திமுக மீண்டும் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா கூட்டணிக்கே மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். அதை “அன்பர்கள்” உணர்ந்திருக்ககூடும்.

அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிரமாண்ட பொருளாதார வளர்ச்சி, கூடவே கடைபிடிக்கப்படும் சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல் ஆகியவை இந்திய மத்தியத்தர வகுப்பினரின் நன்மதிப்பைப் பெறத் தொடங்கியது பாஜக கட்டமைத்த ‘வளர்ச்சி வேண்டுமெனில் சங்கியாக இருப்பதே சரி’ என்ற வாதத்தை முறியடிப்பது தானே.

எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டுக்கு வெளியே பயணிக்கும் பல தமிழர்கள் கடந்த மூன்றாண்டுகளில் இதை உணரத் தொடங்கியிருந்தனர். “உங்களுக்கு என்னப்பா, ஸ்டாலின் இருக்காரு” என்கிற வார்த்தை பரவத் தொடங்கியிருந்தது. கேரளாவிலேயே பலர் என்னிடம் இப்படிச் சொல்லியிருக்கின்றனர் (வட இந்தியாவில் வாழ முடியாமல் தெற்கே குடிபெயர்ந்த மத்தியத்தர வர்க்கதினர் பலர் இருக்கின்றனர். கல்வி, வேலை, அமைதியான சூழல், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் இந்தப் புலம்பெயர்தலை ஊக்கப்படுத்தின).

அதை முறியடிக்கத் தான் கொளத்தூரிலேயே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்.

பாஜகவின் பெருத்த, சந்தேகத்துக்குரிய மெளனம் தான் இதற்கு சாட்சி!

பின்குறிப்பு :

மாயாவதி போல, திருமா அவர்கள் தனித்த அரசியல் செய்யவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களின் நீண்ட நாள் அவா நிறைவேறுவது மகிழ்ச்சி.

திருச்சி கிழக்கில் தவெக அணி சார்பாக திருமா போட்டி போட்டால், திமுக அவரை ஆதரிக்கவேண்டியக் கட்டாயத்திற்கு ஆளாவார்கள். எதிர்த்துப் போட்டியிட்டால், திருமா மந்திரியாவதைத் தடுத்த பழியைச் சுமக்க நேரிடும்.

அதனால் திமுக மேலும் தனித்து விடப்படும்.

நான் முன்பே சொன்னது போல, அது கட்சிக்கு மிகவும் நல்லது. நிறைய மறுசீரமைப்பு செய்வதற்கும், புதிய ஆட்களைக் கொணர்வதற்கும், இன்னும் கூர்மையாக வேலை செய்வதற்கும், பழைய தடைகளைக் களைவதற்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

தோழர் திருமாவுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

அமுதன் ஆர்.பி.
ஆவணப்பட இயக்குனர்
சென்னை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.