‘கோழிப் பண்ணை செல்லத்துரை’ ஃபேமிலி ஆடியன்ஸுக்கு க்யாரண்டி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘கோழிப் பண்ணை செல்லத்துரை’ ஃபேமிலி ஆடியன்ஸுக்கு க்யாரண்டி!

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் படம் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வரும் *20-*ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌

தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 11– ஆம் தேதி இரவு பிரம்மாண்டமாக நடந்தது .படக் குழுவினருடன் ‘ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கோழிப்பண்ணை செல்லத்துரை
கோழிப்பண்ணை செல்லத்துரை

இதில்…தயாரிப்பாளர் மேத்யூ,

“எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, யோகி பாபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் பணியாற்றிய தருணத்திலிருந்து இதுவரை படத்திற்காக யோகி பாபு வழங்கி வரும் ஆதரவு மிகப்பெரியது.யோகி பாபு நடித்தது படத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்தது.

எங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், ‘ஜோ’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைந்திருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலனுக்கும் நன்றி. இந்தத் திரைப்படத்தையும் வெற்றிப்படமாக ஆக்கித் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திரைப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் அனைவரும் தங்களின் கடுமையான உழைப்பை வழங்கி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி.‌

இந்தப்படத்தில் மிகப்பெரிய செய்தியும் இருக்கிறது. இன்று தம்பியாக என்னை என் அண்ணன் ஏகன் பெருமைப் படுத்தி விட்டார்.இதுவும் எனக்கு பெருமிதமாக இருக்கிறது. 20ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் நிறைய பேர் ஏகனை அண்ணனாக கொண்டாடுவார்கள்,” என்றார்.

கோழிப்பண்ணை செல்லத்துரை
கோழிப்பண்ணை செல்லத்துரை

யோகி பாபு பேசும் போது, “முதலில் தயாரிப்பாளர் அருளானந்து அவர்களுக்கு நன்றி. என்னுடைய பிறந்த நாளின் போது என்னை சந்தித்து ‘நல்லதொரு கதை. நடித்துக் கொடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியுடன் நிறைய நேரம் பேசி இருக்கிறேன். அவருடன் பேசும் போது இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசி இருக்கிறேன். அவரும் சரியான தருணம் அமையட்டும் என சொன்னார். இந்த திரைப்படத்தில் நல்லதொரு வேடம் இருக்கிறது, வாருங்கள் என அழைத்தார். ஒரு ஜிப்பாவும் வேஷ்டியும் வந்தது. அவரிடம் வேடிக்கையாக இதை யார் போட்டு கொண்டிருந்தது என கேட்டேன். அவரும் வி. கே. ராமசாமி என்றார்.

இந்தப் படத்தில் ஏகன் சொன்னது போல் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். படங்களில் நான் லோக்கலாக ‘கவுன்ட்டர்’ அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை ‘கவுன்ட்டர்’ அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி.

அதன் பிறகு தம்பி ஏகன்- படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது காட்சி நிறைவடைந்தவுடன், ‘நான் நன்றாக நடித்தேனா..!’ என என்னிடம் கேட்பார். அவரிடம், ‘நானே சரியாக நடித்தேனா.. இல்லையா..! என தெரியாது. சும்மா இருப்பா’ என்றேன். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலிருந்து நானும் விஜய் சேதுபதியும் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்தப் பயணம் தற்போது வரை இனிமையாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசும் போது, ”சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது.

தயாரிப்பாளர் மேத்யூ. 21 வயது தான் ஆகிறது. ஆனால் மேடையில் தெளிவாக பேசுகிறார். நான் மேடையில் பேசுவதற்கு இன்றும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக அவருடைய தந்தையான தயாரிப்பாளர் அருளானந்திற்கு நன்றி.

ஏகன் பார்ப்பதற்கு லட்சணமாகவும் நம் மண்ணின் மைந்தனாகவும் இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையில் அழகாக இருக்கிறார்கள். படத்தின் கதையும் அழகாக இருக்கிறது.

சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது… எத்தனை முறை இந்த தேனியில் அவர் படம் எடுத்தாலும், அவர் நூறு படம் எடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் தேனியை வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பார். புதிதாக காண்பது போல் இருக்கும். அதுதான் அவருடைய பலம்.

கோழிப்பண்ணை செல்லத்துரை
கோழிப்பண்ணை செல்லத்துரை

கதை சொல்லும் போதும் அதை படமாக்கும் போதும் எந்த தருணத்திலும் அவர் சிறிது யோசித்தோ அல்லது தடுமாறியோ நான் பார்த்ததே இல்லை. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்தால் அதனை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்து படத்தின் தரத்தை குறைக்காமல் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் படத்தை நிறைவு செய்ய முடியுமோ, அதனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் சீனு ராமசாமி. இதுவரை அவரது இயக்கத்தில் நான் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலிருந்து ‘மாமனிதன்’ வரை அவருடன் இணைந்து பணியாற்றும் போது எங்களுக்கான பட்ஜெட் அதிகமாக கிடைத்தாலும் படத்திற்கு என்ன தேவையோ அதை பொறுப்புணர்ந்து செயல்படுபவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி போன்ற ஒரு இயக்குநர் மூலம் ஏகன் அறிமுகமாவதற்கு ஏகன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப்படத்தை விநியோகிக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கு நன்றி. ஒரு திரைப்படத்தை சக்திவேலன் பார்த்து நன்றாக இருக்கிறது என ரசித்தால் அந்த திரைப்படத்தை தமிழக மக்களும் ரசிக்கிறார்கள். ‘கில்லி’ திரைப்படத்தை மறு வெளியீடு செய்து வெற்றி பெற செய்தவர் நீங்கள். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் நீங்கள் தான் கில்லி. உங்களுடைய சக்தி இந்த படத்திற்காக மொத்தமாக இறங்கட்டும்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

கோழிப்பண்ணை செல்லத்துரை
கோழிப்பண்ணை செல்லத்துரை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

“சீனு ராமசாமியை பற்றி இயக்குநர் பாலா குறிப்பிட்டு பேசும் போது, ”சீனு உணர்வுபூர்வமான விஷயத்தை நேர்த்தியாக ரசிகர்களுக்கு கடத்துவதில் வல்லவன்” எனக் குறிப்பிடுவார். அதேபோல் இயக்குநர் சீனு ராமசாமி மிகவும் உணர்வுபூர்வமான மனிதர். சிறிய விஷயம் என்றாலும் அதில் தன்னுடைய பார்வையை உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொட்டித் தீர்த்து விடுவார்.

இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.‌” என்றார்.

இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் பேசும் போது, “இயக்குநர் சீனு ராமசாமி என் குருநாதர். ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடி முழக்கம்’, ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ என நான்காவது முறையாக அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவருடைய படத்தில் இசையமைக்கும் போது நிறைய நேரமும், சுதந்திரமும் அளிப்பார். அவர் எப்போதும் ஒவ்வொரு பாட்டையும் உருவாக்கும் போது.. அந்தப் பாடல் ஆகச் சிறந்த பாடலாக வரவேண்டும். அதற்காக நன்றாக நேரமெடுத்துக் கொண்டு சிந்தித்து மெட்டுகளை உருவாக்கு என்பார். அதனால்தான் அவர் படத்தில் இடம் பிடித்த பாட்டுகள் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் ஐந்து பாடலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பாக பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.” என்றார்

நாயகி பிரிகிடா, ”நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் கதாநாயகியாக நடித்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’வெளியாகிறது. இந்தப்படத்தில் என்னை செந்தாமரைச் செல்வியாக வாழச் செய்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகனும் நானும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்கள். அவர் பணியாற்றிய பிளாக் ஷீப் குடும்பத்திலிருந்து தான் நானும் வருகை தந்திருக்கிறேன்.‌ அவருக்கும் எனக்குமான புரிதல் ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வருகை தந்தது ஒரு குடும்பமாக என்னை உணர வைக்கிறது.

இந்தப்படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் அருளானந்து பேசுகையில், ”மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. இந்தத் திரைப்படம் ஒரு இயற்கை. அதாவது இந்தப் படத்தில் அனைத்தும் இயற்கையாகவே அமைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சீனு ராமசாமியை எனக்குத் தெரியாது. இயக்குநர் ஒருவர் மூலமாக அவர் எனக்கு அறிமுகமாகிறார். அதன் பிறகு நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது ஐந்து நிமிடத்திற்குள் ஒரு கதையின் சிறிய பகுதியை மட்டும் விவரித்தார். அதன் பிறகு கதையை முழுவதுமாக விவரித்தார். அந்தக் கதையை நான், ஏகனின் நண்பர்கள் என ஒரு குழுவாக கேட்டோம்.

நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக திரைத்துறையில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஏகன் அவருடைய ஆறாவது வயதில் இருந்தே சினிமாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். பாண்டியன் மாஸ்டர், கலா மாஸ்டர், ஜெயந்தி மாஸ்டர் என ஒவ்வொருவரிடமும் சினிமாவுக்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொண்டிருந்தான். இதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டில் பிளாக் ஷீப் யூடியூப் சேனலை தொடங்கினோம். இது ஏகனுக்காக தொடங்கப்பட்டது. சினிமாவுக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொண்டே இருந்தார்.

இந்தத் திரைப்படம் குடும்பமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

இந்தத் திரைப்படத்திற்காக இயக்குநர் சீனு ராமசாமி கடுமையாக உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.‌

அறிமுக ஹீரோ ஏகன் பேசும் போது, ”விஜய் சேதுபதி வருகை தந்து என்னைப் பற்றி இங்கு குறிப்பிட்ட வார்த்தைகள் எனக்கான சுமையை அதிகரித்து விட்டது என நினைக்கிறேன். அவர் தனக்கான பொறுப்புணர்வை என்னிடம் திருப்பி விட்டு சென்றுவிட்டார். அதனால் அவர் என்னிடம் கொடுத்த பொறுப்பை நேர்த்தியாக செய்து அவரது பெயரை காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்காக இங்கு வருகை தந்தமைக்கும், வாழ்த்தியதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப்படத்தை விநியோகஸ்தர் சக்திவேலன் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை எனக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.

மிகவும் உணர்வுபூர்வமான படைப்பு. இந்தப்படத்தை பார்க்கும் போது ஏதாவது ஒரு கதாபாத்திரம் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும்.

நான் பிளாக் ஷீப் எனும் யூட்யூப் சேனல் மூலமாகத்தான் சினிமாவை கற்கத் தொடங்கினேன். அதன் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் ‘கனா காணும் காலங்கள்’ இணைய தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு ‘ஜோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தேன்.‌ தற்போது சீனு ராமசாமி எனும் பல்கலைக்கழகத்திலிருந்து கோழிப்பண்ணை செல்லதுரையாக அறிமுகமாகிறேன். மேலும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

கோழிப்பண்ணை செல்லத்துரை
கோழிப்பண்ணை செல்லத்துரை

இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது
“நான் இயக்குநராக இருந்தாலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை. ஆனாலும் நான் இதுவரை தயாரிப்பாளர் அருளானந்து போன்றதொரு தந்தையை சந்தித்ததில்லை. அவரை ஒப்பிட்டுப் பேசுவதற்கு உதாரணத்திற்கு கூட காவியத்தில் எனக்குத் தெரிந்த அளவில் யாரும் இல்லை. நான் இதை மிகையாக கூறவில்லை. காவியத்தில் கூட இவ்வளவு பாசத்துடன் ஒரு தந்தை இருப்பாரா..! என்பது சந்தேகம்தான். மிகவும் அன்புடனும், தெளிவான திட்டமிடலுடனும் ஒரு செயலை முன் நகர்த்திச் செல்லும் ஒரு தந்தையை நான் இதுவரை சந்திக்கவே இல்லை. இந்தப் படத்திற்காக முதலில் என்னை அழைத்தது அவர் தான். இயக்குநர் ஒருவர் மூலமாக அவர் என்னை அழைத்தார். முதலில் தொலைபேசி மூலமாகவே பேசத் தொடங்கினோம். அப்போது அவர் என் மகனை நாயகனாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்பதற்காக நான் ஒரு படத்தினை இயக்க முடியாது. என் கதைக்கு அவர் பொருத்தமானவரா, தகுதியானவரா என பரிசோதனை செய்த பிறகு ,அவர் சரியானவர் தான், பொருத்தமானவர் தான் என உறுதிப்படுத்திக் கொண்டு தான் படத்தை இயக்க ஒப்புக் கொள்வேன் என்றேன். ஏனெனில் என்னிடம் இருக்கும் ஒரே அஸ்திரம் அது ஒன்றுதான். என்னுடைய கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.

கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தின் தயாரிப்பாளர் ஹீரோவின் அப்பா என்பதற்காக இந்த படத்தை உருவாக்கவில்லை. ஏகன் ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமானவர். அத்துடன் நடனம், உடற்பயிற்சி, நடிப்பு என அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தார். அவரின் திறமையை உணர்த்தும் பல காணொளிகளை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் அவர் ஒரு சினிமா வெறியன், சினிமா காதலன், சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாணவன் என்பதை அறிந்து அவரை ஆடிஷனுக்காக வரவழைத்தேன். ஆனால் ஏகனை நான் ஆடிஷன் செய்யவில்லை. அவரை வரும்போது கவனித்தேன். உட்காரும்போதும் கவனித்தேன். பேசும் போதும் அவனுடைய கண்களை கவனித்தேன். அவ்வளவுதான். அவனை அனுப்பி வைத்து விட்டேன். இந்த இளைஞன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.‌

கோழிப்பண்ணை செல்லத்துரை
கோழிப்பண்ணை செல்லத்துரை

சிறந்த நடிப்பு என்றால் என்ன? நான் நடிப்பை சொல்லி கொடுக்கும் ஆசிரியர் அல்ல. நடிப்பை வாங்கும் ஆசிரியர். இசைஞானி இளையராஜா மிகச்சிறந்த இசைக் கலைஞர்களை தேர்வு செய்கிறார். அவர்களிடமிருந்து சிறந்த முறையில் ராகங்களை வாசிக்க செய்து அதனைப் பெற்றுக் கொள்கிறார். அதைப்போல் ஏகன் என்னிடம் வரும்போது ஒரு நடிகருக்கான முழு தகுதியுடன் வருகை தந்த ஒரு இளைஞன்.

என்னுடைய பங்களிப்பு என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தை பதற வைக்க மாட்டேன். எப்போதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவேன். எனக்குள் பதற்றம் இருந்தாலும் அதனை நடிகர்களிடம் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டேன்.‌ படப்பிடிப்பு முழுவதும் ஏகனை ஒருபோதும் ஏசியதில்லை. அவரை மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் யாரையும் நான் திட்டியதில்லை.

நீங்கள் கயிறுகளை ஆட்டிக் கொண்டிருந்தால் பறவைகள் ஒருபோதும் அமராது. அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் போது அவர்களின் இயல்புணர்ச்சி வெளிப்படும். அந்த இயல்புணர்ச்சியை தூண்ட வேண்டும். என்னுடைய வேலையே நடிகர்களிடம் இருக்கும் இயல்புணர்ச்சியை தூண்டுவது தான். அதற்காகத்தான் நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை அமைதியாக வைத்திருப்பேன். அதனால் தான் நான் யாரையும் அறிமுகப்படுத்தினேன் என ஒருபோதும் நினைப்பதில்லை. ஏகனுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவருடைய தந்தை என்றாலும் ஏகன் நன்றாக வளர வேண்டும் என அவருடைய தாயாரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.‌

மேலும் இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறது. வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது, இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை அரவணைத்து காக்கும்.

இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு என்னுடைய நன்றி.‌

மேலும் இந்த திரைப்படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு வழங்கிய இலவச பேருந்து பயண சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் பலன்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது. ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்,” என்றார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.