தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய அரசின் பட்ஜெட் ! பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் !
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்டானது அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையிலும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு எந்த வித சலுகைகளும் இல்லாமல் குறிப்பாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து திருச்சியில் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

பிப்-06 அன்று திருச்சி தில்லைநகர் 7 வது கிராஸில் உள்ள ஒன்றிய அரசின் பாஸ்போர்ட் கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த நகல் எரிப்புப் போராட்டத்தில், ம.க.இ.க மாவட்டச் செயலாளர் ஜீவா, ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, பு.ஜ.தொ.மு மாவட்ட மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆனந்த், செந்தில், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சிவா, மாவட்டச் செயலாளர் மணலிதாஸ், முன்னாள் தலைவர் செல்வராஜ், மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் கார்க்கி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் விடுதலை முரசு, ரெட் பிளாக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் A.C.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர்.
போராட்டத்தின்போது, போலீசார் உடனடியாக பட்ஜெட் நகலை பிடுங்கியதால் தனித்தனியாக சென்று நகலை கொளுத்தி முழக்கமிட்டதால், சிறிது நேரம் பரபரப்பானது.
— அங்குசம் செய்திப்பிரிவு.