ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?
திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் திருச்சிராப்பள்ளியிலிருந்து – தஞ்சாவூர் வரையிலான இடைப்பட்ட வழித்தடத்தில் பொன்மலை, மஞ்சத்திடல், திருவெறும்பூர், தொண்டைமான்பட்டி, சோளகம்பட்டி, அய்யனாபுரம், பூதலூர், ஆலக்குடி ஆகிய எட்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதிகள் கூட கிடையாது. மேலும், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன. பல நேரங்களில், பயணிகளின் உடலில் உரசி சிராய்ப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. திருவெறும்பூர், தொண்டைமான்பட்டி, சோளகம்பட்டி போன்ற ரயில் நிலையங்களில் இதே நிலைதான். குறிப்பாக, திருச்சிராப்பள்ளியில் எட்டாவது பிளாட்பாரம் அருகில் அதிக அளவில் முள்செடிகள் படர்ந்திருக்கின்றன.
இதுபோன்ற இடையூறுகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்காகவே, இரயில்வேயில் தனி துறையே இயங்கி வருகிறது. இவற்றை கண்காணிக்க உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தும், பயணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கருவேல முள்செடிகளை கண்டும் காணாமல் இருக்கிறார்களா? இல்லை ரயில்வே துறையே முள்செடிகளை வளர்த்து வருகிறதா? என்றே கேள்வி எழுப்புகிறார்கள் இரயில் பயணிகள்.
— தஞ்சை க.நடராசன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.