பெரியார் குரலாக வருகிறது சமுத்திரக்கனியின் ‘வீரவணக்கம்’
இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி & நடிகர் பரத் முதல் முறையாக இணையும் படம் ‘வீர வணக்கம்’. மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில் சமுத்திரக்கனி, பரத், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா உட்பட பலர் நடித்துள்ளனர்.
பிரபல புரட்சிப் பாடகியும் கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறும் பெரியாரின் வாழ்க்கை தத்துவங்களும் இணைந்த இந்த புரட்சி ப்படம் ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் புதிய திரை அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.
அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக்பஸ்டர் படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்ற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் வீரவணக்கம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சமுத்திரகனியையும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும் மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகன் கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் தான் ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ . சமுத்திரக்கனி இதில் பி. கிருஷ்ணபிள்ளையாக நடித்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது. ஜாதிக் கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் நில கிராமத்தின் விடியல் பயணம் தான் ‘வீரவணக்கம்’. படத்திற்கு
எம் .கே. அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திர நாத்,ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பது தனிச்சிறப்பு . ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடகராக வீர வணக்கத்தில் புரட்சிப் பாடலை பாடியுள்ளார்.
விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே எதிர்பார்ப்பு எழத் துவங்கியுள்ளது.
— மதுரை மாறன்.