பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் !
பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார்.
திருச்சி தில்லை நகரில் கி.ஆ.பெ விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வரும் இப்பள்ளியில், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
தற்போது வெளியாகியிருக்கும் +2 பொதுத்தேர்வில், 561 மதிப்பெண்களுடன் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருக்கிறார், ஹரிஹரன். தமிழில் 88; ஆங்கிலத்தில் 93; பொருளியல்-91; வணிகவில்-95; அக்கவுண்டன்சி-97; பிசினஸ் காமர்ஸ்-97 ஆகிய மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்த ராஜேந்திரன் – சந்திரா தம்பதியினரின் இளைய மகன் ஹரிஹரன், ஒரு கண் பார்வையை முற்றிலும் இழந்த பார்வை மாற்றுத்திறனாளி. சரிசெய்ய முடியாத நிரந்தர ஊனமாக மருத்துவர்கள் அறிவித்துவிட்ட நிலையிலும், தளராத மனதுடன் படிப்பில் கவனம் செலுத்தி இந்த இலக்கை எட்டியிருக்கிறார், ஹரிஹரன்.
தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர். தாயார் சந்திரா இல்லத்தரசி. அண்ணன் ஸ்ரீராமன் கல்லூரி கல்வி பயின்று வருகிறார். இத்தகைய நடுத்தர குடும்ப பின்னணியுடன் அதுவும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் சேர்ந்து படிக்காமல், வழக்கமான பள்ளியிலேயே பயின்று இந்த மதிப்பெண்களை பெற்றிருக்கிறார், ஹரிஹரன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவரது முயற்சிக்கு உறுதுணையாக, பக்கபலமாக அப்பள்ளியின் ஆசிரியர்களும் தலைமையாசிரியரும் உடன் இருந்து ஊக்கமளித்தததாக குறிப்பிடுகிறார், தந்தை ராஜேந்திரன்.
இதுபோன்று, பல்வேறு வகைகளில் சவால்களை எதிர்கொண்டு கல்வியில் சாதிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களது எதிர்கால கல்வி கனவுகள் கை கூட அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு !
அங்குசம் சார்பில் நாமும் ஹரிஹரனை வாழ்த்துவோம் !
— அங்குசம் செய்திப்பிரிவு.