செல்வாக்கும் சொல்வாக்கும் !
16.02.1971. தமிழகமெங்கும் தேர்தல்களம் போர்களமாக காட்சியளித்தது. அதற்கு மேலும் அக்னியாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது தமிழகம். காரணம் சேலத்தில் தி.க.வினரின் இராமாயண எதிர்ப்பு போராட்டம். இந்த நிலையில் தலைவர்கள் அனைவரும் களத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தவர்கள், பெரியார்.ஈ.வெ.ரா. அவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் இருந்தார். மேற்கண்ட தேதியில் திண்டுக்கல்லில் பிரச்சாரம் முடித்து பயணியர் மாளிகையில் தங்கியிருந்தார்.
அன்று பெரியார் அவர்களை, பேராசிரியரும் மூத்த தமிழ் அறிஞருமான டாக்டர். சி.இலக்குவனார் அவர்களுடன் பெரியார் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பை காலம் எனக்கு தந்தது.

முதலில், இலக்குவனார் பெரியாரிடம் பேசத்தொடங்கினார். அய்யா, “தாங்கள் எனக்கு சிபாரிசு செய்தும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துனை வேந்தர் பதவி எனக்கு கிடைக்கவில்லையே” – என்று வருத்ததுடன் சொன்னார்.
பெரியார் பலமாக தலையை அசைத்து, ‘ஆமாங்க ஐயா வீரமணி எல்லாம் என்னிடம் சொன்னார். A.Lசீனிவாசன் சிபாரிசுலே டாக்டர்.மு.வ.அவர்களை நியமித்திருக்கிறார்கள் என்று கூறி அவரும் தனது வருத்ததை தெரிவித்தார்கள். பொறுங்கள் தாங்களை வேறு சமுதாயப்பணிக்கு அழைப்பேன் என்று கூறி அப்பிரச்சனையை முடித்தார்கள்.
இலக்குவனார் ஐயா திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழாசிரியராய் இருந்து தமிழ் உணர்வை ஊட்டியவர். பின் மதுரை தியாகராஜர் கல்லூரியில், தமிழ்துறையில் தலைவராக இருந்து, 1965 இந்து எதிர்ப்பு போராட்டத்தின் போது எழுந்த போராட்டத்திற்கு முன்னிலை வகித்ததால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். ‘குறள்நெறி’ என்னும் பத்திரிகை மூலம் தொடர்ந்து தமிழ் தொண்டாற்றி, ஏராளமான இலக்கிய வரலாற்று – நூல்களை உருவாக்கியவர் ஆவார்.

அடுத்து, என்னை அம்சவல்லி கோபால் ஐயா என்னை பெரியாரிடத்தில் அறிமுகப்படுத்தினார். மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு என்ன சந்தேகமோ, என்னிடம் கேளுங்கள், என்று பரிவோடு பெரியார் கூறினார்.
அய்யா அவர்களிடத்தில், ஒரு வேண்டுகோளை வைத்தேன். அய்யா இராமயணத்தில் எழுத்து வடிவில் உள்ளதை, அய்யா ஓவியமாக்கி காண்பித்திருக்கிறீர்கள். பத்திரிகையாளரும் உங்கள் எதிர்ப்பாளர்களும் ஆபாச ஊர்வலம் என்று சொல்லி விமர்ச்சிக்கிறார்கள். அய்யா, அவர்கள் ‘ஆபாசம்’ என்பது எழுத்து வடிவமாக இருந்தாலென்ன”, அல்லது “ஓவியமாக இருந்தாலென்ன இரண்டும் ஆபாசம் தானே. தாங்கள் ஓவியமாக்கி ஊர்வலம் போனதற்கு, மூலகாரணமே எழுத்து வடிவிலுள்ள இராமாயாண நூல்கள் தானே! எனவே உங்களுக்கு தார்மீக ரீதியாக வெற்றி மட்டுமல்ல. அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள் என்று, விளக்கி கூறினேன்.

பெரியார் அவர்கள், எனது கரங்களை பற்றிக்கொண்டு, அதுதானே சொல்கிறேன். நீங்கள் புரிந்துவிடீர்கள் என்று கூறி தன் பையில் இருந்த “சௌராஷ்ராமணி”- என்னும் பத்திரிகையை தன் பையில் இருந்து – எடுத்து. அதன் தலையங்கத்தை படித்து காண்பித்தார். நீங்கள் தற்போது என்ன கூறினீர்களோ அதையை இந்த பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது என்று, என்னை அரவனைத்தார். எப்பவும் என்னை சந்திக்கலாம் என்று பெரியாரின் ஆசிர்வாதத்தோடு கிளம்பினோம்.
வரும் வழியில் இலக்குவனார் அய்யா அவர்கள் பெரியார் சொல்லியும் கலைஞர் கேட்கவில்லை அதிர்ச்சியளிக்கிறது என்று ஆதங்கத்தை சொல்லி வருந்தினார்கள். வர்த்தக நோக்கமில்லா ஒரு மாபெரும் தமிழ் அறிஞர்க்கு அப்பதவி கிடைக்காதது ஒரு வரலாற்றுபிழை. தமிழால் தன் வாழ்க்கையை வளமாக்காதவர் தமிழுக்கு அரசுகளையே எதிர்த்தவர், பதவி இழந்தவர்.
பதவி வேண்டுமெனில் சொல்வாக்கு வேண்டாம், செல்வாக்கு வேண்டுமென்பது புதுமொழியாய் தமிழகத்தில் உலா வருகிறது. இதில் இவர் என்ன விதி விலக்கா?
பி.அருணாசலம், பொதுப்பணித்துறை, (ஓய்வு).






Comments are closed, but trackbacks and pingbacks are open.