மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம் ! உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து! வீடியோ
மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம் ! – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து! “மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம்” என்பதாக, சவுக்கு சங்கரைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வீடியோ லிங்
தமிழக காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டு ஒட்டுமொத்த பெண் காவலர்களையுமே இழிவுபடுத்தும் வகையில் அவதூறாகப் பேசியதற்காக கடந்த மே-4 அன்று கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர். சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையிலும், பயணித்த காரிலும் கஞ்சா கைப்பற்றிய விவகாரம் தொடங்கி; திருச்சியை சேர்ந்த பெண் டி.எஸ்.பி. யாஸ்மின் அளித்த புகார் உள்ளிட்டு அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவாகின. இந்நிலையில், யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், மே-12 ஆம் தேதியன்று அப்போதைய சென்னை மாநகர காவல் அணையர் சந்தீப் ராய் ரத்தோர், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆணை பிறப்பித்தார்.
அவதூறுப் பேச்சுக்காக பதியப்பட்ட வழக்குகளோடு, கஞ்சா வழக்கும்; குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழான கைது நடவடிக்கையும் சேர்ந்து கொண்டதால், எப்படியும் ஒரு வருடத்திற்கு சிறையைவிட்டு சவுக்கு சங்கர் வெளியே வரமுடியாது என்ற சூழல் உருவானது.
அரசின் ஊழல்களை முறைகேடுகளை துணிச்சலோடு அம்பலப்படுத்தி வந்ததாலேயே, அரசு பழிவாங்கும் நோக்கில் சவுக்கு சங்கரை அடுத்தடுத்து வழக்குகளில் சிக்க வைத்து வருவதாகவும் சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் உருட்ட ஆரம்பித்தனர்.
இந்த பின்னணியில்தான், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையை, வழக்கமான மனுக்களைப் போல் வரிசைக்கிரமம் அல்லாமல் முன்னுரிமை அளித்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதே முதலில் சர்ச்சையானது.
குறிப்பாக, தமிழக அரசின் விளக்கத்தை அளிப்பதற்கான போதிய அவகாசம்கூட வழங்காமல் வழக்கின் இறுதி விசாரணை ”நாளை நடைபெறும்” என்பதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசரம் அவசரமாக அறிவித்ததும் சர்ச்சையானது. அரசு தரப்பு விளக்கத்தை அளிக்க போதுமான அவகாசம் அளிக்காமல், அவசரப்பட்டு இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் முடிவுக்கு ஒத்துப்போகாமல், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார் அமர்வில் பங்கேற்ற மற்றொரு நீதிபதியான பி.பி.பாலாஜி.
இந்நிலையில், மூன்றாவது நீதிபதியாக விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கி வேறொரு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வுக்கு மாறியது. அவர்களும், “ வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி, உரிய வரிசைப்படியே இந்த வழக்கு விசாரிக்கப்படும்.” என்பதாக அறிவித்தனர்.
சவுக்கு சங்கர் தரப்பில் உடல்நிலையை சுட்டிக்காட்டி, மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்திருந்தனர். அதன்மீது, தமிழக அரசு 8 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதாக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
எப்படியாவது சவுக்கு சங்கரை உடனடியாக வெளியே கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காகவும்; மிக முக்கியமாக குண்டர் சட்டத்தின் கீழான நடவடிக்கையை ரத்து செய்து வைத்து விட வேண்டும் என்பதற்காகவும் தொடுத்த வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற சாத்தியமில்லை என்ற சூழலில், உச்சநீதிமன்றத்தை நாடினர்.
உச்சநீதிமன்றத்திலும், முதலில் எம்.எம். சுந்தரேஷ், அரவிந்த்குமார் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “நான் இடம்பெறாத வேறொரு அமர்வில் வழக்கை மாற்றிவிடுங்கள்.” என்ற கோரிக்கையோடு, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் வழக்கின் விசாரணையிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
இந்தப்பின்னணியில் இருந்துதான், நீதிபதிகள் சுதன்சு துலியா, அஹ்சானுதீன் ஆகியோர் அமர்வுக்கு இந்த வழக்கு மாறியது. இந்த அமர்வில் இன்று (ஜூன்-15) நடைபெற்ற விசாரணையில்தான் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, “மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம். தன்னுடை எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லா விதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்துகொண்டுள்ளார்.
ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நடந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை . அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக்கொண்டே இருக்க என்ன காரணம், அவரை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்கள். உயர்நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. ” என்பதாக தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும், தமிழக அரசிடமும் “சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கும் அளவிற்கு அவர் சமூகத்திற்கு ஆபத்தானவரா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றனர்.
நிறைவாக, சவுக்கு மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிய அவரது தாயார் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 18-ந் தேதி ஒத்தி வைத்திருக்கிறது.
தமிழக அரசு பழிவாங்கும் விதமாகவே, சவுக்கு சங்கர் விவகாரத்தை கையாண்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் விமர்சித்துவரும் நிலையில், சவுக்கு சங்கர் குறித்தான உச்சநீதிமன்றத்தின் கருத்து பரபரப்பை கூட்டியிருக்கிறது.
– ஆதிரன்.
வீடியோ லிங்
உங்கள் கருத்துக்கு நன்றி சார்..