டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் ‘சக்கர வியூகம்’

0

டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் ‘சக்கர வியூகம்’

கடந்த 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்பிகளுக்கு மேல் உள்ள கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2013ஆம் ஆண்டு திமுகவுக்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது. இங்குத் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின. மொத்தம் 8 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அலுவலகத்தைத் திறந்து வைத்துக் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். டெல்லியில் திமுகவுக்கு என்று ஒரு அலுவலகம் அமைந்திருப்பது வரலாற்றில் பெருமை கொள்ளவேண்டிய செய்திதான்.

2 dhanalakshmi joseph

அதிமுகவுக்கும் இதுபோல் ஒரு இடம் வழங்கப்பட்டுக் கட்டிட வேலைகள் ஜெயலலிதா இறப்புக்குப் பின் தொய்வடைந்த நிலையில் உள்ளது. அதன் திறப்பு விழாவும் விரைவில் நடைபெறும் என்று தளவாய்சுந்தரம் கூறியுள் ளார். டெல்லியில் அலுவலகம் அமைக்கும் பணியில் திமுக முந்திக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.

- Advertisement -

- Advertisement -

அலுவலகம் திறக்கப்படும் இரண்டு நாளுக்கு முன்னதாகவே மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரைச் சந்தித்துத் தமிழகத்தின் தேவைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் எடுத்துரைத்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். டெல்லியில் உள்ள பள்ளிகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் பார்வையிட்டார். எதிர்க்கட்சிகளின் இணைப்பில் ஆம் ஆத்மி இடம்பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

திமுக அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சி யானது மாலை 5 மணிக்குத் தொடங்கி 6.30 மணிக்கு நிறைவடையும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மாலை 6.00 மணிக்கே விழா நிறைவடைந்தது. டெல்லியில் அலுவலகத் திறப்பு விழாவை நடத்திய மு.க.ஸ்டாலின் அதோடு 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்கான ‘சக்கர வியூகத்தையும்’ வகுத்தார்.

4 bismi svs

‘சக்கர வியூகம்’ என்பது போரில் எதிரியை வெல்ல, எல்லாத் திசைகளிலும் ஆட்களை நிறுத்தி, எதிரி எந்தத் திசையில் சென்றாலும் தாக்குதலை நடத்தி அழிப்பதுதான். பாஜக வடமாநிலங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துவிடுகின்றது. தென்மாநிலங்களில் கர்நாடகம் தவிர்த்துப் பாஜகவுக்குச் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி கிடைக்காததைப் பற்றி பாஜக கவலை கொள்வதில்லை. எனவே, ஸ்டாலின் வடமாநிலங்களில் பாஜகவைத் தோற்கடிக்கச் சக்கர வியூகத்தை அமைத்துள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திமுக அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி  தலைவர் சோனியா காந்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதா ராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் ராம்கோபால் யாதவ், பிஜு ஜனதா தளக் கட்சியின் அமர் பட்நாயக், தெலுங்கு தேசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரகுமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிரோன்மணி அகாலி தளக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்பார்த்தது போலவே பாஜ தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தங்கள் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்தனர். கர்நாடக மாநிலம் குமாரசாமி, ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி, சிவசேனா, சரத்பவார் கட்சியின் சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். வடகிழக்கு மாநிலத்திலிருந்தும் அங்குள்ள மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளும், பீகாரின் நிதிஷ்குமார் கட்சியின் சார்பிலும் யாரும் கலந்துகொள்ளவில்லை.

ஸ்டாலினின் சக்கர வியூகத்தில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, குமாரசாமி கட்சியோடு உடன்பாடு கொள்வது, ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியோடும், தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் கட்சியோடும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது, கேரளாவில் காங்கிரஸ் இடது கம்யூனிஸ்ட்டு கட்சியோடு இணைந்து போட்டியிடுவது, மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடு இடதுசாரி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது,  மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், ஜார்க்கண்ட், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தோடு போட்டியிடுவது. உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியோடு இணைந்து போட்டியிடு வது. மராட்டிய மாநிலத்தில் தற்போது உள்ளவாறு சிவசேனா, சரத்பவார் கட்சிகளோடு இணைந்து காங்கிரஸ் போட்டியிடுவது, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஆம்ஆத்மியோடு காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலைமைக்கு ஏற்ப பாஜக எதிர்ப்பு வியூகத்தை அமைத்துக் கொள்வது என்பதுதான் ஸ்டாலின் தற்போதைய முடிவாக உள்ளது.  ஸ்டாலினின் பாஜக தீவிர எதிர்ப்பைத் தொடர்ந்துதான் ஆளுநர் ரவியை வைத்துத் திமுக அரசுக்குப் பாஜக நெருக்கடியைத் தருகிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாஜக எதிர்ப்பு என்பது வெறும் சடங்காக இருக்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும்போது கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றால் 5 ஆண்டுகளுக்கான குறைந்தபட்சச் செயல்திட்டத்தையும் ஸ்டாலின் அமைக்கவுள்ளார் என்ற செய்தியும் உள்ளது.  பார்ப்போம்.. ஸ்டாலின் அமைத்துள்ள சக்கர வியூகம் வெல்லுமா..?

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.