’திருட்டுத்தனமாக’ நடத்தப்படும் கோடை கால சிறப்பு வகுப்புகள் ! ஐபெட்டோ அண்ணாமலை கடும் கண்டனம் !
தமிழகத்தில் தொடக்கக்கல்வி முதல் மேநிலைக்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமான முறையில் கோடை சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு எதிரான சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார், மூத்த ஆசிரியர் இயக்கவாதியும் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளருமான வா.அண்ணாமலை. இந்த விவகாரம் தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மாணவர்களின் கோடைகால பயிற்சியினை உடன் தடுத்து நிறுத்திட பெரிதும் வேண்டுகிறோம்! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடர்ந்து அரசின் அறிவுரைகளையும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்முறை கடிதத்தையும் கண்டு கொள்ளாமல் மாணவர்களின் உடல்நலம், உள்ள நலன் பற்றி கவலைப்படாமல் கோடைகால பயிற்சி சிறப்பு பயிற்சி என்ற பெயரால் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் ஒன்றியத்திற்கு 50 மாணவர்களை தேர்வு செய்து காலை 9. 00 மணி முதல் 1.00 மணி வரை ஒன்றியத் தலைநகரங்களில் நடத்துவதற்கு விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நேர்முக அறிவுரை வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அக்கினி நட்சத்திரம், கொளுத்தும் வெயிலில் மாணவர்களை அழைத்துச் சென்று வீடு சேர்க்கும் வரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் செய்தியாளர்களின் பேட்டிக்கு பிறகு தொடக்கக்கல்வி மாணவர்கள் மட்டும் பயிற்சி கைவிடப்பட்டது. நல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் அக்னி நட்சத்திர வெயிலில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி அளிக்க முன் வரலாமா?
பயிற்சியினை நிறுத்தாவிட்டால், செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பதுடன், பெற்றோர்கள் எதிர்ப்புணர்வினையும் ஒன்று சேர்ப்போம்! என்பதை கனிவான அக்கறையுடன் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், காமராஜர்புரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக, அம்மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார். இதுபோன்று சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்திக்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித்துறையின் சிறப்பு அனுமதி ஏதேனும் பெற்றிருக்கிறார்களா? என்பதையறிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரையும் தொடர்பு கொண்டோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நமது அழைப்பை ஏற்கவில்லை. வாட்சப் வழி அனுப்பிய தகவலுக்கும் இதுவரை பதிலில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை உரிய அறிவுறுத்தல்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக அமைந்திருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.